search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marathon contest"

    • மாரத்தான் போட்டிகள் 42 கி.மீ, 21 கி.மீ, 10 கி.மீ, 5 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
    • 5 கிலோ மீட்டர் தூரத்துக்கான போட்டியில் 64 ஆயிரத்து 714 பேர் பங்கேற்று ஓடினார்கள்.

    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்தது.

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஆண்டு தோறும் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறார்.

    இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டையொட்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் பெயர் பதிவை 3 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெயர் பதிவு கடந்த மாதம் 20-ந்தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 73 ஆயிரத்து 206 பேர் பதிவு செய்தனர்.

    இந்த மாரத்தான் போட்டிகள் 42 கி.மீ, 21 கி.மீ, 10 கி.மீ, 5 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி தொடங்கியது. மெரீனா கடற்கரை கலைஞர் நினைவிடம் அருகே இந்த போட்டியை அமைச்சர் கே.என்.நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் 671 பேர் கலந்துகொண்டு ஓடினார்கள். கலைஞர் நினைவிடத்தில் இருந்து காமராஜர் சாலை, பட்டினப்பாக்கம் உட்புற சாலை, எம்.ஆர்.சி. நகர், சத்யா ஸ்டுடியோ, முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச், பெசன்ட் நகர் சர்ச் அங்கிருந்து பழைய மகாபலிபுரம் சாலை வழியாக அப்பல்லோ வரை சென்று எம்.ஜி.ஆர். சாலை யில் 'யூடர்ன்' செய்து அதே வழியில் திரும்பி வந்து தீவுத் திடலில் முடித்தார்கள்.

    காலை 5.30 மணிக்கு 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    21 கிலோ மீட்டர் தூர போட்டியில் 1991 பேர் பங்கேற்று ஓடினார்கள். இவர்கள் கலைஞர் நினைவிடத்தில் இருந்து காமராஜர் சாலை, பட்டினபாக்கம் உட்புற சாலை, எம்.ஆர்.சி. நகர் வழியாக சத்யா ஸ்டுடியோ சென்று 'யூ டர்ன்' செய்து அதே வழியாக திரும்பி வந்து தீவுத் திடலில் ஓடி முடித்தார்கள்.

    10 கிலோ மீட்டர் போட்டியில் 6 ஆயிரத்து 240 பேர் பங்கேற்று ஓடினார்கள். இவர்கள் கலைஞர் நினைவிடத்தில் தொடங்கி காமராஜர் சாலை வழியாக கலங்கரை விளக்கம் வரை சென்று திரும்பி வாலாஜா சாலை, நேப்பியர் பாலம் வழியாக ஓடி தீவுத்திடலில் முடித்தார்கள்.

    5 கிலோ மீட்டர் தூரத்துக்கான போட்டியில் 64 ஆயிரத்து 714 பேர் பங்கேற்று ஓடினார்கள். இவர்களில் ஆண்கள் 50 ஆயிரத்து 629 பேர். பெண்கள் 21 ஆயிரத்து 514 பேரும் கலந்து கொண்டனர். திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் 1063 பேர் பங்கேற்றார்கள்.

    இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் கலைஞர் நினைவிடத்தில் தொடங்கி வாலாஜா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக ஓடி தீவுத்திடலில் நிறைவு செய்தார்கள்.

    மாரத்தான் ஓட்டம் நடைபெற்ற வழி நெடுகிலும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. போட்டியாளர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த 14 இடங்களில் இசை கச்சேரிகள் களை கட்டியது.

    திருவண்ணாமலை பெரிய மேளம், அலங்கா நல்லூர் சமர்ப்பறையாட்டம், ராமநாதபுரம் சிம்லா மேளம், காரியாபட்டி நையாண்டி மேளம், பள்ளிப்பட்டி ஆதிமேளம், கருப்பணம்பட்டி உருமி மேளம், ஈரோடு பம்பை மேளம், அந்தியூர் கட்ட மேளம், வாடிப்பட்டி தப்பாட்டம், கோவை துடும்பாட்டம், சங்ககிரி பெருமுரசு, திருப்பூர் சமமாப், சேலம் பெரும்முரசு, தப்பட்டை, திண்டிவனம் நையாண்டி மேளம் ஆகிய 14 குழுவினரும் 14 இடங்களிலும் பாரம்பரிய இசையை இசைத்தார்கள்.

    ஓடியவர்கள் மட்டுமல்லாமல் இந்த இசை கச்சேரிகளை பார்க்கவும் ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் பெருமளவு திரண்டு இருந்தார்கள்.

    வழியில் 17 இடங்களில் வீரர்கள் களைப்பை போக்க உற்சாக பானங்கள் வழங்கப்பட்டன. இதில் தர்பூசணி, பழச்சாறுகள், குளிர்பானங்கள், கடலை மிட்டாய், தண்ணீர், பிஸ்கட், வாழைப் பழங்கள் என பல வகைகள் வழங்கப்பட்டன. இதற்காக தர்பூசணி மட்டும் 5 டன்கள் கொண்டு குவிக்கப்பட்டிருந்தது.

    போட்டிகள் நிறைவடைந்த இடமான தீவுத்திடல் திருவிழாப்போல் களைக்கட்டியது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் அமர பிரமாண்ட மேடை அமைக்கப் பட்டிருந்தது.

    இன்னொரு பக்கம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் அமர தனிமேடை அமைக்கப்பட்டிருந்தது.

    இசைக்குழுவுக்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் செந்தில்-ராஜலெட்சுமி குழுவினரின் கிராமிய இசை கச்சேரிகள் களைகட்டியது. அதை கேட்டு கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய 8 நாடுகளின் தூதுவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.

    உலக அளவில் மாரத்தான் போட்டியில் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் ஓடியதும் இந்த போட்டியில்தான். அதேபோல் திருநங்கைகளும், திருநம்பிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதும் இந்த போட்டியில்தான்.

    இதை பார்வையிட்ட கின்னஸ் குழுவினர் கின்னஸ் சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

    பரிசு பெற்றவர்கள் விபரம் வருமாறு:-

    42 கிமீ ஆண்கள் பிரிவு:

    முதல் பரிசு ரூ.1லட்சம் சவான்பர்வால், 2-வது பரிசு ரூ.50 ஆயிரம் அபிசேக் சோனி, 3-வது பரிசு ரூ.25 ஆயிரம் ஆனந்த்கான் கோர்.

    42 கிமீ பெண்கள் பிரிவு:

    முதல் பரிசு ஜோதி சங்கர் ராவ் (ரூ.1லட்சம்), 2-வது பரிசு-அஸ்வினி மதன் ஜாதவ் (ரூ.50 ஆயிரம்), 3-வது பரிசு-ஆஷா (ரூ.25 ஆயிரம்).

    21 கிமீ ஆண்கள் பிரிவு:

    முதல் பரிசு: லெட்சுமணன் (ரூ.1லட்சம்), 2-ம் பரிசு: ரஞ்சித்குமார் பட்டேல் (ரூ.50 ஆயிரம்), 3-ம் பரிசு: தர்மேந்தர் புனியா (ரூ.25 ஆயிரம்).

    12 கிமீ பெண்கள் பிரிவு:

    முதல் பரிசு: லெஸ்லி டெஹ்னி (ரூ.1 லட்சம்), 2-ம் பரிசு: பவதாரணி (ரூ.50 ஆயிரம்), 3-ம் பரிசு: நிஷூ (ரூ.25ஆயிரம்).

    10 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவு

    முதல் பரிசு: மோகன் செய்னி (ரூ.50 ஆயிரம்), 2-ம் பரிசு: வினீஸ்குமார் (ரூ.25 ஆயிரம்), 3-ம் பரிசு: நிகில் குமார் (ரூ.15 ஆயிரம்)

    10 கிலோ மீட்டர் (பெண்கள் பிரிவு)

    முதல் பரிசு: பார்த்தி (ரூ.50 ஆயிரம்), 2-ம் பரிசு: பிரீனு யாதவ் (ரூ.25 ஆயிரம்)

    5 கிமீ ஆண்கள் பிரிவு:

    முதல் பரிசு: ராமேஸ்வர் முஞ்சல் (ரூ.25 ஆயிரம்), 2-ம் பரிசு: அமன் சவுத்ரி (ரூ.15 ஆயிரம்), 3-ம் பரிசு: ஹரிஓம் திவாரி (ரூ.10 ஆயிரம்).

    5 கிமீ பெண்கள் பிரிவு

    முதல் பரிசு: சவுமியா செல்வன் (ரூ.25 ஆயிரம்), 2-ம் பரிசு: சம்யா ஸ்ரீ (ரூ.15 ஆயிரம்), 3-ம் பரிசு: திவ்யா (ரூ.10 ஆயிரம்).

    • இது இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • பதிவு கட்டணம் ரூ.3.42 கோடி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு உலக சாதனை முயற்சியாக சென்னையில் இன்று சர்வதேச மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 42 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா தீவுத்திடலில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.

    அப்போது, உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1,063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர் என்றும், மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ₨1000 ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் கூறினார். மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ₨3.42 கோடி வசூலானது என்று கூறிய அவர், இது இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான் என்றார்.

    இந்த மாரத்தான் போட்டியில் 73206 நபர்கள் கலந்துகொண்டனர். இதன்மூலம் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உலக சாதனை குழுவினர் வழங்கினர்.

    மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பதிவு கட்டணமாக செலுத்திய 3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வழங்கும் வகையில், காசோலையை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • மாரத்தான் போட்டி 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது.
    • 9 பிரிவுகளில் மொத்தம் 10.70 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    சென்னை:

    கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு உலக சாதனை முயற்சியாக பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்பட்டது. 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் என போட்டி நடத்தப்பட்டது. கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கிய இப்போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடைபெற்றது. இதில் 73 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா தீவுத்திடலில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். 9 பிரிவுகளில் மொத்தம் 10.70 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்படுகிறது.
    • இந்த மாரத்தான் போட்டி 4 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டி 42.2 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடுவதற்கு 73, 206 பேர் முன்பதிவு செய்துள்ளார்கள்.

    அதிகாலை 4 மணியளவில் தொடங்கும் மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடையும்.

    கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கும் போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடக்கிறது.

    இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியின் 42 கிமீ பிரிவு இன்று அதிகாலை 4 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. இதில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • அதிகாலையில் நடந்த மாரத்தான் போட்டியை கலாச்சார விழா போல் மாற்றி இருந்தனர்.
    • வீரர்களின் ஓடு பாதையில் 10 இடங்களில் மேடை அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழக இளைஞர்கள் இடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கினார்.

    இந்த அமைப்பின் சார்பில் 3-வது ஆண்டு கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி சென்னையில் இன்று நடந்தது.

    அதிகாலை 4 மணிக்கு பெசன்ட்நகரில் ஆல்சாட் பள்ளியில் இருந்து போட்டி தொடங்கியது. 42.2 கிலோ மீட்டர் தூர போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு 21.1 கிலோ மீட்டர் தூர போட்டியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

    10 கிலோ மீட்டர் தூர போட்டியை காலை 5 மணிக்கு அமைச்சர் கே.என். நேருவும், 5 கிலோ மீட்டர் தூர போட்டியை காலை 7.15 மணிக்கு உதயநிதி ஸ்டாலினும் தொடங்கி வைத்தார்கள். போட்டியில் ஓடியவர்கள் மெரினா கடற்கரை கண்ணகி சிலையில் திரும்பி பெசன்ட்நகரில் நிறைவு செய்தார்கள்.

    போட்டியில் 9 வெளிநாடுகளை சேர்ந்த 86 பேர் 19 மாநிலங்களை சேர்ந்தவர்கள். மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் வந்து குவிந்தவர்கள் ஓடினார்கள்.

    43 ஆயிரம் பேர் திரண்டதால் அதிகாலையிலேயே பெசன்ட்நகர் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. பெசன்ட்நகரில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியின் துள்ளல் கிராமிய இசை கச்சேரி நடந்தது. போட்டியில் ஓடி முடித்த பிறகும் இசை நிகழ்ச்சியை ரசிக்க கூட்டம் திரண்டு இருந்தது.

    அதிகாலையில் நடந்த இந்த போட்டியை கலாச்சார விழா போல் மாற்றி இருந்தனர். வீரர்களின் ஓடு பாதையில் 10 இடங்களில் மேடை அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    சென்னை வாசிகள் இதுவரை அறிந்திராத கிராமங்களில் மட்டுமே ஒலித்த விதவிதமான மேளங்கள் இந்த மேடைகளில் அரங்கேற்றப்பட்டு நகரை அதிர வைத்தது. திருவண்ணாமலை பெரிய மேள ஒலியும் பெரிதாக அந்த பகுதியை அதிரவிட்டது.

    காரமடை துடும்பாட்ட குழுவினரின் துள்ளல் இசை கலந்த ஆட்டம் காண்போரையும் ஆட்டம் போட வைத்தது. திருப்பத்தூர் பம்பை மேளம் கிராமத்து ஒலி இசையை நகரத்து வீதிகளில் மிதக்க விட்டது.

    நெல்லை உறுமி மேளமும், நையாண்டி மேளமும் கிராம திருவிழாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. ராமநாதபுரம் ஜிம்பலா மேளம் ரசிக்க வைத்தது. அலங்காநல்லூர் பறையாட்டம் ஆட்டம் போட வைத்தது.

    இசைகளின் சங்கமத்தோடு இணைந்து ஓடிய பல்லாயிரக்கணக்கான வீரர்கள் ஓடிய களைப்பு தெரியாமல் கிராமங்களில் திருவிழாக்களை பார்ப்பது போல் ரசித்து மகிழ்ந்தபடியே ஓடினார்கள்.

    முக்கிய பிரமுகர்கள் பலரும் ஓடினார்கள். தமிழக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திர பாபு, கடற்படை அதிகாரிகள், இங்கிலாந்து துணை மேயரான தமிழ் பெண் மோனிகா தேவேந்திரன் உள்பட பலரும் ஓடினார்கள். அனைவரும் ஒரேநிறத்தில் பனியன், கழுத்துப்பட்டை அணிந்து ஓடியது பெசன்ட்நகர் முதல் மெரினா வரை பார்வையாளர்களை கவர்ந்தது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

    பஞ்சாபை சேர்ந்த மாரத்தான் வீரர் சாவ்லா பார்வையற்றவர். அவரும் மாரத்தான் ஓடினார். அவருக்கு பரிசு வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டினார். போட்டியில் கிடைக்கும் பதிவுக்கட்டண தொகைகளை அரசின் நிவாரண பணிகளுக்கே அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகள் நடந்த போட்டியில் கிடைத்த தொகை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு வசூலான ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980-ஐ எழும்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

    அதேபோல் இந்த தொகையை சுகாதாரத்துறை செயலாளரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, பிரிட்டீஷ், ஜப்பான், பிரான்ஸ் நாட்டு தூதர்கள், அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், பெரிய கருப்பன், மேயர் பிரியா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    இவ்வளவு அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு ஓடியது ஆசிய அளவிலான சாதனையாக மாறி இருக்கிறது. இதற்கான சான்றிதழை ஆசிய புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் முதல்-அமைச்சரிடம் வழங்கியது.

    நிகழ்ச்சியில் கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சிலையை சைதாப்பேட்டையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளார்.

    ×