என் மலர்
திருநெல்வேலி
- இந்தியா வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது.
- 37 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறோம்.
'ஈஷா மண் காப்போம்' இயக்கம் சார்பில் 'வாழ வைக்கும் வாழை' எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ICAR-NRCB இயக்குனர் செல்வராஜன், "சத்குரு உலகமெங்கும் பயணித்து, மண் காப்போம், மண் நமது உயிர் என ஐ.நா அமைப்புகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் மண் வளம் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்" என பாராட்டினார்.
இத்திருவிழாவின் நோக்கம் குறித்து மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா பேசுகையில், "திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக இருக்கிறது. பல விவசாயிகள் வாழை விவசாயம் என்பது வாழை சாகுபடியோடு நின்று விடுவதாக நினைக்கிறார்கள்.
ஆனால் வாழையில் அதன் அனைத்து பாகங்களையும் மதிப்பு கூட்ட முடியும். இவ்வாறு மதிப்பு கூட்டுவதன் மூலம் சிறு விவசாயிகள் கூட தொழில் முனைவோர்கள் ஆக முடியும். எனவே அது குறித்த உத்திகளை, தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது" என பேசினார்.
இவ்விழாவில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செல்வராஜன் பேசுகையில், "ஈஷாவால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். இது போன்ற விவசாயிகளை ஒருங்கிணைத்து பயிற்சி கருத்தரங்குகளை நடத்துவதற்கு ஈஷாவிற்கு நன்றி.
இந்தியா வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது. நாம் 10 லட்சம் ஹெக்டேர் வாழை சாகுபடி செய்து 37 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறோம். ஆனால் 3 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம்.
மேலும் ஒரு ஏக்கர் பூவன் வாழை தண்டிலிருந்து 20,000 லிட்டர் ஜூஸ் எடுக்கலாம். 200 மில்லி ஜூஸை ரூ.25 விற்கிறோம். 20,000 லிட்டரில் 25 லட்சம் வரை வருமானம் எடுக்க முடியும் இது 6 மாதம் வரை கெட்டுப்போகாது.
மேலும் சிறுநீரக கல்லை குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது. இது போல வாழை பூ, வாழை காய் என அனைத்தையும் மதிப்பு கூட்டலாம்" எனப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய முன்னோடி விவசாயி திருமதி. சியாமளா குணசேகரன், 'எந்தவொரு தொழில் செய்பவரும் தான் உற்பத்தி செய்வதை குறைந்த விலைக்கு விற்பதில்லை.
ஆனால் விவாசயிகள் மட்டுமே தங்கள் கண் முன்பே தங்கள் உற்பத்தியை குறைந்த விலைக்கு விற்கும் சூழல் உள்ளது. இதிலிருந்து வெளி வர வேண்டும் என நினைத்தேன்.
வாழை சார் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தொடங்கினேன். நம் தோட்டத்தில் பணம் கொட்டிக் கிடக்கிறது. பண்ணையில் கிடைக்கும் அருகம்புல் எடுத்து ஜூஸ் போட்டு கொடுத்தால் காசு, குப்பை மேனியை சோப் செய்து கொடுத்தால் காசு, ஒரு காலத்தில் என் தோட்டத்தில் தேங்காய் மரங்களை வெறும் ரூ.5000-த்திற்கு குத்தகை கொடுத்தேன். ஆனால் இப்போது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்து ஒரு கிலோ சோப் செய்கிறோம் அதை ரூ.800-க்கு கொடுக்கிறோம்.' எனப் பேசினார்.

மேலும் வாழை சார் தொழில் முனைவோர்களான எஸ்.கே. பாபு, ராஜா, அஜிதன், ஜமின் பிரபு மற்றும் முன்னோடி விவசாயி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இவர்களோடு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளான கற்பகம், சுரேஷ்குமார், ஜெயபாஸ்கரன் மற்றும் ஜி. பிரபு ஆகியோர் பங்கேற்று தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சேவைகள், அரசு திட்டங்கள், வாழை ரகங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புகூட்டப்பட்ட பொருட்களுக்கு வாழை சார் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை குறித்து பேசினர்.
இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகளாக வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட 50-க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் மற்றும் வாழை நாரால் ஆன 150-க்கும் மேற்பட்ட கைவினை பொருட்கள் விற்பனைக்கும் கண்காட்சிக்கும் வைக்கப்பட்டன.
மேலும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட சிறுதானிய திண்பண்டங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டது.

வாழை விவசாயிகளுக்கும் வாழை சார் தொழில் முனைவோர்களுக்கும் 'சிறந்த வாழை விவசாயி' விருதுகள் வழங்கப்பட்டன.
'ஈஷா மண் காப்போம்' இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
இவ்வியக்கம் மூலம் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681-20682) சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.
17 பெட்டிகளுடன் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வந்த நிலையில் அதில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் இணைக்க தென்னக ரெயில்வே உத்தரவு வழங்கி உள்ளது.
வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30-ந்தேதி வரை இந்த கூடுதல் பெட்டிகளுடன் ரெயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது. இதனால் கூடுதலாக 500 பேர் வரை பயணம் செய்ய முடியும். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- போலீசாரின் புலன் விசாரணை வளையத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
- 2 பேரும் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் அந்த தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 2 நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
மேலும் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் அதன் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் குமார் தலைமையில் விசாரணையை தொடங்கினர்.
மேலப்பாளையம் போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் புலன் விசாரணை வளையத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களில் ஒருவரை போலீசார் நேற்று முன்தினம் கண்டு பிடித்தனர். அவர் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ரசின் என்பது தெரியவந்து. அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது மேலப்பா ளையம் ஆசிரான் மேலத் தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி(29) என்பது தெரியவந்தது. அவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, அவர்களிடம் பெட்ரோல் குண்டுகளை வீசியது குறித்து விசாரித்தபோது அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதால் அதற்கு ஏதாவது ஒன்று செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறு ஈடுபட்டதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த வாலிபர் இவர்கள் 2 பேரின் கூட்டாளி என்பதும், அவரும் மேலப்பாளையத்தில் தான் பதுங்கி இருக்கிறார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- கள ஆய்வு கூட்டம் நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
- சில நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
நெல்லை:
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அ.தி.மு.க. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு கூட்டம் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள ஆய்வு கூட்டம் நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு கள ஆய்வு கூட்டத்தை நடத்தினர். இதில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளான எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் பிரிவு, சிறுபான்மை நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவரணி, தகவல் தொழில்நுட்பப்பிரிவு மற்றும் பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பல்வேறு வியூகங்கள் குறித்து நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது ஒரு நிர்வாகி பேசும்பொது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் நெல்லை மாநகர தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்றதாகவும், வாக்காளர் சேர்த்தல், திருத்த முகாம் நடைபெறும்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் இடம் பெறவில்லை எனவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பேசினார்.

கள ஆய்வு கூட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்டவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்த காட்சி
இதனைக்கேட்ட மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். சில நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதனைப்பார்த்த எஸ்.பி. வேலுமணி, தகராறு செய்பவர்களுக்கும், கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை. தவறு செய்தவர்கள் குறித்து கட்சி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும். எனவே அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கூறினார்.
தொடர்ந்து முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பனும் நிர்வாகிகளை அமைதிப்படுத்தினார்.
- மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 73 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 76 அடியை கடந்துள்ளது.
- தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் இன்று 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
நெல்லையில் ஒரு வாரத்துக்கும் மேலாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 73 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 76 அடியை கடந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 1,782 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 88 அடியை கடந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 2130 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லி மீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று அந்த அணையில் 82.68 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 9 அடி உயர்ந்து 91.38 அடியை எட்டியுள்ளது.
இதனிடையே தாமிரபரணி ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு இல்லை என்றாலும் பரவலாக பெய்து வரும் மழையால் சுமார் 2100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழையும் தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆறு மற்றும் ஏரிகள், குளங்கள், ஓடைகளில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும் அதனை கண்டுகொள்ளாமல் நெல்லை மாநகரப் பகுதியில் குறுக்குத்துறை வண்ணாரப்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறைகளில் பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குளித்து வருகின்றனர்.
மாநகர் பகுதியில் நேற்று மாலையில் தொடங்கி இரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இன்று காலை முதல் டவுன் சந்திப்பு, வண்ணார்பேட்டை, மேலப்பாளையம், கேடிசி நகர், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் பலதரப்பட்டவர்களும் மிகுந்த அவதி அடைந்தனர். அவர்கள் குடை பிடித்தபடி சாலையில் சென்றனர். மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையில் இருந்தே பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிசான பருவ நெல் சாகுபடி பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் இன்று 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. களக்காடு தலையணையிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அங்கும் தடை நீடிக்கிறது. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று விட்டுவிட்டு சில இடங்களில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து பரவலாக சாரல் மழை அடித்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அணைப்பகுதிகளை பொறுத்தவரை 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 57.50 அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 65 அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கருப்பாநதி அணை நீர்மட்டம் 47.57 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 56.25 அடியாகவும் உள்ளது. கடனாநதி அணைப்பகுதியில் 51 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராம நதிகள் 16 மில்லி மீட்டர், குண்டாறு பகுதியில் 18 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
- ஜார்கண்ட், மகாராஷ்டிரா, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
- வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம். எல்.ஏ. இன்று நெல்லை வந்தார். அவர் வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் இன்று நெல்லைக்கு வருகை தந்துள்ளோம். நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்து முடித்துவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளோம்.
கன்னியாகுமரியில் இருந்து வரும்போது நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அங்கு தொழில் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாங்குநேரி தொழில் பூங்கா பல்வேறு வழக்குகள் காரணமாக முடங்கிப் போய் கிடக்கிறது.
இதில் தற்போது ஒரு வழக்கு முடிக்கப்பட்டு 590 ஏக்கர் இடம் மீட்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மற்ற வழக்குகளையும் முடித்து சுமார் 1800 ஏக்கர் இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் நாங்குநேரி சுற்றுவட்டாரத்திலும், நெல்லை மாவட்டத்திலும் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போது அங்கு ஐ.எஸ்.ஆர்.ஓ. சார்பில் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான இடத்தை தேடி வருகிறார்கள்.
ஜார்கண்ட், மகாராஷ்டிரா, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொழில்நுட்ப விசாரணையில் இறங்கி உள்ளனர்.
அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் ராம ஜெயம் கொலை வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் திணறி வருவது போலவே கே.பி.கே. ஜெயக்குமார் வழக்கும் சவாலான ஒன்றாக இருக்கிறது. விரைவில் இந்த வழக்குக்கு தீர்வு கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற விசாரணையில் 2, 3 நபர்களை சந்தேகப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். விரைவில் ஜெயக்குமார் வழக்கில் முடிவு கிடைக்கும்.
இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது. எக்கு கோட்டையாக எங்களது கூட்டணி இருக்கிறது. கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் சிலர் தங்களது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் சில கருத்துக்களை எதிர்மறையாக தெரிவிக்கலாம்.
கூட்டணி என்பது சமுத்திரம் போன்றது. அதில் அலைகள் இருக்கத்தான் செய்யும். எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறது. இன்னும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் வந்து சேரும்.
தமிழக வெற்றிக்கழகம் என்பது நடிகர் விஜய் கட்சி. கட்சி கூட்டணி குறித்து அவர் முடிவு செய்து கொள்வார். எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
மழை காரணமாக ஓரிரு இடங்களில் மட்டும் இன்று ஆய்வு செய்ய உள்ளோம். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி. துரை, பாளை வட்டார தலைவர் டியூக் துரைராஜ், துணை வட்டார தலைவர் ஜேம்ஸ் பீட்டர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- மழை பெய்து வரும் நிலையில், தொடர்ந்து நீடிக்கும் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்ததால் பள்ளிளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழைக் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
- போலீசார் நெல்லையில் முகாமிட்டு இன்று 3-வது நாளாக விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.
இந்த தியேட்டரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தியபோது, அதில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். மேலும் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
மதுரையில் இருந்து அந்த பிரிவின் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் நெல்லையில் முகாமிட்டு இன்று 3-வது நாளாக விசாரித்து வருகின்றனர்.
சுமார் 60-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி சந்தேகப்படும்படியாக இருந்த 3 நபர்களை மேலப்பாளையம் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவருக்கு இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது என போலீசார் உறுதிபடுத்தி உள்ள நிலையில், அந்த நபரை கைது செய்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
அந்த நபர் அளிக்கும் தகவலின் அடிப்படையில், வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 2 பேர் யார்-யார்? என்பது தெரியவரும் எனவும், இன்றைக்குள் அவர்கள் போலீசில் பிடிபடுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தியேட்டர் வளாகத்திற்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
- மேலப்பாளையம் பகுதியில் உள்ள தெருக்கள் வழியாக தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. இந்த தியேட்டரில் நேற்று முன்தினம் இரவு காட்சி முடிந்த பின்னர் ரசிகர்கள் வெளியேறிவிட்டனர். தியேட்டர் ஊழியர்கள் அங்கு பணியில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் 2 பேர் தியேட்டர் வளாகத்திற்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து மேலப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சி.சி.டி.வி. காட்சி மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. நேற்று தியேட்டர் அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை தவிர சந்தை முக்கு ரவுண்டானா, குறிச்சி முக்கு செல்லும் மெயின் ரோட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களையும் தனிப்படையினர் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் அந்த நபர்கள் சென்ற காட்சிகள் இல்லை. அதேநேரம் பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் ஒரு வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த நிலையில், ஒருவர் மோட்டார் சைக்கிளை தயார் நிலையில் வைத்துக் கொண்டு நின்றுள்ளார். மற்ற 2 பேரும் பெட்ரோல் குண்டுகளை தியேட்டரில் வீசிவிட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த கும்பல் மெயின்ரோட்டின் வழியாக தப்பித்து சென்றால் சி.சி.டி.வி. கேமராக்களில் சிக்கி கொள்வோம் என்பதை அறிந்தே மேலப்பாளையம் பகுதியில் உள்ள தெருக்கள் வழியாக தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேற்று இரவு வரை சுமார் 25-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து முடித்துள்ளனர். மெயின் சாலைகளில் அந்த கும்பல் வரவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் இன்று அந்த பகுதியில் உள்ள தெருக்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். ஏற்கனவே அமரன் திரைப்படம் வெளியானபோது அலங்கார் தியேட்டரிலும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் நேற்று நெல்லை வந்து முகாமிட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பிரிவின் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் இன்று 2-வது நாளாக தீவிரவாத அமைப்புகள் ஏதேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
- கூடிய விரைவில் மேலும் 10 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட உள்ளன.
- மிகப்பெரிய நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் இந்த தேர்வுகள் நடைபெறும்.
நெல்லை:
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை இன்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிகள், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் 'பிங்க் சோன்' எனப்படும் 5 தனி ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
நெல்லையில் சுமார் ரூ. 72 கோடி மதிப்பீட்டில் 450 படுக்கை வசதிகள், 10 ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டும் பணிகள் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற நல்வாழ்வு மையம் என்ற 22 புதிய மருத்துவமனைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் மற்றும் உதவியாளர் என 4 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் முதலமைச்சரால் 12 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மேலும் 10 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,353 மருத்துவ பணியிடங்கள் மற்றும் 2026-ம் ஆண்டு வரை தேவைப்படும் மருத்துவர்கள் பணியிடங்கள் என 2,553 காலி பணியிடங்களுக்கு 24 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அதற்கான தேர்வுகள் வருகிற ஜனவரி 27-ந்தேதி நடைபெற உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் இந்த தேர்வுகள் நடைபெறும்.
மேலும் கிராமப்புற செவிலியர் பணியிடங்கள் 2,250 நிரப்பப்படும். இது சம்பந்தமாக 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு.
- நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது.
இதைதொடர்ந்து, நெல்லை மேலப்பாளையத்தில் 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படையும், உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகரில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
- தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு 1,504 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,375 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை நீர்மட்டம் 84.25 அடி நீர் இருப்பு உள்ளது. இன்று காலை நிலவரப்படி அந்த அணை பகுதியில் 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மற்றொரு பிரதான அணையான 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு நேற்று காலை வரை குறைவான நீர்வரத்து இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1,375 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 67 அடியை எட்டியுள்ளது. அங்கு 30.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 82.47 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 17 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகுதியில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கன்னடியன் கால்வாய் பகுதியில் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாநகரில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
தொடர்ந்து காலையில் சாரல் மழை பரவலாக பெய்தது. அதன்பின்னர் வெயில் அடிப்பதும், மழை சாரலாக பெய்வதுமாக இருந்து வந்தது. பாளையில் 11.4 மில்லிமீட்டரும், நெல்லையில் 7.4 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தை பொறுத்தவரை பரவலாக கனமழை பெய்தது.
குறிப்பாக அம்பை, நாங்குநேரி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. களக்காட்டில் 15 மில்லி மீடடரும், அம்பையில் 26 மில்லிமீட்டரும், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டியில் தலா 16 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தென்காசியில் 7 மில்லிமீட்டரும், செங்கோட்டையில் 9 மில்லி மீட்டரும், ஆய்குடி யில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கடனா அணை பகுதியில் 23 மில்லிமீட்டரும், ராமநதியில் 15 மில்லிமீட்டரும், குண்டாறில் 12 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து புனித நீராடியதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்தது. இன்று காலையில் சில இடங்களில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் வெயிலும் அடித்தது. திருச்செந்தூரில் 39 மில்லிமீட்டரும், ஒட்டப்பிடாரம், காயல்பட்டினத்தில் தலா 36 மில்லிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.






