என் மலர்tooltip icon

    மதுரை

    • கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.
    • அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன.

    மதுரை:

    மதுரையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் மீது ஆதாரமில்லாத, அவதூறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற வழக்கை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எப்படி இவ்வழக்கு விசாரித்தாலும் அவதூறு வழக்காகத்தான் தெரியவரும். இந்த வழக்கை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.

    சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் என்னை பற்றி அவதூறு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். அவ்வளவுதான் அவர்களது நாகரீகம். திருமணம் செய்யாதே, கற்பு இல்லை என்பது பெரியாரின் கோட்பாடு. ஆனால் அவர்களாலேயே அதை கடைபிடிக்க முடியவில்லை. அதனால்தான் இதுபோன்ற கேவலமான செயல்ளை பெரியார் திராவிடர் கழகத்தினர் செய்து வருகின்றனர். என்னையும், என்னை பற்றியும் பேச தி.மு.க.விற்கும், திராவிடர் கழகத்திற்கும் தகுதி இல்லை.

    பாலியல் வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன். எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது.

    இந்த வழக்கில் பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்?. கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை.

    கம்யூனிஸ்டு கட்சியில் உண்மையான தலைவராக நல்லக்கண்ணு மட்டுமே உள்ளார். நல்லக்கண்ணுக்கு ஏன் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடவில்லை? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சி காலத்தில் 12 சீட்கள் பெற்ற நிலையில் தற்போது அவர்களது நிலைமை மோசமாக உள்ளது. எந்த பிரச்சனைகளுக்கும் கம்யூனிஸ்டு கட்சி போராட முன்வரவில்லை. மும்மொழி கொள்கை, கச்சத்தீவு, காவிரி பிரச்சனை உள்ளிட்ட வற்றில் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடு தெரியவில்லை. திராவிடர் கழகத்தினர் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இழிவுபடுத்த வேண்டுமென செயல்படுகின்றனர்.

    கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் புகார் தொடர்பான பிரச்சனை உள்ளது. தற்போது தீவிரம் அடைந்துள்ள இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதுதொடர்பாக என்னையும், என் குடும்பத்தையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகின்றனர். அதனை எல்லாம் பொறுத்து கண்ணியம் காத்து வருகிறேன்.

    இந்த பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும். தி.மு.க. தலைவர்களும், வாடகை தலைவர்களை அமர்த்தி இந்த பிரச்சனையை பேசி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்றுக் கொள்ளாது.
    • தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தான் இங்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு பழகிக் கொள்கிறார்கள்.

    ரயில்நிலையங்கள், தபால் நிலையங்களில் எப்படி வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்களோ அதுபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு பள்ளிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழும் ஆங்கிலமும் பயின்றாலே நமது மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நானும் அத்தகைய பள்ளியில் தான் படித்தேன். எனது மகளும் தமிழும், ஆங்கிலம் மட்டும் தான் பள்ளியில் படித்தார்.

    மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்தினார்கள் என்றால் அது மறைமுகமாக இந்தி திணிப்பாக தான் பார்க்க வேண்டும். இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்றுக் கொள்ளாது.

    வடநாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வேலைக்கு வரும்போது யாரும் ஆத்திச்சூடியோ, திருக்குறளோ, தமிழ் இலக்கியமோ, இலக்கணமோ படித்துவிட்டு இங்கு வருவதில்லை.

    தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தான் இங்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு பழகிக் கொள்கிறார்கள்.

    நாமும் அவர்களுக்கு மொழி தெரியாததால் அவர்களை விரட்டி அடிப்பது கிடையாது. அதேபோல, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அவர்களும் பழகிக்கொள்வார்கள்.

    யாருக்காவது இந்தி பயில வேண்டும் என்றால் சிபிஎஸ்இ பள்ளிகள், கேந்திரியா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இருக்கிறது. அங்கு படித்துக் கொள்ளலாம்.

    ஆனால், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியை கட்டாயம் ஆக்குவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி மூன்றாவது மொழி என்றால் அவர்கள் இந்தியைதான் திணிக்க முயல்கிறார்கள்.

    இது என்னவாகும் என்றால், எல்லாம் அரசு பள்ளிகளிலும் மூன்றாம் மொழிக்கான ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் பாஜக அரசு பீகார், உபியில் இருந்து ஆசிரியர்களை அனுப்புகிறோம் என்பார்கள்.

    ரயில்நிலையங்கள், தபால் நிலையங்களில் எப்படி வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்களோ அதுபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு பள்ளிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பல நூறு ஆண்டுகளாக கறி விருந்து நடைபெற்று வருகிறது.
    • கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை மக்கள் உபயோகப்படுத்துவதில்லை.

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் கிராமத்தில் கடலாடி-முதுகுளத்தூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது தர்ம முனீஸ்வரர் ஆலயம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி களரி விழாவையொட்டி பாரிவேட்டை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறு வது வழக்கம்.

    பாரி வேட்டை திருவிழா விற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் நேர்த்திக் கடனாக கோவிலுக்கு செலுத்தப்ப டும். ஆடுகள் குட்டி போடும் போதே இது முனியனுக்கு என்று சொல்லி நேர்ந்து விடும் பழக்கம் இப்பகுதியில் உள்ளது.

    மேலும், கீழச்சாக் குளம் கிராமத்தின் சார்பில் தலைகட்டுவரியாக 2 ஆயிரம் வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டும் பொது அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் கீழச்சிக்குளம் கிராம மக்களே ஏற்றுக் கொள்கின்றனர்.

    2 ஆண்டுக்கு ஒருமுறை பாரிவேட்டை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தாண்டு தர்ம முனீஸ்வரர் கோவிலில் பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் ஆலய பாரிவேட்டை திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொது அன்னதான விருந்து இந்தாண்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி பேதம் பாராமல் கலந்து கொண்டு கறிவிருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். பல நூறு ஆண்டுகளாக இந்த ஆட்டுக்கறி விருந்து நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை இப்பகுதி மக்கள் உபயோகப் படுத்துவதில்லை. கோவில் பொருட்கள் அனைத்தும் தர்ம முனீஸ்வரருக்கு சொந்தம் என இப்பகுதி மக்கள் கருதுவதால், கோவில் ஊரணியைச் சுற்றியுள்ள மரங்களில் உள்ள இலை தழைகளைக் கூட தங்களது ஆடு, மாடுகளுக்கு அளிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளார்கள்.
    • பல்வேறு வரி உயர்வுகளை விதித்த இந்த தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் இருந்த காலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க.விற்காக குரல் கொடுத்தவர் வைகை புயல் நடிகர் வடிவேலு. அப்போது தி.மு.க. வெற்றி பெறவில்லை. வெள்ளைக் கொடி ஏந்திய புலிகேசி வடிவேலு, தி.மு.க. பக்கம் போய்விட்டார்.

    ஒருபுறம் வடிவேலு, மறுபுறம் குஷ்பு என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால் அந்த தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்தித்தது. மீண்டும் நடிகர் வடிவேலு மேடை ஏறிய தி.மு.க. ஊத்திக்கப்போகிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை.

    ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாருன்னு பாடல் போட்டார்கள். ஆனால் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் கூட அந்தப் பாட்டை போடவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளார்கள். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு என பல்வேறு வரி உயர்வுகளை விதித்த இந்த தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதை மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நடிகர் வடிவேலு குறித்து செல்லூர் ராஜூ பேசியது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் வடிவேலு, கலைஞரும், அவரது மகன் மு.க.ஸ்டாலினும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர். அதிலும் குறிப்பாக சொன்னதை விட சொல்லாதது ஏராளமானவற்றை செய்துகொடுத்துள்ளனர் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    • தேர்தலுக்கு இன்னும் காலம், நேரம் இருக்கிறது.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் யானை மலை அடிவாரத்தில் குடை வரை கோவிலாக அமைந்துள்ள நரசிங்கம் பெருமாள் கோவிலில் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளரும், நடிகரும், தனியார் அறக்கட்டளை தலைருமான சௌந்தரராஜா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரிலும், அதன் தலைவரும் நடிகருமான விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபட்டார். மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது இதே மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்றும், வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய அவர் கூறியதாவது:-

    மக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து மண்ணுக்கு தேவையான ஒரு ஆட்சியை கொடுப்பதற்கான வழியை தமிழக வெற்றிக் தழகத்தின் தலைவர் விஜய் கையில் எடுத்திருக்கிறார். பேசும் பொருள் ஆனால் தான் அது கழகம், கலகம் வந்தால்தான் தீர்வு கிடைக்கும். எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கூறிய குறைகளை ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை நிறைவேற்றவில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள், நேர்மையாக அரசியல் செய்ய விரும்புபவர்கள் விஜய்யை விரும்புகிறார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் காலம், நேரம் இருக்கிறது. கூட்டணி கட்சியினர் சீட்டுக்காக காத்திருக்கிறார்கள், சீட்டு கிடைக்கவில்லை என்றால் நல்லவர்கள் எங்களை தேடி வருவார்கள். அரசியலை பொறுத்தவரை நேர்மையான விமர்சனத்திற்கு பதில் சொல்லலாம் என்பதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார்கள். தவறு செய்பவர்களை சுட்டிக்காட்டுவதற்காக பாசிசமும் பாயாசமும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    நாங்கள் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. எங்கள் மீது குற்றம் சுமத்த வேண்டிய காரணம் என்ன? அச்சுறுத்துவீர்கள், அவமானப்படுத்துவீர்கள், ஆட்சி அதிகாரத்தை வைத்து பயமுறுத்துவீர்கள். இதெல்லாம் விஜய் அண்ணனிடம் பலிக்காது.

    அவரவர்கள் அவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு அடுத்தவர்களை வீழ்த்துவதற்கான வேலையை பார்க்கிறார்கள். இந்த கட்சிதான் மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா, அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க., காங்கிரஸ் தவிர வேறு கட்சிகளே இல்லையா? மக்களுக்கான பணியை செய்தால் உங்களை விமர்சனம் வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க., அ.தி.மு.க. என மக்களுக்கு நல்லது செய்தால் ஆட்சி பிடிப்பதற்கு எதற்கு போட்டி வருகிறது? மக்கள் யாராவது நிம்மதியாக இருக்கிறார்களா?

    மதுரையில் ஒத்தக்கடை நரசிங்கம்பட்டியில் பாறைகள் உடைக்கப்பட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டது, அதற்கு தீர்வு கிடைத்ததா? தீர்க்க வேண்டிய, திருத்தப்பட வேண்டிய விஷயம் தமிழ்நாட்டில் நிறைய இருக்கு. கூட்டணி என்பது வியூகம்தான், அவரவர் கருத்தை கூறுவார்கள். இது அனைத்திற்கும் இப்போது பதில் சொல்வது பொருத்தமாகாது.

    எத்தனை ஆண்டு காலமாக என் தாய் ஒரே கட்சிக்குதான் சாகும் வரை வாக்களிப்பேன் எனக் கூறிவந்தார். தற்போது முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதாக கூறியிருக்கிறார். இது ஒரு சான்று, இதேபோல் ஓராயிரம் சான்று உள்ளது. தமிழக வெற்றி கழகத்தை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    • பேரணி மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்பிருந்து காந்தி மியூசியம் வரை நடைபெற்றது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி என்ற பட்டியலின கல்லூரி மாணவர் புல்லட் ஒட்டியதால் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த வாலிபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அரிவாள் வெட்டில் கை துண்டிக்கப்பட்ட அந்த மாணவர் சிகிச்சைக்கு பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

    இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் 3 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் புல்லட் ஓட்டியதால் பட்டியலின மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று புல்லட் பேரணி நடை பெற்றது.

    கோர்ட்டு அனுமதி பெற்று தொடங்கிய இந்த பேரணி மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்பிருந்து காந்தி மியூசியம் வரை நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.

    இந்த பேரணியில் கலந்து கொண்ட 170 பேர் மீது தல்லாகுளம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பெண்கள் உள்ளிட்ட 170 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருக்கல்யாணம் முடிந்து இரவு மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர்.
    • பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    அங்கு திருக்கல்யாணம் முடிந்து இரவு மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர். எனவே அன்றைய தினம் காலை 4 மணி முதல் இரவு சுவாமி கோவிலை வந்தடையும் வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். மேலும் பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 2 ஏக்கர் நிலத்தை கோபாலகிருஷ்ணன்- தமிழ்ச்செல்வி தம்பதியர் தானமாக வழங்கியுள்ளனர்.
    • தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய தானம்.

    மதுரை மாவட்டம் மேலூர அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடு மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை கோபாலகிருஷ்ணன்- தமிழ்ச்செல்வி தம்பதியர் தானமாக வழங்கியுள்ளனர்.

    தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தங்களது நிலத்தை தானமாக வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நிலத்தை வழங்கிய தம்பதிக்கு கிராம மக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

    • உயர்மட்ட குழுவின் கீழ், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கான ஆலோசனை குழு அமைக்க வேண்டும்.
    • ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

    மதுரை:

    தேனி மாவட்டத்தை சேர்ந்த சப்னா, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "உயர்மட்ட குழுவின் கீழ், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கான ஆலோசனை குழு அமைக்க வேண்டும். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

    இது தொடர்பாக கடந்த 2021-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதன் தொடர்பான வழிகாட்டுதல்களையும் பிறப்பித்தது. இருப்பனும் பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழு முறையாக இயங்குவதில்லை.

    ஆகவே அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழுமம் சரியாக இயங்கி பள்ளி மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, "அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    • ஜெயலலிதாவின் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னணி திட்டமாக இருந்தது.
    • ஏழை, எளியோருக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கலந்துகொண்டு பேசியதாவது:-

    உசிலம்பட்டி பகுதி மக்கள் எப்போதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது அளவற்ற அன்பு செலுத்தி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் கட்சிக்கு முதல் அங்கீகாரம் கொடுத்து வெற்றி பெறச் செய்தவர்கள் உசிலம்பட்டி மக்கள் தான். ஏழை, எளியோருக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

    ஆனால் தி.மு.க. இன்று மக்களை கசக்கி பிழிகிறது. ஆட்சிக்கு வந்த இந்த 46 மாதத்தில் எதையும் செய்ய வில்லை. ஜெயலலிதாவின் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னணி திட்டமாக இருந்தது.

    காவிரி, முல்லைப் பெரியாறு நதிகளுக்கு மிகப் பெரிய தீர்வை பெற்றுத்தந்து மத்திய அரசிடமிருந்து நிதியை முறையாக பெற்று சிறப்பு திட்டங்களையும் தமிழகத்தின் உரிமைகளை யும் நிலைநாட்டினார்.

    தி.மு.க. மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்தி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் பாதிப்படைகின்றனர்.

    தினந்தோறும் ஜாதி அடிப்படையிலும், மொழி ரீதியிலும் வன்முறைகள் தான் தொடர்கிறது. பாலி யல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி காலத்தை நகர்த்தி அடுத்த ஆண்டு ஆட்சிக்கு வந்துவிடலாம் என தி.மு.க.வினர் பகல் கனவு காண்கின்றனர். அதை முறியடிக்க வேண்டும். தமிழகத்தை அ.தி.மு.க.வால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என மக்கள் நம்புகி றார்கள்.

    ஜெயலலிதாவின் மறை விற்கு பிறகு அ.தி.மு.க. பல நெருக்கடி சவால்களை சந்தித்தது. இன்னும் நூறாண்டு ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலி தாவின் கனவை கோடிக்கணக்கான தொண்டர்கள் மனதில் தாங்கி நிற்கிறார்கள்.

    அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியா கும். விருப்பு, வெறுப்புகளை மறந்து பொதுநலத்துடன் செயல்பட வேண்டும்.

    ஜெயலலிதா என்னும் நான் என்று, நம் தமிழ் மண்ணில் எப்போதெல்லாம் உச்சரிக்கப்பட்டதோ இந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வாக வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவோம்.

    தமிழக மக்களின் நம்பிக்கையும் இது தான். அனைவரும் ஒன்றிணை வோம், வென்று காட்டு வோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். வருகிற காலம் பொற்காலமாக அமையும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்கச் செய்து வெற்றி பெற வைப்பதே எனது லட்சியம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • அரசு தரப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க உத்தரவு.

    அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விராணையின்போது, அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அரசு தரப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    • விவசாயத்துக்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
    • வணிக ரீதியிலான தாமரை செடிகளை பயிரிடுவது தான் இதுபோன்ற அவலநிலைக்கு காரணம்.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு நீர்ப்பாசன திட்டத்தலைவர் வின்ஸ் ஆன்டோ, மீன் உற்பத்தி பண்ணையாளர்கள் அமைப்பின் தலைவர் சகாயம் என்ற அய்யப்பன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய அணைகள், நீர்ப்பாசன கால்வாய்கள், ஓடைகள், குளங்கள் போன்றவை ஏராளமாக உள்ளன. நீர்நிலைகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி நெல், வாழை, காய்கறிகள், ரப்பர், மரவள்ளிக்கிழங்கு, மிளகு, கிராம்பு மற்றும் பிற தானியங்கள் பயிரிடப்படுகின்றன.

    இங்கு ஆழமற்ற நீர்நிலைகளில் தாமரை தாவரங்கள் வளருகின்றன. இது அகலமான பச்சை இலைகளையும், நறுமணம் கொண்டதாகவும் உள்ளது. தாமரை இலைகள் குளங்களின் அடிப்பகுதியில் சூரிய கதிர்கள் விழுவதைத் தடுக்கின்றன. இதேபோல தாமரைகளை வணிக நோக்கத்தில் நீர்நிலைகள், கால்வாய்களில் குறிப்பிட்ட தரப்பினர் பயிரிடுகின்றனர்.

    இதன் காரணமாக நீர்நிலைகள் மாசுபடுகின்றன. விவசாயத்துக்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. நீர்நிலைகள், கால்வாய்களில் தாமரை செடிகளில் விவசாயிகள் சிக்கி அவதிப்படும் நிலையும் தொடர்ந்து வருகிறது. வணிக ரீதியிலான தாமரை செடிகளை பயிரிடுவது தான் இதுபோன்ற அவலநிலைக்கு காரணம்.

    எனவே சட்டவிரோதமாக வணிக ரீதியில் நீர்நிலைகள், கால்வாய்களில் தாமரை செடிகளை பயிரிடுபவர்கள் மீது நடவடிக்கை கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் மனுவின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக தாமரை பயிரிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சி.டி.பெருமாள் ஆஜராகி, குளங்களில் மட்டுமே தாமரை செடிகள் தானாக வளர்ந்து கிடக்கின்றன. இதனை வணிகரீதியில் பயிரிடுவது சட்டவிரோதம் என வாதாடினார்.

    விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து குமரி மாவட்ட கலெக்டர், கோதையாறு வடிகால் நீர்பாசன செயற்பொறியாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

    ×