என் மலர்
நீங்கள் தேடியது "Salem government hospital"
- தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் சளித்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் சளித்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று டெங்கு பாதிப்புக்கு 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதை அடுத்து தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் டெங்கு காய்ச்சல் நல்ல தண்ணீரில் பரவும் என்பதால் தண்ணீரை மூடி வைத்து சுத்தமாக பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு சிறப்பு முகாம் நடத்தவும் அமைச்சர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு பாதித்தவர்கள் சிகிச்சை பெற படுக்கைகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில் சிலருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு அதிக அளவில் இல்லை. இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 260 படுக்கைகள் நேற்று முதல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதித்தவர்களுக்கு அங்கு அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.
- மருந்து நோயாளிகளுக்கு ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகள் பாதிப்பு.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் ஆண்கள் அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வார்டில் நேற்று இரவு 11 மணியளில் பணியில் இருந்த டாக்டர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த மருந்து நோயாளிகளுக்கு சரிவர ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவி மீனாள், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி மற்றும் அரசு ஆஸ்பத்திரி இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
ஊசி போட்டதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (வயது 40) என்பவர் அலர்ஜி ஏற்பட்டு இறந்து விட்டார். மேலும் தர்மபுரி மாவட்டம் நாகலூரை சேர்ந்த மனோஜ் (28), வாழப்பாடியை சேர்ந்த முருகேசன் (54), ஓமலூர் காமலாபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (60), மனோகரன் (64), ரமேஷ் (45) ஆகிய 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவிமீனாளிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
வேணுகோபாலுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. இதைபார்த்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் உறவினர்களிடம் வேணு கோபாலின் உடலை ஒப்படைத்தனர். அவர்கள் உடலை பெற்று கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை, ராமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி தீபிகா (வயது 27). இவர்களுக்கு திருமணம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு முகிலன் (3) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் அறிவழகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர், தனது மனைவி தீபிகாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது தீபிகா வீட்டின் அறையில் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அறிவழகன் குடும்பத்தினர் வீட்டின் வெளியே வந்து அக்கம், பக்கத்தினரிடம் தீபிகா அறை கதவை பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே ஓடி வாருங்கள் என கூறியுள்ளனர்.
உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அறை கதவை உடைத்து உள்ளே புகுந்து தீபிகாவை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி அம்மாப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீபிகா எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மகள் இறந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அவருடைய தாய் கதறி அழுதார். இன்று காலை பெற்றோர் தங்களது உறவினர்கள் சுமார் 100 பேருடன் திரண்டு சேலம் அரசு ஆஸ்பத்திக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு முற்றுகையிட்டு மகள் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கதறி அழுதனர்.
அப்போது தீபிகாவின் தாயார் போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:-
இரவு 10 மணி வரை தீபிகா எங்களிடம் நல்லாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் எப்படி தற்கொலை செய்திருக்க முடியும்?. தீபிகா சாவில் மர்மம் உள்ளது. அவரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டு இருக்கிறார்கள். போலீசார் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
தொடர்ந்து பிரேத பரிசோதனை அறை முன்பு தீபிகாவின் குடும்பத்தினர் கதறி அழுதபடி இருந்ததை பார்க்கும்போது சோகத்தை ஏற்படுத்தியது.
தீபிகாவுக்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் சேலம் ஆர்.டி.ஓ.குமரேசன் மேல் விசாரணை நடத்த உள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் மேரி (வயது 67). இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் மேரி சேலத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு ஆஸ்துமா நோய் அதிகமானது. இதையடுத்து அவரை உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நேற்று நள்ளிரவில் மேரி கடுமையாக இருமினார். அவர் விடாமல் இருமி கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த ஊழியர்கள் மேரியை தூக்கிக் கொண்டு சென்று மகப்பேறு பிரிவு அருகில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டில் வீசிவிட்டு சென்றனர்.
இதனால் இரவு முழுவதும் அவர் கதறி அழுதபடி இருந்தார். இன்று காலை ஆஸ்பத்திரிக்கு வந்த பொது மக்கள் மேரியின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தவர்களிடம் எப்படி நோயாளியை வெளியில் தூக்கி வீசலாம் என்று கேட்டு சண்டை போட்டனர். இதையடுத்து மேரியை மீண்டும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சைக்கிள் ஸ்டேண்டில் தூக்கி வீசிய ஊழியர்கள் யார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews






