என் மலர்
திருச்சிராப்பள்ளி
- கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது.
- சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இவை தவிர உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ விமானம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 15-ந் தேதி இலங்கை தலை நகர் கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் விமானத்தில் நுழைந்த போது கழிவறையில் கேட்பாரற்று பை கிடந்தது. இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானத்தில் உள்பகுதிக்கு வந்த சுங்கத்துறை அதிகாரிகள் கழிவறையில் கிடந்த பையை கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது அந்த பையினுள் ரூ.79 லட்சம் மதிப்பிலான 985 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதனை விமானத்தில் விட்டு சென்றவர்கள் யார்? அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விட்டு சென்றனரா? என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதில் நேற்று ஒரே நாளில் 985 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்த போது அவர் தனது உடமையில் மறைத்து வெளி நாட்டிற்கு கடத்த இருந்த ரூபாய் 435 வெளிநாட்டு பணங்கள் அதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 3,72,000 மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகள் 30000 என மொத்தம் 4,02,000 மதிப்பிளான இந்திய மற்றும் வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது மேலும் அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
- 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராம்ஜிநகர்:
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவில் காளைகளும், உள்ளூரைச் சேர்ந்த காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, சிவகங்கை, கரூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 800 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், பீரோ, குக்கர், கிரைண்டர், மிக்ஸி, கட்டில், சீலிங் பேன் போன்ற பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தாசில்தார் தமிழ்ச்செல்வன், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் உள்பட அரசு அலுவலர்கள் மேற்பார்வை நடத்தினர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
விலங்கு நல வாரிய பார்வையாளர் மருத்துவர் மூக்கன், திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கணபதி மாறன், ஸ்ரீரங்கம் உதவி இயக்குனர் கணபதி பிரசாத், மருத்துவர்கள் இன்பச் செல்வி, அன்பரசி, சத்யா, அர்ஜுன், சௌந்தர்யா, வனிதா மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை உதவியாளர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்து வாடி வாசலுக்கு அனுப்பி வைத்தனர்.
உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அ.தி.மு.க. மணிகண்டம் தெற்கு இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் பாகனூர் மணிகண்டன், அளுந்தூர் கிராம பட்டயாதார் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் மங்கதேவன்பட்டி கணேஷ் கருப்பையா, பேராசிரியர் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி, ஜல்லிக்கட்டு பேரவை துணைத் தலைவர் பி.கே. பழனிசாமி மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- புதர் மண்டி கிடந்ததால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட யாரும் அறியவில்லை.
- சித்தர்கள் தவம் இருக்கும் இடமாக இருப்பதால் இங்கு சத்தமின்றி அமைதியுடன் வணங்கி செல்கிறோம்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறியில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் குழந்தைப்பேறு, தொழிலில் அபிவிருத்தி அளிக்கும் பரிகார தலமாக திகழ்கிறது.
தனது சாபம் நீங்குவதற்காக சந்திரன் சிவபெருமானை வழிபட்டது, மிருக சீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது போன்ற பல்வேறு சிறப்புகளை இந்த கோவில் கொண்டுள்ளது. இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் இங்கு சமீபத்தில் அதிசய தீர்த்தக்கிணறு வெளிப்பட்டு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது. கோவிலின் தென்மூலை பகுதி பல ஆண்டுகாலமாக புதர் மண்டி காணப்பட்டது. அந்த பகுதி பெரியவர்கள் யாரும் அங்கு சென்றதில்லை. கோவிலின் ஒரு பக்கச்சுவர் மட்டும் அதில் தென்பட்டிருந்தது. பல ஆண்டுகளாகவே சிறு குழந்தைகள் கூட அந்த பகுதிக்கு செல்ல பயப்படுவார்களாம்.
புதர் மண்டி கிடந்ததால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட யாரும் அறியவில்லை. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் திருப்பணி வேலைகளுக்காக அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அப்போது அந்த புதருக்குள் அதிசய தீர்த்தக்கிணறு இருப்பதை கண்டு அப்பகுதியினர் அதிசயித்தனர். தீர்த்த கிணறின் மேல்பக்க சுவரின் 4 முனிவர்கள் காவல் காப்பது போன்ற சிற்பம் காணப்பட்டது.
இந்த சூழலில் அங்கு நின்ற பக்தர் ஒருவர் மூலமாக அருள்வாக்கு வந்தது. அந்த அதிசய தீர்த்த குளத்தின் உள்ளே சுமார் 400 அடி ஆழத்தில் முசுகுந்த முனிவர் எனும் சித்தரும், 200 அடி ஆழத்தில் அவரது சீடர் நாதமுனி சித்தரும் தவம் இருப்பதாகவும், அவர்களது தவத்திற்கு சீடர்கள் 4 முனிவர்கள் காவலாக இருப்பதாகவும் அருள்வாக்கு வெளிப்பட்டது. இதை கேட்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து போயினர்.
இது தொடர்பாக பக்தர்கள் சிலர் கூறியதாவது:-
இந்த கோவில் அருகே ஏற்கனவே ஒரு கிணறு உள்ளது. தற்போது புதிதாக துலங்கி உள்ள இந்த கிணற்றில் சித்தர்கள் தவம் இருப்பது குறித்து அருள்வாக்காக கிடைத்த தகவல் அதிசயிக்கத்தக்கதாகும். இந்த கிணறு வெளிப்பட்ட பின்னர் கோவில் திருப்பணிகள் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன.
மேலும் இங்குள்ள இறைவன் சந்திரமவுலீஸ்வரருக்கு தற்போது இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் பின்பக்கம் சித்தர் ஐக்கியமான சித்தர் பீடம் அமைந்திருப்பது இன்னும் சிறப்பக இருக்கிறது.
இந்த அதிசய தீர்த்த கிணற்றில் சித்தர்கள் வாசம் செய்வதால் இந்த கிணற்றை வணங்கி வருகிறோம். சித்தர்கள் தவம் இருக்கும் இடமாக இருப்பதால் இங்கு சத்தமின்றி அமைதியுடன் வணங்கி செல்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கோவில் அர்ச்சகர் பரமேஸ்வர குருக்கள் கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்தவரை இந்த இடத்தில் இப்படியொரு அதிசய தீர்த்த கிணற்றை நான் பார்த்ததில்லை. இப்போது இந்த கிணறு வெளிப்பட்ட பின்னர் ஆச்சரியப்படும் அளவுக்கு பல்வேறு விசயங்கள் நடக்கின்றன. இதை சந்திரபுஷ்கரணை தீர்த்தம் என்று அழைக்கிறோம். தற்போது திருப்பணி வேலைகள் நடப்பதால் இந்த கிணற்றை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளது என்றார்.
முசிறி நகரம் 10-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னன் முசுகுந்தனால் ஆளப்பட்டது. இந்த நகரின் ஆரம்பகால பெயர் "முசுகுந்தபுரி". இதுவே மருவி பின்னர் முசிறி என்று ஆனது. முசுகுந்த மன்னனே சித்தராகி கோவில் தீர்த்த கிணற்றில் ஐக்கியம் ஆகி தவத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது.
இதனிடையே புதிதாக துலங்கி உள்ள அதிசய தீர்த்த கிணற்றை பக்தர்கள் பக்தியுடன் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர். முசிறி மட்டுமின்றி அக்கம் பக்கத்து கிராமத்தினர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலரும் கோவிலுக்கு வர தொடங்கி உள்ளனர்.
- ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.
- ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
மணப்பாறை:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையின் போது தொடங்கி தொடர்ந்து சில மாதங்கள் நடைபெறும். தென் மாவட்டங்களைப் போலவே திருச்சி மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெகு விமரிசையாக நடைபெறும்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் ஒவ்வொரு ஆண்டும் தை 3-ம் நாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
ஆவாரங்காடு, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் 4 கிராமங்களின் கோவில் காளைகளும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் முதலில் வாடிவாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.
இதையடுத்து கால்நடை மருத்துவக்குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வாடி வாசலின் பின்புறம் டோக்கன் முறையில் கொண்டு வந்து வரிசையில் நிறுத்தப்பட்டது. இதே போல் மருத்துவக்குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் காளையர்களும் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவாக வீரர்கள் ஜல்லிக்கட்டு களத்தில் களமிறங்கினர். வீரர்கள் களத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சிலகாளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியடித்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளின் திமிலை வீரர்கள் இறுகப் பற்றி அனைத்து வெற்றி வாகை சூடினர்.
இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.போட்டியில 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
- முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் பேரிக்கார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கொம்புகளை பலப்படுத்துவதற்கான பயிற்சிகளும், சத்தான உணவுப் பொருட்களும், காளைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
துவாக்குடி:
திருவெறும்பூர் அருகே சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2-ந் தேதி மாட்டுப்பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீநற்கடல் குடி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் பேரிக்கார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல், ஜல்லிக்கட்டு திடல், பார்வையாளர்கள் அமர்வதற்கான இடம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் சார்பில் மொபட், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. திருவெறும்பூர் பகுதியில் உள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காளைகளின் உரிமையாளர்கள் அவற்றுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறார்கள். மாடுகளின் உடல்திறனை அதிகரிக்கும் வகையில் நீச்சல், நடை, மண் குத்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொம்புகளை பலப்படுத்துவதற்கான பயிற்சிகளும், சத்தான உணவுப் பொருட்களும், காளைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மண் குத்தும் பயிற்சி குறித்து மாட்டின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளையை அடக்க வரும் வீரர்கள் எளிதில் அடக்கி விடக்கூடாது என்பதற்காக மணல்மேடுகளில் காளைகளை விட்டு மாடுகளின் கொம்புகளால் மண்ணை குத்தி தூக்குவதற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அவ்வளவு எளிதில் காளை மாடுகள் மாடுபிடி வீரர்களிடம் மாட்டாது என்பதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டான பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் களத்திற்கு காளைகள் தயார் ஆவதை போல களத்தில் சந்திக்க காளையர்களும் தயாராகி வருகிறார்கள். இதை காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் மக்கள்.
- ரெயிலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு குளிர் காய்ச்சலால் அவரது உடல் நிலை சோர்வடைந்தது.
- ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து ரெயிலில் திருச்சி சென்றார். நேற்று அதிகாலையில் ரெயிலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு குளிர் காய்ச்சலால் அவரது உடல் நிலை சோர்வடைந்தது.
இதையடுத்து ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி:
திருச்சி வயலூர் ரோட்டில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
பின்னர் போதை பொருள் விற்பனை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 4 பேர் பிடிபட்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் திருச்சி கனரா பேங்க் காலனி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த பூஜித் (வயது 24), ஈரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த ஆல்வின்(23).
இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார்.
திருச்சி ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் நகுல் தேவ் (21). இவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் நவீன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
கைதான போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் செயல்பட்டு வருகிறார்.
மேலும் கடத்தலுக்கு கோவையை சேர்ந்த ஒருவர் ஏஜென்டாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். மேற்கண்ட போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்பட்டது.
கைதான இந்த நபர்கள் பெங்களூரில் இருந்து இந்த போதை பொருளை வாங்கி வந்து திருச்சி மாநகரில் விற்பனை செய்துள்ளனர்.
- பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
- காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 -ந் தேதி தொடங்கியது.
தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார்.
தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அலங்காரத்துடன் நம்பெருமாள் காட்சி அளித்தார்.

பக்தர்கள் ரங்கா… ரங்கா… என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.
- நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
- இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது.
திருச்சி:
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 31-ந்தேதி பகல்பத்து திருவாய்மொழி திருநாள் தொடங்கியது.
விழாவையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் தினந்தோறும் காலையில் பல்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
பகல் பத்து 10-ம் திருநாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் நடைபெற்றது. பாற்கடலை கடைந்து கிடைத்த அமுதத்தை அசுரர்கள் பறித்துக் கொள்ள, தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். அவரும் மோகினியாகத் தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தார்.
இதை நினைவூட்டும் வகையில் இந்த மோகினி அலங்கார காட்சி நடைபெற்றது. இதற்காக இன்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தார். அங்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அவர் வெண்ணிற பட்டு புடவை அணிந்து, வலது திருக்கையில் தங்கக் கோலக்கிளி தாங்கி, இடது திருக்கை தொங்க விட்டுக் கொண்டு, கம்பீரமாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.
மேலும் சவுரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய் , நெற்றி பட்டை , முத்து பட்டை சாற்றி, காதில் வைர மாட்டல், வைரத் தோடு அணிந்து, மூக்குத்தி அணிந்து காட்சி தந்தார். மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் தாயாரின் திருமாங்கல்யம், அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன.
மேலும் நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவழ மாலை, காசு மாலை அணிந்து, இடது திருக்கை முழுவதும் தங்க வளையல்கள், அரசிலை பதக்கம், பவழ வலையல், தாயத்து சரங்களுடன் கம்பீரமாக் காட்சி அளித்தார்.
வடியில் தங்க சதங்கை, தண்டைகளும், பின்புறம் ஏலக்காய் ஜடை தாண்டா சாற்றி,அதன் மேல் கல் இழைத்த ஜடை நாகத்துடன் சேர்ந்த சிகப்பு கெம்புக்கல் ஜடை, ராக்கொடி அணிந்து, திருக்கைகளில் புஜ கீர்த்தி சாற்றி, அரைச்சலங்கை இடுப்பில் வலைவாக சாற்றி சூர்ய பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்திருந்தார்.
வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை காண திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் மோகின் அலங்காரத்தில் பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இதையடுத்து மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சென்றடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இதன் தொடர்ச்சியாக இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக் கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.
2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.
அதனைத் தொடர்ந்து அதிகாலை 5.15 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். பக்தர்கள் ரங்காரங்கா கோஷம் முழங்க அரங்கனை பிந்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக வருவார்கள்.
பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
அதன்பின் சாதரா மரியாதையாகி(பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
ராப்பத்து பெருவிழாவின் 7ம் திருநாளான 16-ந்தேதி அன்று திருக்கைத்தல சேவை நடைபெறும். 8-ம் திருநாளான 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெறும். 10ம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா நிறைவு பெறும்.
- நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை ஹரிஹரன் செய்து வந்தார்.
- டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில், உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் செய்து வந்தார்.
இளைஞர்கள், மாணவர்களை ஹரிஹரன் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் இது தொடர்பாக புகார் அளித்து வந்தனர்.
இதனையடுத்து, டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன், அவரது கடையில் பணியாற்றிவந்த ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இவர்களின் மீது 7 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "உடல் உறுப்புகளை மாற்றம் செய்வதற்கான உரிய சான்றிதழை நான் பெறவில்லை. இதை சட்டபூர்வமாக தவறு ஏன்னு சொன்னார்கள். டிஐஜி வருண்குமாரின் ஆலோசனையின்படி எனக்கு கவுன்சிலிங் கொடுத்தார்கள். இதற்கான முறையான சான்றிதழ் பெறாமல் என்னை போல உடல் உறுப்புகளை மாற்றம் செய்யும் வேலையை யாரும் செய்யாதீர்கள். இல்லையென்றால் என்னைப்போல பல விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆதலால் இம்மாதிரி யாரும் செய்யாதீர்கள். இனிமேல் இம்மாதிரியான எவ்வித செயல்களிலும் நான் ஈடுபட மாட்டேன்" என்று ஹரிஹரன் தெரிவித்தார்.
- சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார்.
- ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?
திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி இள்ளோம். எனவே சீமான் தனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் .அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக திருச்சி குற்றவியல் கோர்ட்டில் வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் கோர்ட்டில் அதை தெரிவிக்கட்டும். சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்நாடு சீமான் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன்; அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன்.
சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை" என்று வருண்குமார் கூறினார்.
இதனையடுத்து சீமானிடம் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், "நீதான் பெரிய அப்பா டக்கர்... இவராச்சே... துப்பாக்கி, பட்டாலியன் வைத்திருக்கியே... எனக்கு பாதுகாப்பு இல்லை எனச் சொல்வது கேவலமாக இல்ல... நீ சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை பெற்றுக்கொடு... குடுத்துடு பார்த்திடுவோம். குற்றவாளி நீ.. காக்கிச் சட்டையில் மறைந்து இருக்கிறாய்.
தமிழ் மக்களுக்காக போராடும் என்னை பிரிவினைவாதி எனக் கூறுகிறார். இது போலீஸ்காரன் வேலையா... அரசியல் கட்சி தலைவர் மாதிரி எப்படி பேட்டி கொடுக்கிறாய். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட என்னைப் பற்றி பேச மாட்டார்கள். பேசாம மாவட்ட செயலாளர் பதவியை வாங்கி கட்சியில் சேர்ந்துவிட வேண்டியதுதானே...
நீங்கள் பேசுங்க... அவரை ஏன் முன்னாடி நிறுத்துகிறீர்கள். நான் போய் மன்னிப்பு கேட்க அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? அவர் ஏதோ காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு... மன்னிப்பு கேட்பது பரம்பரையிலேயே கிடையாது. நான் மன்னிப்பு கேட்க முதலில் நீ யாரு,.. தவறு செய்தது நீ... தொழிலதிபர் யார்? அவரை கூட்டிக்கொண்டு வா...பத்திரிகையாளர்களை விட்டு, உயர் காவல் அதிகாரிகளை விட்டு நீ கெஞ்சின..." என்று சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.
இந்நிலையில் சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வருண் குமாரின் வழக்கறிஞர், முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார். ஐ.பி.எஸ். என்பது மிக உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் சீமான் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல சீமான் பேசுகிறார். அடிப்படை டேஷ் அறிவு இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை" தெரிவித்தார்.
- புதிய விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
- வியாழன், ஞாயிறு ஆகிய இரு நாட்களில் விமான சேவை இயக்கப்படுகின்றன.
கே.கே.நகர்:
திருச்சியிலிருந்து சவூதி அரேபியாவிற்கு புதிய விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
வார நாள்களில் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் திருச்சி-தமாம் இடையே விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
அட்டவணையின்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்குப் புறப்பட்டு (அங்குள்ள நேரப்படி) காலை 9.10 மணிக்கு தமாம் சென்றடையும் விமானம் மறு மாா்க்கத்தில் தமாம் கிங் பஹத் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து (அந்த நாட்டு நேரப்படி) காலை 10.10 மணிக்கு விமானம் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.
திருச்சி-தமாம் இடையிலான முதல் பயணத்தில் 123 போ் பயணித்தனா். ஞாயிற்றுக்கிழமை செல்ல இதுவரையில் 130 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
திருச்சியிலிருந்து, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபை, சாா்ஜா என இதுவரை மொத்தம் 10 சா்வதேச நகரங்களுடன் விமான போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது 11-ஆவது நகரமாக தமாம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமாம் ஒரு தொழில்துறை மையமாக இருப்பதால், இந்தியாவின் சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையிலும், இந்த விமான சேவை முக்கியத்துவம் பெறும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






