என் மலர்
காஞ்சிபுரம்
- அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சிவருத்ரய்யா (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கென சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோர் தொடங்கவிருக்கும், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.
இதற்கு தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 044 27238837, 27238551 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது 7904559090, 95669 90779 செல்போன் எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர், முகவர்கள் என பலர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
- கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி அம்பலமாகி வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
காஞ்சிபுரம்:
சென்னையை மையமாக கொண்டுள்ள ஆருத்ரா நிதி நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர், முகவர்கள் என பலர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், செய்யார், உத்திரமேரூர் மற்றும் மானாமதி பகுதிகளில் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் நாகராஜ் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை ஜெம் நகர் அருகாமையில் வசித்து வரும் முதியோர்களான ஸ்டீபன் (63) மற்றும் சுகுணா தேவி (59) தம்பதியின் வீட்டை ரூ.26 லட்சத்திற்கு தனது பெயருக்கு நாகராஜ் மாற்றியுள்ளார். அதில் ரூ.6 லட்சத்தை முதியவர் ஸ்டீபனின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு, மீதமுள்ள ரூ.20 லட்சத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்து 3 மாதங்கள் மட்டுமே மாதம் ரூ.1 லட்சம் கிடைத்த நிலையில், கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி அம்பலமாகி வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த முகவர் நாகராஜ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் முகவர் நாகராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நாகராஜ் ஒரு சிலருடன் ஸ்டீபன், சுகுணா தேவி வசிக்கும் வீட்டுக்கு சென்று அவர்களின் செல்போனை பறித்து கொண்டு அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினர். வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசி விட்டு வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேசில் ஆனந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
- 2-ந்தேதி திருத்தேர் உற்சவம் நடக்கிறது.
- 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று முதல் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் முருகர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 26-ந்தேதி மயில்வாகன வீதி உலாவும், ஜூன் 2-ந்தேதி திருத்தேர் உற்சவமும், ஜூன் 3-ந்தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
- புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும்.
- புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் புத்தகரம் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
புத்தர் கோவில் அமைந்திருக்கும் இடம் புத்த விகாரம் என்று அழைக்கப்படும். புத்த கிரகம், புத்த விகாரம் என்பது காலப்போக்கில் மருவி புத்தகரம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கும், ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும், இடையே உள்ள இடத்தில் குளம் சீரமைத்தபோது அழகிய புத்தர் சிலை ஒன்று கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது.
இந்த புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும், செம்பாதி தாமரை அமர்வு உடன் கால்களும், சிந்தனை முத்திரையுடன் கைகளும், தலைமுடி சுருள் சுருளாகவும், ஞான முடி தீப்பிழம்பாகவும், கழுத்தில் மூன்று கோடுகளும், இடது புற தோள் மட்டும் சீவர ஆடையால் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலையின் பின்புறம் தலைப்பகுதியில் தாமரை மலர் மீது அறவாழி சக்கரம் அமைந்துள்ளது.
பின்புறம் உள்ள உடலின் முதுகுப் பகுதியில் சீவர ஆடை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை 16-ம் நுற்றாண்டுக்கு முற்பட்ட புத்தர் சிலையில் காண முடியும்.
தமிழகத்தில் காணப்படும் புத்தகரங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள புத்தகரத்தில் மட்டுமே பவுத்த அடையாளங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.
இதனை ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிஷிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வு குழுவினர் கடந்த 2009-ம் ஆண்டிலேயே கண்டறிந்து உள்ளனர்.
மேலும் புத்தகரம் கிராமப் பகுதியில் பழங்கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதும், பல்லவர் காலத்திற்கு முந்திய குடியேற்றங்களும் இருந்து உள்ளது எனவும் தெரியவந்து உள்ளது. அத்தகைய சிறப்புகளை உடைய புத்தர் சிலையை தற்பொழுது வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம் தலைவர் அஜய குமார் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதியைப் பெற்று புத்த விகாரம் எனும் புத்தர் கோவில் சுற்றுலா துறையின் மூலம் கட்டப்பட உள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்து ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கான ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சி துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
- காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூருக்கு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி திடீரென ராஜவேலு மீது மோதியது.
- போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த மாகரல், பெரிய காலனியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது64). இவர் இன்று காலை வீட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூருக்கு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி திடீரென ராஜவேலு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜவேலு உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்ததும் மாகரல் போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது.
- பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை ஹாஜி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஏ.டி.எஸ்.பி.அருண், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒலிமுகமதுபேட்டை அருகே ஹாஜி நகர் பகுதியில் உள்ள பிலால் என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் உள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த பிலால் (வயது 37), இடைதரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் (52), திருக்காலிமேட்டை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
- மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
- தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர்:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு இடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு ராஜீவ் காந்தி உருவம் பொறிக்கப்பட்ட படத்திற்கு அருகே பழங்கள், குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. சர்வ மத பிராத்தனை, இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, கே.வி.தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை, விஜய்வசந்த் எம்.பி., மாநில எஸ்.சி.எஸ்.டி.துணை தலைவர் ஐயப்பன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் மற்றும் ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ராஜீவ் அமைதி ஜோதி எடுத்து செல்லப்பட்டது. இந்த ஜோதி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக டெல்லி சென்று அடைந்து அங்குள்ள ராஜீவ் காந்தி நினைவு இடத்தில் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
இதற்கு ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் 13 கிராம மக்களும் கிராம சபை கூட்டத்தின்போது பரந்தூர் புதிய விமான நிலையம் வருவதை எதிர்த்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது.
இதைத்தொடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் 13 கிராமங்களை சேர்ந்த விமானநிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் 300-வது நாள் போராட்டத்தை இன்று காலை திடீரென வயலூர் பகுதியில் உள்ள ஏரியில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
- வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
- சூப்பர் மார்க்கெட்டில் 3 பெண்கள் திருடி சென்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பூஜை பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் போன்ற அனைத்து விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு வாடிக்கையாளர்கள் தாங்களாகவே தேவையான பொருட்களை சுயசேவையாக எடுத்து கடைசியில் பில் போட்டு அதற்கான பணம் செலுத்தி பின்னர் பொருட்களை அதற்கான கவுண்டரில் பெற்று செல்வர்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை கடைக்கு வந்த 3 பெண்கள் பொருட்கள் வாங்குவதாக சொல்லிவிட்டு பொருட்களை எடுத்து வைக்க தேவையான கூடையை எடுத்து சென்று மளிகை பொருட்கள், பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கு பொருட்கள் என்று 1 மணிநேரத்திற்கும் மேலாக எடுத்துள்ளனர்.
ஆனால் கவுண்டர் வரும்போது குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே இருந்தது. அவற்றிற்கு மட்டுமே பில் போட்டனர். ஒரு பெண் ஸ்பூன் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு 80 ரூபாயும், மற்றொரு பெண் குளிர்பானம் உள்ளிட்ட பொருட்கள் என 70 ரூபாயும் என மொத்திலேயே 150 ரூபாய்க்கே பணம் செலுத்தி விட்டு பொருட்களை பெற்று கொண்டு சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் ஸ்ரீராம் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்தபோது அந்த பெண்கள் பொருட்கள் எடுத்துகொண்டு அவற்றை ஆளில்லா இடத்திற்கு வந்து தங்களது சேலைக்குள் ஒரு பையை கட்டி கொண்டு வந்து மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களையெல்லாம் அதில் போட்டு கொண்டு சென்றது தெரிய வந்தது.
சுமார் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை அவர்கள் திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் 3 பெண்கள் திருடி சென்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.
- அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக விளங்கி வருகின்றது.
இங்கிருந்து சென்னை, வேலூர், திண்டிவனம், செங்கல்பட்டு, திருப்பதி மார்க்கமாக தினமும் 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எப்போதுமே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக விளங்குகின்றது.
இவ்வளவு மக்கள் வந்து செல்கின்ற இந்த இடத்தில் போதிய போலீசார் பாதுகாப்புக்கு இல்லாததாலும், பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யாததாலும் அதிக சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது.
பஸ் நிலையத்தின் உள்ளே சுற்றி திரியும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பஸ் நிலையத்துக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமும், பொது மக்களிடமும், மாணவ-மாணவிகளிடமும் பாராபட்சம் இல்லாமல் பணம் பறிக்கும் சம்பவம் தினந்தோறும் அரங்கேறி வருகின்றது.
அது மட்டுமல்லாமல் திருநங்கைகளுக்குள் அவ்வப்போது போட்டி பொறாமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ஆபாசமாக பேசிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற 27 வயதுடைய திருநங்கை காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். அஞ்சலி கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிக நடமாட்டம் உள்ளபஸ் நிலையத்தின் உள்ளே முககவசம் அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் திடீரென அஞ்சலி மீது பாய்ந்து அரிவாளால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அஞ்சலி அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.
- விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
- தவணைத் தொகையினை பெறுவதற்கு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மே 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 26.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே. விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13வது தவணைத் தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம். கிசான் இணையதளத்தில் பதிவுசெய்து உறுதிசெய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல்ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது கைபேசியில் வைத்து உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவுகள் மேற்கொள்ள ஆதார் அட்டை நகல். புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவற்றுடன் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.






