search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parivettai"

    • அன்னதானம் வழங்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளன்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டார். பின்னர் அங்குள்ள பால் கிணற்றின் அருகே மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயணசுவாமி பரிவேட்டையாடினார்.

    இதன் அடையாளமாக கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் அம்பு எய்தினார். அதன் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    • அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இன்று மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    சாணார்பட்டியை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே அக்கரைபட்டியில் காளியம்மன், ஞானவிநாயகர், கன்னிமார், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, சாமி சாட்டுதல் மற்றும் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    திருவிழாவின் பாரம்பரிய நிகழ்ச்சியான பாரிவேட்டை நேற்று மாலையில் நடந்தது. இதில், ஒருவர் புலி வேடம் அணிந்திருந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் வேட்டி அணிந்து, முண்டாசு கட்டியபடி கைகளில் கம்பு, ஈட்டியுடன் வந்து புலி வேடம் அணிந்தவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து பாரிவேட்டை நிகழ்ச்சியை தத்ரூப காட்சியை அரங்கேற்றினர்.

    பண்டைக்காலத்தில் அந்த பகுதி, அடர்ந்த வனமாக இருந்ததால் கிராம மக்கள் தங்களது பாதுகாப்புக்காக விலங்குகளை வேட்டையாடியதை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். திருவிழாவில் அக்கரைபட்டி, கம்பிளியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி அனுப்பி வைத்தனர்.
    • சுமார் 5 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்காரர் தெய்வத்தை குலதெய்வமாக வணங்கும் 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து 3 நாட்களுக்கு பின்னர் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனைசிறுவயல் கிராமத்தில் உள்ள குளத்தில் நீராடி ஆயுதங்களுடன் பாரிவேட்டைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்தாண்டும் இந்த விழா நடைபெற்றது.

    முன்னதாக நாயத்தான்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்துகொண்டு அரண்மனைசிறுவயல் குளத்தில் நீராடிய பின்னர் அங்குள்ள பாரிவேட்டை திடலில் கிராம அம்பலக்காரர்கள் அமர்ந்து வழிபாடு நிகழ்ச்சியை நடத்தினர்.

    அதன் பின்னர் அவர்கள் பாரிவேட்டைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களுடன் வேட்டைக்கு சென்றனர். அவர்களை பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு வனத்துறை சார்பில் பாரிவேட்டைக்கு தடை விதிக்கப்பட்டதால் சம்பிரதாயத்திற்காக சிறிது தூரம் அவர்கள் நடந்து சென்று வந்தனர். அதன் பின்னர் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் அரண்மனைசிறுவயல் கிராமத்தில் இருந்து புறப்பட்டு தங்களது சொந்த கிராமத்திற்கு சென்று 15 நாட்கள் வரை விரதம் கடைபிடிப்பது வழக்கம்.

    அவ்வாறு விரதம் இருக்கும் இந்த நாட்களில் வீடுகளில் எண்ணெய் பயன்படுத்தி சட்டியில் சமைப்பதோ அல்லது தாளிப்பதோ கிடையாது. மேலும் அவர்கள் வெளியூர் பயணங்களுக்கும் செல்வதில்லை என்று அந்த ஊர் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • நம்பெருமாளுக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் நாட்களில் சிறப்பு புறப்பாடுகளும், வைபவங்களும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார் சகிதம் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார்.

    நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் உள்ள கனு மண்டபம் வந்து சேர்ந்தார்.

    அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள் மாலை 4.30 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு, பாரிவேட்டை நடத்தியபடி தெற்குவாசல் பகுதி ராஜகோபுரம் வரை வந்து பின்னர் கோவிலுக்கு திரும்பினார்.

    இதில் திரளான பக்தர்கள் தெற்குவாசல் கடைவீதியில் இருபுறங்களிலும் காத்திருந்து, குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தை மாதம் கரிநாளில் நெல்லையப்பர், வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இவ்வாறு நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது, காந்திமதி அம்பாள், "கரிநாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது" எனத் தடுக்கிறார். ஆனால் தடையை மீறி, நெல்லையப்பர் பரி வேட்டைக்கு சென்றுவிடுகிறார். இதனால் கோபம் அடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடித்து திரும்பும் போது, கோவில் கதவை மூடியதாகவும், அதன் பின் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட, "திருமுருகன் பூண்டி பதிகம்" பாடிய பின் கோவில் நடை திறந்துள்ளதாக நிகழ்வு அமைந்துள்ளது.

    அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியாக வெள்ளிக் குதிரை வாகனத்தில், கண்ணப்ப நாயனாருடன், கோவிலில் இருந்து புறப்பட்டு பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுவாமி கோவிலுக்கு திரும்பினார்.

    சுவாமி கோவிலுக்கு வந்த போது, அம்பாளின் ஊடலினால், சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த "பதிகம்" பாடி, ஊடல் தீர்த்து வைத்தப் பின், கோவில் கதவு திறந்து சுவாமி கோவிலுக்குள் நுழைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.
    • 11-ம் நாளான வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோவில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் தேரோட்டத் திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த 1-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்

    . திருவிழாவின் 8-ம் நாளான நேற்று பரிவேட்டை விழா நடந்தது. இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டார். பின்னர் அங்குள்ள பால் கிணற்றின் அருகே மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயணசுவாமி பரிவேட்டையாடினார்.

    இதன் அடையாளமாக கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் அம்பு எய்தினார். தொடர்ந்து அய்யா கோவிலுக்கு எழுந்தருளினார். அதன் பின் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் களக்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யா சிவ, சிவ, அரகரா, அரகரா என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    11-ம் நாளான வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நெற்பயிர்கள் செழித்தோங்கி, அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அந்த நெல்மணிக்கதிர்கள் அங்கிருந்து மேள, தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    பின்னர், பகவதி அம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்தினர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. இதையடுத்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்த நெற்கதிர்களை தங்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பதும், விளை நிலங்களில் அந்த நெல்மணிகளை தூவினால் அந்த ஆண்டு பயிர்கள் செழித்து வளரும் என்பதும் ஐதீகம் ஆகும். இதனால் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் போட்டி, போட்டு நெற்கதிர் பிரசாதத்தை வாங்கினர்.

    நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு நேற்று பகவதி அம்மன் தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்த பரிவேட்டை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, அன்னதானம், வாகனபவனி, நாதஸ்வர கச்சேரி, பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அன்னதானம் நடந்தது.

    மதியம் 12 மணிக்கு அம்மன் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

    இந்த ஊர்வலத்திற்கு முன்னால் பஜனை குழுவினர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பஜனை பாடி சென்றனர். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் சங்கம் சார்பில் 3 யானைகளின் மீது பக்தர்கள் முத்துக்குடை பிடித்தபடியும் பகவதிஅம்மன் உருவ படத்தை தாங்கியபடியும் அணி வகுத்து சென்றனர். அதைத் தொடர்ந்து 3 குதிரைகளில் பக்தர்கள் வேடம் அணிந்து சென்றனர்.

    மேலும் இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபெற்ற நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி ஆட்டம் போன்றவை இடம் பெற்றன. அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தின் முன்னால் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் கோட்டாரை சேர்ந்த சுப்பிரமணியன் பிள்ளை கையில் வாள் ஏந்தியபடியும், சுண்டன்பரப்பு குமரேசன் வில்-அம்பு ஏந்திய படியும் நடந்து சென்றனர். அதன் பின்னால் பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பவனி சென்றார்.

    அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளி செல்லும் போது வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம்பழம் மாலைகள் அணிவித்து தேங்காய், பழம் படைத்து திருக்கண் சாத்தி வழிபட்டனர். ஊர்வலம் சன்னதி தெரு, தெற்குரதவீதி, ரெயில்நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, மகாதானபுரம் தங்கநாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலையில் மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடைந்தது.

    அங்கு அம்மன் பாணா சுரன் என்ற அரக்கனை (இளநீர் வடிவில் இருக்கும் அரக்கன்) வேட்டையாடி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது.

    பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சியும், காரியக்கார மடத்துக்கு சென்று விட்டு அங்கு இருந்து வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

    இரவு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஆண்டுக்கு 5 நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

    பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துபாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் கன்னியாகுமரியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டு இருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டன.

    கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பரிவேட்டை திருவிழாவில் பங்கேற்க வசதியாக நேற்று பகல் 12 மணிக்கு மேல் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீ ராமச்சந்திரன் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினமும் அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் போன்றவை நடந்தன. விழாவின் நிறைவு நாளான நேற்று பரிவேட்டை நடைபெற்றது. இதையொட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக முத்துக்குடையுடன், சிங்காரி மேளம் முழங்க யானை மற்றும் குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டார்.

    ஊர்வலம் சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு சன்னதிதெரு, நங்கை நகர், கன்னியாகுமரி மெயின் ரோடு வழியாக வழுக்கம்பாறை சந்திப்பை சென்றடைந்து. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு அக்கறை, பேரம்பலம், மேலத்தெரு, வடக்குத்தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அம்மன் வீதி உலா வந்த போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருக்கண் சாத்தியும், மலர் தூவியும் வழிபட்டனர்.
    ×