search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தின் அடுத்த கடன் இலக்கு  ரூ.500 கோடியாக இருக்க வேண்டும் -  கனிமொழி  எம்.பி. பேச்சு
    X

    மாவட்ட நிதி அறிக்கை புத்தகத்தை கனிமொழி எம்.பி. வெளியிட்ட காட்சி. அருகில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தின் அடுத்த கடன் இலக்கு ரூ.500 கோடியாக இருக்க வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு

    • தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடியது சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தான். யாராக இருந்தாலும் ஒரு சிறிய தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது மிகப்பெரிய கனவு என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா வரவேற்றார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    ரூ. 500 கோடி இலக்கு

    நாட்டின் பொருளாதாரம் 35 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சார்ந்து தான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஏற்றுமதியில் 45 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பங்கு உள்ளது. இந்த தொழில்களின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் அதிக பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவது கிடையாது. ஏனென்றால் அவை தொழில்நுட்பங்கள் சார்ந்தவை. ஆனால் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடியது சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தான். யாராக இருந்தாலும் ஒரு சிறிய தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது மிகப்பெரிய கனவு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் எல்லாம் கடன் வழங்குவதற்கான இலக்கினை அடையவில்லை.

    திருப்பூர் மாவட்டம் ரூ. 400 கோடி அளவிற்கு கடன் வழங்கியிருக்கிறது. நாம் தற்போது ரூ. 315 கோடி மதிப்பில் கடனுதவியினை இன்று வழங்குகின்றோம். எனவே நம்முடைய அடுத்த இலக்கு ரூ. 500 கோடியாக இருக்க வேண்டும். சிறு. குறு, நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். சிறு. குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறப்பானதாக, தனித்துவமாக நாம் உருவாக்கும் பொருட்கள் இருக்க வேண்டும். இப்படி செய்தால் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாற முடியும். நமது மாவட்டத்தை எல்லோரும் திரும்பி பார்க்கும் மாவட்டமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றக்கூடிய திறமை உங்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ. 2 லட்சம் கோடி முதலீடு

    அமைச்சர் கீதாஜீவன் கூறும்போது, இன்றைய முகாமில் 3,145 பேருக்கு 315 கோடி கடன் ஆணை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் இளைஞர்கள் வேலை வாங்குபவர்களாக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக இருக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குவார். நீங்கள் துணிந்து தொழில் தொடங்கினால் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும். மாவட்ட தொழில் மையம், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனம் மூலம் அதிக தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்று அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள்.

    அந்நிய முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் என ரூ. 2 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. நமது மாவட்டத்தில் அதிக அளவு தொழில் தொடங்க கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர் காலத்தில் 215 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு மீண்டும் இன்று உரிமைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது எனஅவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, தாசில்தார் பிரபாகர், மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி துரைராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சி லர்கள் பொன்னப்பன், சந்திரபோஸ், முத்துமாரி, ரவிசந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச் செயலாளர்கள் பாலன், சுப்பையா மற்றும் கருணா, பிரபாகர், அல்பட், தமிழ்நாடு பணைபாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான கென்னடி, மாவட்ட தொழில் மையத்தில் வள அலுவலர்கள் பானுமதி, ஷெகினா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×