search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவி இறப்பு விவகாரம்- சின்னசேலம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு
    X

    பிளஸ்-2 மாணவி இறப்பு விவகாரம்- சின்னசேலம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு

    • பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர்.
    • ஜாமீன் மனு இன்று காலை நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் சங்கீதா ஆஜராகி வாதாடினார்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    கைதான 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் 1 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவினை அவர்களது வக்கீல்கள் தாக்கல் செய்து உள்ளனர்.

    இந்த மனு இன்று காலை நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் சங்கீதா ஆஜராகி வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி சாந்தி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். நகலை கொண்டு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி வசம் உள்ளதால் ஏற்கனவே தாக்கல் செய்து உள்ள ஜாமீன் மனுவை ஏற்க முடியாது. எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்த தகவல் அறிக்கையினை தாக்கல் செய்ய பள்ளி தரப்பு வக்கீலுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் இந்த மனு மீதான விசாரணை வருகிற 1-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.

    Next Story
    ×