என் மலர்tooltip icon

    கடலூர்

    சொத்தை உறவினர்கள் அபகரித்ததால் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கடலூர் கலெக்டர் முன்பு பிளேடால் கழுத்தை அறுத்த பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அமுதா (வயது 40). இவர் இன்று காலை குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்.

    பின்பு அவர் வரிசையில் நின்று உள்ளே சென்றார். அப்போது அங்கு இருந்த கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் மாவட்ட அதிகாரி முன்னிலையில் அமுதா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்தார். அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்தது.

    இதைப்பார்த்ததும் கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு ஓடி வந்தனர். அமுதா பிளேடால் கழுத்தை அறுத்ததை தடுத்து நிறுத்தினர்.

    உடனே அமுதாவிடம் கலெக்டர் அன்புச்செல்வன், ஏன் கழுத்தை அறுத்து கொண்டீர்கள்? என்று கேட்டார். அப்போது அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனது கணவர் சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். எனது கணவர் இறந்த பின்னர் அவருடைய உறவினர்கள் எங்களை ஏமாற்றி, எங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்தை அபகரித்து கொண்டனர்.

    இதனால் எங்களுக்கு வீடு உள்ளிட்ட எதுவும் இல்லை. நாங்கள் நடுதெருவில் நிற்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்தேன். இப்படி கஷ்டப்படுவதை விட உயிரை மாய்த்து கொள்ளலாம் என முடிவு செய்து பிளேடால் எனது கழுத்தை அறுத்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து அமுதாவுக்கு கலெக்டர் அன்புச்செல்வன் அறிவுரை கூறினார். மேலும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் உறுதி கூறினார்.

    பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட அமுதாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு போலீசாரிடம் கலெக்டர் தெரிவித்தார். உடனே அங்கிருந்த போலீசார், அமுதாவை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்பு மனு கொடுக்க வந்த பெண் தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்று கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    கடலூர்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைவர் கலைஞர் நம்மை விட்டு மறைந்த பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்ய ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா? வெற்றிடத்தை நிரப்பிட முடியுமா? என்று தொடர்ந்து சில அரசியல் வாதிகள், சொல்லிக்கொண்டு அலைந்தார்கள். யார்-யாரோ சொன்னார்கள் டாக்டர்கள் சொன்னார்கள், பெரிய டாக்டர் சொன்னார், சின்ன டாக்டரும் சொன்னார், டாக்டர் அம்மாவும் சொன்னார். தி.மு.க. காணாமல் போக போகிறது, 4-வது இடத்துக்கு வரப்போகிறது, தி.மு.க. இந்த தேர்தலோடு அழிய போகிறது என்று சொன்னார்கள். என்ன நடந்து இருக்கிறது. அவர்கள் ஆசையில் மண் விழுந்திருக்கிறது அது தான் நடந்து முடிந்து இருக்கிறது.

    தலைவர் கலைஞர் இல்லாமல் சந்திக்கிற முதல் தேர்தல் என்பதால் என்னையும் அறியாமல் ஒரு பதற்றம் இருந்தது. ஏனெனில் தலைவர் கலைஞரின் பெயரை காப்பாற்ற வேண்டுமே என்பது தான். ஆனால் வாக்காளர்களாகிய உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை. தேர்தலின் போது நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தான் தேர்தலில் ஈடுபட்டோம் அந்த முழக்கம் வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது.

    நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறீர்கள், ஆனால் ஆட்சிக்கு வர முடியாத படி 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியவில்லையே என்று நம்மை விமர்சனம் செய்கிறார்கள். நம்முடைய தோழர்களிடத்திலும் அந்த சோர்வு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் கவலைப்படாதீர்கள். இப்போது சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதில் என்னென்ன நடக்கப்போகிறதோ என்பதை யாமறியேன் பராபரமே. இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் தான் இந்த ஆட்சிக்கு ஆயுள் இருக்கிறது, ஆயுள் முடிந்து ஆட்சிமாற்றமா? ஆயுள் முடிவதற்குள் ஆட்சி மாற்றமா? என்று ஒரு கேள்விக்குறி தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது. எதுவும் நடக்கலாம், எப்படியும் நடக்கலாம் ஆனால் ஒன்று மட்டும் உறுதி. விரைவில் இந்த ஆட்சி கவிழப்போகிறது என்பது உண்மை, அதை யாரும் மறுத்திட முடியாது.

    சட்டமன்றத்தின் இடைத்தேர்தலில் நாம் தான் வெற்றி பெற்று இருக்கிறோம். 22 இடங்களில் 13 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது. ஆகவே நம்முடைய வெற்றி என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று வெற்றி.

    அதனால் தான் இந்த வெற்றியை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த வெற்றியால் என்ன பயன்? என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நம் தாய்மொழியாக இருக்கக்கூடிய அழகு தமிழ் மொழி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒலித்ததே. ஒட்டுமொத்த மக்களின் வழக்கறிஞர்களாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறி நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததை பார்த்து பிரதமரே மனம் திறந்து பாராட்டி பேசவில்லையா? மும்மொழி திட்டம் அறிவித்தீர்களே, உடனே நாம் கண்டிக்கவில்லையா? அதற்கு பிறகு அது வாபஸ் பெறப்பட்டது. தென்னக ரெயில்வேயில் இனி தமிழில் பேசக்கூடாது, இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் தான் பேச வேண்டும் என்று ஒரு தாக்கீது வந்தது. அது வந்த அடுத்த வினாடி தென்னக ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட உத்தரவிட்டேன், உடனே தயாநிதி மாறன் தலைமையில் முற்றுகையிட்டார்கள், அடுத்த 5-வது நிமிடத்தில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்கிறீர்களே? போதுமா? இன்னும் வேண்டுமா?

    ஆனால் இங்கே ஒரு முதல்-அமைச்சர் இருக்கிறார், துணை முதல்-அமைச்சரும் இருக்கிறார். ஏறத்தாழ 32 அமைச்சர்கள் இருக்கிறார்கள், என்ன பிரயோஜனம் என்று கேட்கும் நிலையில் ஆட்சி நடக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்ட மக்கள் கிளர்ந்து எழுந்து போராடுகிறார்கள்.

    நாடாளுமன்றத்தில் நம் உறுப்பினர்கள் அதனை எதிர்த்து குரல் எழுப்புவார்கள், அந்த குரலுக்கு மதிப்பு இல்லையென்று சொன்னால் ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கிற சூழ்நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் என்று எச்சரிக்கிறேன்.

    தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. தங்கும் விடுதியில் இருக்கிறவர்கள் எல்லாம் காலி செய்து கொண்டு இருக்கிறார்கள், ஐ.டி. கம்பெனி ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் எங்களால் தண்ணீர் கொடுக்க முடியவில்லை என்று சொல்லும் நிலை. ஆனால் அந்த துறையின் அமைச்சர் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்று சொல்கிறார்.

    குடங்களோடு பெண்கள் சாலையில் அலைந்து கொண்டு இருக்கிறதை அமைச்சர் பார்க்கவில்லையா? ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாக சொல்கிறீர்களே என்ன காரணம்? தண்ணீர் தட்டுப்பாடு இல்லையென்றால் ஏன் தண்ணீர் கொண்டு வரணும்.?

    கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தின் போது, சென்னையில் உள்ள ஏரிகள் எல்லாம் வறண்டு கொண்டு இருக்கிறது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று இந்த தண்ணீர் பிரச்சினை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 110 விதியின் கீழ் கடல்நீரை குடிநீராக்கி மக்களுக்கு வழங்கக்கூடிய 4 திட்டங்களை அறிவித்தார். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினோம். அதனை விரிவாக்கும் திட்டத்தை 2013-ல் அறிவித்தார்கள். அந்த திட்டத்துக்கு நேற்று முன்தினம் தான் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள். இதில் உலக அளவில் டெண்டர் என்று சொல்லி முறைகேடு நடந்திருக்கிறது என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறோம்.

    அதேப்போல் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ராமநாதபுரத்தில் குதிரை மொழி என்கிற இடத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 4-வதாக தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றையும் 2013-ல் ஜெயலலிதா அறிவித்தார் அந்த திட்டங்களெல்லாம் என்ன ஆச்சு, சட்டமன்றத்தில் இதைப்பற்றியெல்லாம் கேட்கத்தான் போகிறோம். கலைஞர் ஆட்சியில் குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கிக்கொடுத்தோம். ராமநாதபுரம், தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களில் கூட்டுக்குடிநீர் திட்டங்களை கொண்டு வந்தோம்.

    ஆனால் இந்த ஆட்சியாளர்கள் 8 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை. இவர்கள் கவலையெல்லாம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது எப்படி? என்பதாகவே இருந்தது. இப்போது சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதனால் எந்த எம்.எல்.ஏ. நம்மிடம் இருப்பார், எந்த எம்.எல்.ஏ. நம்மை விட்டு தாவுவார் என்பதை கண்காணிப்பதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு ஒற்றர்களை காவலுக்கு வைத்திருக்கிறார்கள். அந்த ஒற்றர்களுக்கே நாங்கள் ஒற்றர்களை வைத்திருக்கிறோம். இன்னும் எடப்பாடியை ஆளவிட்டால் நாடு தாங்காது, நாட்டு மக்களும் பொறுக்கமாட்டார்கள். உங்களை நாட்டு மக்கள் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கித்தருவோம். இதற்கு முன்னோட்டமாகத்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்து உள்ளது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 5 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஆனித் திருமஞ்சனமும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

    சிதம்பரம் நடராஜர் கோயில்

    ஏனெனில் மார்கழி, ஆனி மாதத்தில் நடைபெறும் விழாவில் மூலவராகிய சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியே உற்சவராக புறப்பாடாகி தேரில் வலம் வந்து, மகா அபிஷேகமும், தரிசன நிகழ்வும் நடைபெறும். இதை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
     
    அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனித் திருமஞ்சன விழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் காலை 8 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் விழா கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

    விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் தங்கம், வெள்ளி, பூத, ரி‌‌ஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 
    ஆபாச படத்தை கணவரிடம் காட்டுவேன் என்று மிரட்டியதால் கள்ளக்காதலனை கயிற்றால் இறுக்கி கொன்றேன் என்று கைதான இளம்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 24). எம்.எஸ்.சி. பட்டதாரி.

    இவர் போலீஸ் நண்பர் குழுவில் இருந்து வந்தார். பின்னர் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள கருவை காட்டு பகுதியில் சீனிவாசன் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவரது பின்தலையில் காயம் இருந்ததால், அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டு உடலை கருவை காட்டு பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் புவனகிரி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் கீரப்பாளையம் பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கீரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி முன்பு கீரப்பாளையம் ஜே.ஜே. நகரை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி தாமரைச் செல்வி (26) சரணடைந்தார்.

    அப்போது அவர், சீனிவாசனை நானும், எனது தாய் லட்சுமியும் சேர்ந்து கொன்றோம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து சரணடைந்த தாமரைச்செல்வியை புவனகிரி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    போலீசார் தாமரைச் செல்வியை கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனது கணவர் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நான் 2 குழந்தைகளுடன் கீரப்பாளையத்தில் வசித்து வருகிறேன். 1½ ஆண்டுக்கு முன்பு சீனிவாசனை சந்தித்தேன். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்தோம். அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விவரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. இதனால் நான், கள்ளக்காதலன் சீனிவாசனிடம், இனிமேல் இங்கே வராதே என்று கூறினேன். ஆனால், அவர் நாம் உல்லாசமாக இருந்த படத்தை செல்போனில் படம் பிடித்துள்ளேன். அதை உனது கணவரிடம் காண்பித்து விடுவேன் என்றும், இணைய தளங்களில் வெளியிடுவேன் என்றும் கூறி மிரட்டினார்.


    இதனால் நான் பயந்தேன். அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இது குறித்து எனது தாய் லட்சுமியிடம் கூறினேன். அவரும் உடனே எனது வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் சீனிவாசனை போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி கூறினேன். அதன்படி அவரும் இரவு வந்தார்.

    அப்போது சீனிவாசனுக்கும், எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஆத்திரம் அடைந்த நான் சீனிவாசனை கீழே பிடித்து தள்ளினேன். இதில் அவர் தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மயங்கி கிடந்த சீனிவாசனின் கழுத்தில் நானும், எனது தாய் லட்சுமியும் சேர்ந்து கயிற்றால் இறுக்கினோம். சிறிது நேரத்தில் சீனிவாசன் மூச்சுத்திணறி இறந்து விட்டார்.

    பின்னர் அவரது உடலை நாங்கள் இருவரும் அருகில் உள்ள கருவை காட்டுக்கு தூக்கி சென்று அங்கு வீசினோம். பின்னர் அவர் வைத்திருந்த செல்போனையும் உடைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாமரைச்செல்வியின் தாய் லட்சுமியை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். லட்சுமி, தாமரைச்செல்வி ஆகிய 2 பேரையும் சிதம்பரம் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடங்கி வைத்தார்.
    கடலூர்:

    சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கடலூரில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. கடலூர் அண்ணாபாலம் அருகில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் புனித வளனார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி அண்ணாபாலம், பாரதிசாலை, தலைமை தபால் நிலையம் வழியாக டவுன்ஹாலை சென்றடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஒழிப்போம், ஒழிப்போம் போதைப்பொருட்களை ஒழிப்போம், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் இதயம், சிறுநீரகம் மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டு மரணம் ஏற்படும். ஆகவே போதைப்பொருட்களை தவிர்ப்போம் என்று கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

    இதில் கடலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுதா, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வரும் அரசு, உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், வாசக போட்டிகளில் பள்ளிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 420 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

    மேலும் இந்த கூட்டத்தில் 2016-17-ம் ஆண்டில் கலெக்டர் அன்புசெல்வன் சென்னையில் பணிபுரிந்தபோது கொடிநாள் வசூலில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்ததை பாராட்டி தமிழக கவர்னரால் வழங்கப்பட்ட கேடயம் மற்றும் சான்றிதழ் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    இது தவிர சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையினையும், 2 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையையும் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளம், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சிறுபாக்கம் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிறுபாக்கம்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகாவில் உள்ள சிறுபாக்கம் குறுவட்டத்தை சேர்ந்த 35 கிராம விவசாயிகள் கடந்த 2016-17-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீடு செய்திருந்தனர். ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. மேலும் மத்திய அரசு சிறு குறு விவசாயிகளுக்கு படைப்புழு மானியத் தொகையும், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதற்கட்ட தொகையான ரூ.2 ஆயிரமும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

    இது குறித்து வேளாண்மை துறை, வருவாய் துறை, காப்பீடு நிறுவனம் ஆகியவற்றிடம் விவசாயிகள் பலமுறை முறையிட்டும், காப்பீட்டு தொகையும், உதவித்தொகையும் வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமையில் சிறுபாக்கம் பஸ் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காப்பீட்டு தொகை மற்றும் படைப்புழு மானியத் தொகை வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.

    சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால், விவசாயிகள் தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வேப்பூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த மாணவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நரேந்திரன் (வயது 15).

    இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறையையொட்டி மாலையில் நரேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர்.

    அவர்கள் கிணற்றின் மேல் நின்று உள்ளே டைவ் அடித்தனர். கிணற்றில் ஆனந்தமாக குளித்தனர்.

    பின்னர் நரேந்திரனின் நண்பர்கள் அனைவரும் குளித்து முடித்து விட்டு கரை திரும்பினர். ஆனால், நரேந்திரனை மட்டும் காண வில்லை.

    உடனடியாக அவரது நண்பர்கள் ஊருக்குள் சென்று நரேந்திரனின் பெற்றோரிடம் கூறினர். இதை கேட்டதும் நரேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து கொண்டு கிணற்று பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். நரேந்திரனின் உடல் கிடைக்கவில்லை. இது குறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்களும் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அவர்களாலும் நரேந்திரனின் உடலை கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றினர். இரவு 11 மணி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தனர்.

    அப்போது நரேந்திரன் சேற்றில் சிக்கி பிணமாக கிடந்ததை பார்த்தனர். அதன் பின்னர் கயிறு கட்டி நரேந்திரனின் உடலை மீட்டனர்.

    மகன் உடலை பார்த்து நரேந்திரனின் பெற்றோர் கதறி அழுதனர். இதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்பு நரேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி நடைபெற்ற வருண யாகத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    கடலூர்:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வருண யாகம் நடைபெற்றது.

    இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு பக்தியுடன் சாமி கும்பிட்டார். முன்னதாக பாடலீஸ்வருக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் யாகத்தில் குடத்தில் வைத்து இருந்த புனித நீரை ஊர்வலமாக கொண்டு சென்று பாடலீஸ்வரருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இன்று காலை 42.92 அடி தண்ணீர் உள்ளது. இதனால் சென்னைக்கு 10 நாட்கள் மட்டுமே குடிநீர் அனுப்ப முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இது கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரிக்கு அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வந்தது. தற்போது கீழணை தண்ணீர் இன்றி வறண்டதால் கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை.

    லால்பேட்டையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 42.92 அடி தண்ணீர் உள்ளது. வெயில் அதிகம் இருப்பதால் தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் மட்டுமே ஏரியில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. இன்றும் அதே அளவு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.


    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 39 அடியாக இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்பிவைக்க முடியும். தற்போது 42.92 அடி நீர்மட்டம் இருப்பதாலும், ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும், தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதாலும் ஏரி நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.

    இதே நிலை நீடித்தால் சென்னைக்கு 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் அனுப்பமுடியும் என்று கூறினார்.
    வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலில், நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டார். பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு நல்லது நடக்க உள்ளது.

    தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு இயற்கையே காரணம். யாரையும் குறை சொல்வதில் எந்த பலனும் இல்லை.

    நடிகர் சங்க தேர்தல் தள்ளி போனது ஏன் என்று எனக்கு தெரிவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.
    வடலூர் அருகே சொத்து தகராறு காரணமாக கல்லால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
    வடலூர்:

    வடலூர் அருகே சொத்து தகராறு காரணமாக கல்லால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தாண்டவராயன். இவருக்கு ரவிச்சந்திரன் (வயது 62), ராமலிங்கம்(58) என்ற 2 மகன்களும், செல்வி(50) என்ற மகளும் உள்ளனர். ரவிச்சந்திரனும், ராமலிங்கமும் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளியான செல்விக்கு திருமணமாகவில்லை. அவர் ராமலிங்கம் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாண்டவராயன் இறந்து விட்டார்.

    இதையடுத்து ரவிச்சந்திரனுக்கும், ராமலிங்கத்துக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது ராமலிங்கம், செல்விக்கும் சொத்தில் பங்கு பிரித்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதில் விருப்பம் இல்லாத ரவிச்சந்திரன், செல்வி மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ரவிச்சந்திரனும், அவரது மகன் செந்தில்குமாரும் (28), ராமலிங்கம் வீட்டின் முன்பு நின்று ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.

    இந்த சத்தம் கேட்ட செல்வி, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். அப்போது ரவிச்சந்திரனும், செந்தில்குமாரும் உன்னால் தான் சொத்தை பிரிக்க முடியவில்லை என கூறி செல்வியை தாக்கியுள்ளனர். பின்னர் 2 பேரும் அவரை கல்லால் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான செல்வியின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சொத்து தகராறில் பெண் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×