search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sridevi Angala Parameshwari Amman Temple"

    • திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.
    • அம்மன் கண்களில் வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 21 நாட்களுக்கு முன்பு வருஷாபிஷேக விழா நடந்தது. அதன்பின்னர் தினமும் காலையில் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவில் பூசாரியான தர்மராஜ், கோவில் நடையை திறந்து பூஜை செய்தார். அப்போது அம்மன் கண்களில் இருந்து வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது. அதை அங்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து வியந்துள்ளனர். இந்த தகவல் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் காட்டுத்தீ போல் பரவியது.

    உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்து வியப்புடன் பார்த்து வணங்கி சென்றனர். சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்து அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நடை மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டது.

     இந்த அதிசய நிகழ்வு குறித்து கோவில் பூசாரி தர்மராஜ் கூறியதாவது:-

    தினமும் காலை 9 மணிக்கு கோவில் நடையை திறந்து பூஜை செய்வேன். அதன்படி நேற்றும் காலையில் வந்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் உள்ளிட்டவற்றை செய்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அம்மனே வந்து நேரடியாக என்னை சந்தித்தது போல் உணர்ந்தேன். அம்மன் கண்ணை திறந்து என்னை பார்த்தது போல் இருந்தது.

    அம்மனுடைய இடது கண் மனிதர்களின் கண் போல் 2 புறமும் வெள்ளையாகவும், நடுவில் கருவிழியும் இருப்பது போல் இருந்தது.

    என்னை பார்த்து அம்பாள் கேள்வி கேட்பது போல் உணர்ந்தேன். அந்த நேரம் தரிசனம் செய்ய வந்த ஒருவர் வந்தார். அவரை அம்மனை பார்க்க சொன்னேன். உடனே அம்மனை பார்த்த அந்த பக்தர், வலது கண் மனித கண் போல் காட்சியளிப்பதாக தெரிவித்தார். இது உண்மைதானா என்பது குறித்து சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தில் இருந்த அனைவரையும் அழைத்து காண்பித்தேன்.

    என்னுடைய 50-வது வயதில் நான் தற்போது பூஜை செய்து வருகிறேன். வீடுகளில், கோவில்களில் பூஜை செய்துள்ளேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு அதிசய நிகழ்வை கண்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×