search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரத்தான் போட்டியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு
    X

    மாரத்தான் போட்டியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு

    • அதிகாலையில் நடந்த மாரத்தான் போட்டியை கலாச்சார விழா போல் மாற்றி இருந்தனர்.
    • வீரர்களின் ஓடு பாதையில் 10 இடங்களில் மேடை அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழக இளைஞர்கள் இடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கினார்.

    இந்த அமைப்பின் சார்பில் 3-வது ஆண்டு கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி சென்னையில் இன்று நடந்தது.

    அதிகாலை 4 மணிக்கு பெசன்ட்நகரில் ஆல்சாட் பள்ளியில் இருந்து போட்டி தொடங்கியது. 42.2 கிலோ மீட்டர் தூர போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு 21.1 கிலோ மீட்டர் தூர போட்டியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

    10 கிலோ மீட்டர் தூர போட்டியை காலை 5 மணிக்கு அமைச்சர் கே.என். நேருவும், 5 கிலோ மீட்டர் தூர போட்டியை காலை 7.15 மணிக்கு உதயநிதி ஸ்டாலினும் தொடங்கி வைத்தார்கள். போட்டியில் ஓடியவர்கள் மெரினா கடற்கரை கண்ணகி சிலையில் திரும்பி பெசன்ட்நகரில் நிறைவு செய்தார்கள்.

    போட்டியில் 9 வெளிநாடுகளை சேர்ந்த 86 பேர் 19 மாநிலங்களை சேர்ந்தவர்கள். மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் வந்து குவிந்தவர்கள் ஓடினார்கள்.

    43 ஆயிரம் பேர் திரண்டதால் அதிகாலையிலேயே பெசன்ட்நகர் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. பெசன்ட்நகரில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியின் துள்ளல் கிராமிய இசை கச்சேரி நடந்தது. போட்டியில் ஓடி முடித்த பிறகும் இசை நிகழ்ச்சியை ரசிக்க கூட்டம் திரண்டு இருந்தது.

    அதிகாலையில் நடந்த இந்த போட்டியை கலாச்சார விழா போல் மாற்றி இருந்தனர். வீரர்களின் ஓடு பாதையில் 10 இடங்களில் மேடை அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    சென்னை வாசிகள் இதுவரை அறிந்திராத கிராமங்களில் மட்டுமே ஒலித்த விதவிதமான மேளங்கள் இந்த மேடைகளில் அரங்கேற்றப்பட்டு நகரை அதிர வைத்தது. திருவண்ணாமலை பெரிய மேள ஒலியும் பெரிதாக அந்த பகுதியை அதிரவிட்டது.

    காரமடை துடும்பாட்ட குழுவினரின் துள்ளல் இசை கலந்த ஆட்டம் காண்போரையும் ஆட்டம் போட வைத்தது. திருப்பத்தூர் பம்பை மேளம் கிராமத்து ஒலி இசையை நகரத்து வீதிகளில் மிதக்க விட்டது.

    நெல்லை உறுமி மேளமும், நையாண்டி மேளமும் கிராம திருவிழாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. ராமநாதபுரம் ஜிம்பலா மேளம் ரசிக்க வைத்தது. அலங்காநல்லூர் பறையாட்டம் ஆட்டம் போட வைத்தது.

    இசைகளின் சங்கமத்தோடு இணைந்து ஓடிய பல்லாயிரக்கணக்கான வீரர்கள் ஓடிய களைப்பு தெரியாமல் கிராமங்களில் திருவிழாக்களை பார்ப்பது போல் ரசித்து மகிழ்ந்தபடியே ஓடினார்கள்.

    முக்கிய பிரமுகர்கள் பலரும் ஓடினார்கள். தமிழக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திர பாபு, கடற்படை அதிகாரிகள், இங்கிலாந்து துணை மேயரான தமிழ் பெண் மோனிகா தேவேந்திரன் உள்பட பலரும் ஓடினார்கள். அனைவரும் ஒரேநிறத்தில் பனியன், கழுத்துப்பட்டை அணிந்து ஓடியது பெசன்ட்நகர் முதல் மெரினா வரை பார்வையாளர்களை கவர்ந்தது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

    பஞ்சாபை சேர்ந்த மாரத்தான் வீரர் சாவ்லா பார்வையற்றவர். அவரும் மாரத்தான் ஓடினார். அவருக்கு பரிசு வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டினார். போட்டியில் கிடைக்கும் பதிவுக்கட்டண தொகைகளை அரசின் நிவாரண பணிகளுக்கே அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகள் நடந்த போட்டியில் கிடைத்த தொகை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு வசூலான ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980-ஐ எழும்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

    அதேபோல் இந்த தொகையை சுகாதாரத்துறை செயலாளரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, பிரிட்டீஷ், ஜப்பான், பிரான்ஸ் நாட்டு தூதர்கள், அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், பெரிய கருப்பன், மேயர் பிரியா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    இவ்வளவு அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு ஓடியது ஆசிய அளவிலான சாதனையாக மாறி இருக்கிறது. இதற்கான சான்றிதழை ஆசிய புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் முதல்-அமைச்சரிடம் வழங்கியது.

    நிகழ்ச்சியில் கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சிலையை சைதாப்பேட்டையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளார்.

    Next Story
    ×