என் மலர்
சேலம்
- பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
- குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகஅளவில் பெய்தது. இதன் காரணமாக தற்போது அணை, ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்தே சேலம் மாவட்டத்தில் பனி, குளிரின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர், பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
தினமும் மாலை 3 மணிக்கு தொடங்கும் குளிர், பனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிப்பதால் அந்த நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தொடர்ந்து பனி, குளிரின் தாக்கத்தால் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இரும்பலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் இந்த குளிரால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனியின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படுகிறது.
இன்று காலையும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் காலை நேரத்தில் குளிரில் இருந்து தப்பிக்க சிலர் சாலையோரங்களில் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.
மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றன. மேலும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது.
குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது. எதிரில் யார் நிற்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதே போல் சேலம் மாவட்டத்தில் உள்ள மற்ற சமவெளி பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கம்பளி ஆடைகள், குல்லா அணிந்து சென்றனர்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 31-ந்தேதி மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீரை விட, கூடுதலாக அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.
கடந்த 3-ந்தேதி முதல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட தினமும் கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வந்தது. இதனால் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6-ந்தேதி 12 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 831 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 116.10 அடியாகவும், நீர் இருப்பு 87.38 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
நீர்வரத்து 1000-க்கும் கீழ் சரிந்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பின் அளவை மேலும் குறைத்துள்ளனர். அதன்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- மழை நின்றதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டது.
- கடந்த 31-ந் தேதி 120 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.65 அடியாக குறைந்தது.
சேலம்:
தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது.
இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டது. அதே நேரம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடந்த 31-ந் தேதி 120 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.65 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 694 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 88.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு கிட்டம்மாள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.
- பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சேலம்:
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு கிட்டம்மாள், வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.
இதன் விளைவாக டெல்லியில் 'நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்' (Natural strong powerlifting federation) சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
- நீர் இருப்பு 89.09 டி.எம்.சி.யாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 748 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 31-ந்தேதி மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீரை விட, கூடுதலாக அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.
கடந்த 3-ந்தேதி முதல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட தினமும் கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வந்தது.
நேற்று காலை 117.87 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 117.21 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 89.09 டி.எம்.சி.யாக உள்ளது.
இந்த நிலையில் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவை குறைக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் நீரின் அளவை குறைத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். வழக்கம்போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 748 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
- நானாவது கொஞ்சம் இலக்கியம் பேசினேன். நீங்கள் முழுவதும் அரசியல் பேசினீர்கள். அது என்னது எனச் சொல்லுங்கள்...
- உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நான் பேசியது தவறு என்றால் நீங்கள் பேசியது எப்படி சரி?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள வரிகளெல்லாம் எங்கே. 10-க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் எடுத்துட்டீங்க. நான் மொத்தமா பாட்டையே எடுத்துட்டேன். அவ்வளவுதானே.
திராவிடநல் திருநாடு இங்கே ஏன் வருகிறது? திராவிடம் என்ற சொல் என்ன மொழி? தமிழ்த்தாய் வாழ்த்தில் சமஸ்கிருத வார்த்தை வருகிறதா? இல்லையா? தமிழ்த்தாய் வாழ்த்தில் என்ன திராவிடம் வருகிறது. திராவிட நாடு எங்கிருந்தது? உங்கள் வசதிக்கு திராவிட நாடு என்ற வார்த்தை வந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்தாய் ஆக்கிட்டீங்க.
நான் அதிகாரத்திற்கு வந்தால் எங்க தாத்தா புரட்சி பாவலர் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாய் போடுவோன். அந்த பாட்டை போட்டுக்கிட்டு இருக்கேன்... உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்லுங்க.
அரசு விழாவில் நீங்கள் போடாமல் இருங்க... இது பொது நிகழ்வு... புத்தக வெளியீட்டாளர்கள். பதிப்பாளர்கள் அமைப்பு அரசு கொடுக்கிற பணத்தில் இயங்குகிறது என்றால், அரசுக்கு காசு ஏது? என்னை கண்டிக்கிறீர்கள் இல்லையா? என்னுடைய காசு அதில் இருக்கிறதா? இல்லையா? நான் பேசும்போது முன்னாடி இருந்து கைத்தட்டினார்களே அவர்களடைய காசு இருக்கிறதா? இல்லையா? தமிழன் காசுதான் இருக்கிறது?
நான் இங்கிலீஷ் தாய் வாழ்த்து பாட்டு போட்டேனே? இந்தி தாய் வாழ்த்து போட்டேனா? தமிழ்த்தாய் வாழ்த்துதானே போட்டேன்... தூயத் தமிழில் எங்கள் புரட்சி பாவலர் பாடிய பாடலை போட்டேன். ரவீந்திரநாத் தாகூர் பாட்டை போட்டேனா? அப்படி ஒன்னும் இல்லலா...
உங்களுக்கு என்ன பிரச்சனை. அந்த பாட்டை போட்டதால் கொட்டகை பற்றி எரிந்ததா? பல பேர் இறந்து போய் விட்டார்களா? அப்படி ஏதும் இருக்கா?
நான் பேசிவிட்டு இறங்கிய பிறகு, கலைஞர் கின்னஸ் என்ற நூலை வெளியிட்டீங்களே... அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் எல்லோரும் வெளியிட்டு பேசினார்கள். நானாவது கொஞ்சம் இலக்கியம் பேசினேன். நீங்கள் முழுவதும் அரசியல் பேசினீர்கள். அது என்னது எனச் சொல்லுங்கள்...
உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நான் பேசியது தவறு என்றால் நீங்கள் பேசியது எப்படி சரி?
எனக்கு மட்டுதான் கண்டனம் தெரிவிக்க முடியும் (உங்களுக்கு மட்டும்தான் கண்டனம் தெரிவித்துள்ளார்களே என்ற கேள்விக்கு). நான் மட்டும்தான் உங்களுக்கு பிரச்சனையா தெரியுது... கண்டனம் வரவில்லை என்றால், அரைநாள் செலவழித்து மேடையில் ஏறி நான் ஏன் பேசனும்... வினையாற்றாத சொல் வீண். பேசினால் ஒரு பிரச்சனை உருவாகனும், ஒரு பிரளயம் ஏற்படனும், ஒரு கலகம் ஏற்படனும். சும்மா போய் நான் ஏன் பேசனும். அது வேற யாராவது பேசுவாங்க...
தமிழ்தேசம், தமிழ்தேசியம் என புத்தகத்தில் உள்ளது. தமிழ்தேசியத்தை முன்னெடுக்கும் மகன் இதைக்கூட பேசவில்லை என்றால், நான் கைத்தடி வைத்திருக்கிறேனா? துப்பாக்கி வைத்திருக்கிறேனா.
கைத்தடி வைத்திருக்கிறவன் தட்டி தட்டி நடக்கிறார். நான் துப்பாக்கி வைத்திருக்கிறவன். இரண்டு குண்டாவது வெடிக்கனும். இல்லையென்றால் அந்த நிகழ்ச்சியில் நான் ஏன் கலந்துக்கனும். இப்படி நடக்கும் என தெரிந்துதான் நிகழ்ச்சி நடந்திருக்கு. இல்லை என்றால் என்னை ஏன் கூப்பிட்டு வெளியிடனும்?
எல்லோரும் அரசியல் பேசுறாங்கள். நான் பேசியது தான் பிரச்சனையா இருக்குது.
இவ்வாறு சீமான் பேட்டியின்போது தெரிவித்தார்.
- தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
ராசிபுரம்:
புதுச்சத்திரம் அருகே உள்ள நவனி தோட்டக்கூர்பட்டி ஊராட்சியிலுள்ள பள்ளிப்பட்டி மற்றும் ஓலப்பாளையம் கிராமங்களை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு தனியார் டிராவல்ஸ் பஸ் மூலம் சென்றனர். அவர்களுடன் ராசிபுரத்தை சேர்ந்த 10 பேரும் மேல்மருவத்தூர் சென்றுள்ளனர்.
பின்னர் வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். ராசிபுரத்தை சேர்ந்தவர்களை இறக்கிவிட்டு விட்டு, அதிகாலை 4 மணியளவில் நவனி தோட்டக்கூர்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள லக்கியம்பட்டி பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சுமார் 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இதில் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகனாம்பாள் (37), சுவேதா(15), விசாகா (8), ஜெகதீஸ்வரி (40), பாப்பாத்தி (70), தமிழ்ச்செல்வி (31) ஆகியோர் உட்பட 25-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.
பின்னர் காயமடைந்தவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் மற்றும் நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வளைவு பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்தவர்களுக்கு ராசிபுரம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளன.
- வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலைய கடை வீதியில் உள்ள பெரியார் தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தங்க நகை ஆசாரி கடைகள் உள்ளன. மேலும் ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதனால் இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிகவும் முக்கியமான இந்த சாலை கடந்த சில மாதங்களாக காங்கிரீட் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொது மக்கள் நடந்து கூட செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் சாக்கடை கழிவுகள் தெருவில் தேங்கி நின்று பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவித்து வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து எழுந்து சென்ற நிகழ்வுகளும் நடந்தது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள், வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரியிடமும் பல முறை முறையிட்டனர். ஆனாலும் எந்த பணியும் நடைபெறவில்லை. இதையடுத்து அந்த பகுதி பொது மக்கள் பணம் வசூல் செய்து புதிதாக காங்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்தனர். அதன் படி அந்த பகுதி பொது மக்கள், வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்து காங்கிரீட் சாலை அமைத்தனர். தற்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளன. அதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
எனவே வரும் காலங்களில் பொது மக்களின் அடிப்படை வசதிகளில் தீவிர கவனம் செலுத்தி மாநகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்துள்ளது.
- அணைக்கு வரும் நீரின் அளவு 1,992 கன அடியில் 1128 கன அடியாக சரிந்து உள்ளது.
மேட்டூர்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி விநாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது. மழை நீடித்ததால் டிசம்பர் 21-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத்தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி இரவு கடந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நிரம்பி இருந்த அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியிலிருந்து இன்று காலை 119.14 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு 1,992 கன அடியில் 1128 கன அடியாக சரிந்து உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடியும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 92.10 டி.எம்.சியாக உள்ளது.
- பெரியசாமி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 67). நிலத்தரகர். இவருடைய தம்பி சிகாமணியின் மகன் செல்வராஜ் (30). பி.எஸ்சி பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மது அருந்தும் பழக்கம் இருந்த செல்வராஜ், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வீட்டில் உள்ளவர்களிடம் பணம் வாங்கி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை தன்னுடைய பெரியப்பா பெரியசாமியிடம், மது அருந்த பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததுடன், செல்வராஜை கண்டித்தார். அப்போது பெரியசாமிக்கும், செல்வராஜூக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த செல்வராஜ், பெரியப்பா பெரியசாமியை தாக்கினார். இதனை தடுக்க சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டினார்.
பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பெரியசாமியின் தலையை ஆட்டை அறுப்பது போன்று கொடூரமாக அறுத்து தலையை துண்டித்தார். ரத்த வெள்ளத்தில் பெரியசாமி துடி துடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியப்பாவை கொலை செய்த செல்வராஜ், கத்தியுடன் பெரியப்பா உடல் அருகிலேயே எதுவும் தெரியாதது போல் அமர்ந்து இருந்தார். அதேநேரத்தில் அங்கிருந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், செல்வராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை மீட்டனர்.
பெரியசாமி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தொடர்ந்து செல்வராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார்.
- வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக விசாரனையில் தெரிவித்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனத்துறையினர் சோதனை சாவடி, வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அதில் யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார். அவர் யானை தந்தம் கடத்தல் குறித்து திடுக்கிடும் தகவல் வனத்துறையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஒட்டு மொத்த கும்பலையும் பிடிக்க வனத்துறையினர் திட்டம் தீட்டினர்.
அதன்படி அவர் மூலமாக வனத்துறையினர் தந்தங்களை விலைக்கு வாங்குவது போல் பேசி கடத்தல் கும்பலை கொளத்தூரை அடுத்த ஏழரை மரத்துக்காடு என்ற இடத்திற்கு வரவழைத்தனர்.
இதையடுத்து சொகுசு காரில் யானை தந்தங்களை எடுத்துக்கொண்டு 3 பேர் ஏழரை மரத்துக்காடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக காருக்கு முன்னும் பின்னும் நோட்டமிட்டபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். குறிப்பிட்ட இடத்திற்கு சொகுசு கார் வந்தவுடன் மாறுவேடத்தில் நின்ற வனத்துறையினர் காரை நிறுத்தி யானை தந்தங்களை கொண்டு வருமாறு சைகை காட்டினர். இதையடுத்து யானை தந்தங்களுடன் காரும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் அருகில் வந்தனர்.
அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த வனத்துறையினர் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ எடை கொண்ட 4 யானை தந்தம், ஒரு சொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் தந்தங்களை காரில் கடத்தி வந்தவர்கள் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியை சேர்ந்த பழனி (வயது 48), தலைவாசல் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (40), குரும்பனூரை சேர்ந்த பெருமாள் (50), ஏழரை மரத்துக்காடு பகுதியை சேர்ந்த ஒண்டியப்பன் (59), வாழப்பாடியைச் சேர்ந்த அருணாசலம் (45) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக விசாரனையில் தெரிவித்தனர்.
இந்த வனப்பகுதியில் வீரப்பன் கும்பல் யானை தந்தம் கடத்தியதாக கூறுவது உண்டு.
வீரப்பனுக்கு அடுத்து தற்போது மீண்டும் யானை தந்தம் கடத்தல் தலை தூக்கியுள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டுபிடிக்க ஆய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர்.
- பை-பாஸ் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் காலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை கனமழையாக கொட்டியது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் வழக்கத்தை விட இந்தாண்டு அதிக அளவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்தது. மேலும் பனி பொழிவு அதிகரிப்பால் மரங்கள், செடி, கொடிகளில் பனிகள் படர்ந்து வெள்ளை நிறத்தில் முத்துக்கள் போல காட்சி அளிக்கிறது.
குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே கடும் குளிர் நிலவி வந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு மேலும் அதிகரித்து அது காலை 11 மணி வரை நீடிப்பதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடமாடுகின்றனர்.
மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் தவித்து வருகிறார்கள்.
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக குளிர்ச்சி யான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் நேற்று இரவு பனிப்பொழிவு மேலும் அதிகரித்தது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து பொதுமக்களை வாட்டியது. இதனால் பெரும்பாலான வீடுகளில் நேற்றிரவு மின் விசிறிகளை நிறுத்தி விட்டு போர்வைகளை போர்த்தியபடியே மக்கள் தூங்கினர். மேலும் இன்று அதிகாலை முதல் இரு சக்கர வாகனங்களில் வெளியில் சென்றவர்கள் கடும் குளிரால் நடுங்கினர்.
இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குளிச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. வெயில் அடித்த பிறகும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே நிலவியதால் மக்கள் தவித்தனர். மாவட்டம் முழுவதும் கடும் பனிமூட்டமும் நிலவியது. இதனால் பை-பாஸ் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் காலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.






