search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கை விஞ்சி சாதனை
    X

    சக்கரசாமந்தம் கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக டிராக்டர் மூலம் நிலத்தை உழுது ஆயத்த பணி நடைபெற்றது.

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கை விஞ்சி சாதனை

    • குறுவையில் 49 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு இந்த உச்ச நிலை எட்டப்பட்டுள்ளது.
    • குறுவையை போல சம்பா பருவ நெல் சாகுபடியிலும் இலக்கை விஞ்சி சாதனை நிகழ்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர் ,மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி மாவட்ட பாசனத்துக்கு இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால், குறுவை பருவ நெல் சாகுபடிப் பரப்பில் இலக்கை விஞ்சும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையும் விஞ்சி 1.81 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு, வளர்ச்சி பருவத்தில் உள்ளது.

    குறுவையில் 49 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு இந்த உச்ச நிலை எட்டப்பட்டுள்ளது.

    இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 1.50 லட்சம் ஏக்கரை விஞ்சி 1.53 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் 32,800 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 10,190 ஏக்கர் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, மொத்தத்தில் 42,990 ஏக்கராக உயர்ந்தது.

    டெல்டா மாவட்டங்களில் நாகை மாவட்டத்தில்தான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 23 சதவீதம் கூடுதல் பரப்பில் பயிரிடப்பட்டு, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்கின்றனர் வேளாண் துறையினர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 92,500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் கடந்து 95,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4.72 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான அளவுக்கு நீர் வரத்து உள்ளது.

    இதனால், குறுவையைப் போல சம்பா பருவ நெல் சாகுபடியிலும் இலக்கை விஞ்சி சாதனை நிகழ்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஆனால், குறுவை சாகுபடிப் பரப்பளவு அதிகரித்து விட்டதால், சம்பா பருவ நெல் பயிர் பரப்பு இயல்பான அளவை விட குறைவாகவே இருக்கும் என்கின்றனர் வேளாண் துறையினர்.

    இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.85 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 1.12 லட்சம் ஏக்கரிலும் சம்பா சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.

    நாகை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 1.80 லட்சம் ஏக்கரிலும் சம்பா, தாளடி மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    என்றாலும், தாளடியில் இயல்பான அளவை விஞ்சும் என்ற நம்பிக்கையுடன் வேளாண் துறையினர் உள்ளனர்.

    காவிரி நீர் வரத்து, அவ்வப்போது பெய்யும் பருவ மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பாவுக்கும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

    கடந்தை ஆண்டை போல நிகழாண்டும் தண்ணீர் பிரச்னை இருக்காது என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் தகட்டூர் என். செல்வகுமார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்:-

    மேட்டூர் அணையில் தற்போதைக்கு நீர்மட்டம் குறையாது. மீண்டும் வருகிற 25 ஆம் தேதிக்கு பிறகு மழை இருக்கும்.

    அப்போது மேட்டூர் அணைக்கு 50,000 முதல் 1 லட்சம் கன அடி வீதம் வரை தண்ணீர் வரத்து இருக்க வாய்ப்புள்ளது.

    இதன் பின்னர், செப்டம்பர் மாதத்தில் 2 முதல் 4 முறை தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    இவற்றில் இரு முறை மழை வலுப்பெறும். எனவே, செப்டம்பரிலும் ஏறத்தாழ ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வர வாய்ப்பு இருக்கும்.

    இதன் காரணமாக தென் மேற்கு பருவ மழை முடியும் வரை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியிலேயே தொடரும்.

    இதேபோல, வட கிழக்கு பருவ மழையும் நன்றாக பெய்யும் என்பதால், அப்பருவத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் தேவைப்படாது.

    கடந்த ஆண்டை போலவை நிகழாண்டும் வட கிழக்கு பருவ மழை அதிகமாகவே இருக்கும். எனவே, சம்பா பருவத்திலும் தண்ணீர் பிரச்னை இருக்காது.

    மேலும், ஜனவரியில் அணை மூடும்போது நீர்மட்டம் 100 அடிக்கும் அதிகமாகவே நீடிக்கும் என்றார்.

    Next Story
    ×