search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாலாஜாபாத் அருகே சுற்றுலாத்துறை சார்பில் புத்தர் கோவில்
    X

    வாலாஜாபாத் அருகே சுற்றுலாத்துறை சார்பில் புத்தர் கோவில்

    • புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும்.
    • புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் புத்தகரம் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    புத்தர் கோவில் அமைந்திருக்கும் இடம் புத்த விகாரம் என்று அழைக்கப்படும். புத்த கிரகம், புத்த விகாரம் என்பது காலப்போக்கில் மருவி புத்தகரம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கும், ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும், இடையே உள்ள இடத்தில் குளம் சீரமைத்தபோது அழகிய புத்தர் சிலை ஒன்று கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது.

    இந்த புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும், செம்பாதி தாமரை அமர்வு உடன் கால்களும், சிந்தனை முத்திரையுடன் கைகளும், தலைமுடி சுருள் சுருளாகவும், ஞான முடி தீப்பிழம்பாகவும், கழுத்தில் மூன்று கோடுகளும், இடது புற தோள் மட்டும் சீவர ஆடையால் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலையின் பின்புறம் தலைப்பகுதியில் தாமரை மலர் மீது அறவாழி சக்கரம் அமைந்துள்ளது.

    பின்புறம் உள்ள உடலின் முதுகுப் பகுதியில் சீவர ஆடை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை 16-ம் நுற்றாண்டுக்கு முற்பட்ட புத்தர் சிலையில் காண முடியும்.

    தமிழகத்தில் காணப்படும் புத்தகரங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள புத்தகரத்தில் மட்டுமே பவுத்த அடையாளங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

    இதனை ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிஷிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வு குழுவினர் கடந்த 2009-ம் ஆண்டிலேயே கண்டறிந்து உள்ளனர்.

    மேலும் புத்தகரம் கிராமப் பகுதியில் பழங்கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதும், பல்லவர் காலத்திற்கு முந்திய குடியேற்றங்களும் இருந்து உள்ளது எனவும் தெரியவந்து உள்ளது. அத்தகைய சிறப்புகளை உடைய புத்தர் சிலையை தற்பொழுது வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம் தலைவர் அஜய குமார் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதியைப் பெற்று புத்த விகாரம் எனும் புத்தர் கோவில் சுற்றுலா துறையின் மூலம் கட்டப்பட உள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்து ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கான ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சி துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

    Next Story
    ×