என் மலர்tooltip icon

    சென்னை

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
    • சென்னை வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை சமாதானம் செய்ய கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

    இதனை தொடர்ந்து நேற்று தைலாபுரத்தில் இருந்து சென்னை வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் அவரது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் சந்தித்து பேசியுள்ளார்.

    பா.ம.க. வின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த பிறகு தற்போது தான் முகுந்தன், ராமதாஸை முதன்முறையாக சந்தித்து பேசினார்.

    முன்னதாக, நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின்போது முகுந்தன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள் என்று ராமதாஸ் கூறியிருந்தார். 

    • முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மொத்தம் 6,329 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளுக்காக அதிவேக இணையதள வசதிகளும் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தற்போது அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் பயன்பாடு தொடர்பான கூடுதல் வழிமுறைகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, கெல்ட்ரான் மூலம் வழங்கப்பட்ட அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தினந்தோறும் செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும். அவற்றின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கணினி ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

    இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆன்லைனிலும் பதிவு செய்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தை மேற்கொள்ளலாம்.
    • கே.ஒய்.சி. தராதவர்களுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படாது.

    சென்னை:

    சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர் வாங்குவதில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும், மோசடியை தடுக்கும் நோக்கிலும் இந்த திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய ஆதார் பயோமெட்ரிக்கை தங்களுக்கான கியாஸ் ஏஜென்சியில் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் இதற்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாததால் கியாஸ் சிலிண்டர் ஊழியர்களே வீடு, வீடாக இதுகுறித்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பயோமெட்ரிக்கை வழங்காவிட்டால் அவர்களுக்கு சிலிண்டர் நிறுத்தப்படும் என்ற உறுதி செய்யப்படாத தகவல் வெளியானதால் ஏராளமானவர்கள், கியாஸ் ஏஜென்சிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

    தற்போது, ஏராளமானவர்கள் பயோமெட்ரிக் பதிவு செய்து வருகிறார்கள். இதற்காக கியாஸ் ஏஜென்சிகளில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள தங்களது கியாஸ் ஏஜென்சிக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக முந்தைய கியாஸ் பில், ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அவர்களது ஆதார் கார்டு பதிவு செய்யப்பட்ட பிறகு, ஆதார் கேமரா மூலம் கருவிழி போட்டோ எடுக்கப்படுகிறது.

    ஆன்லைனிலும் பதிவு செய்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தை மேற்கொள்ளலாம். இதற்காக அவர்கள் எல்.பி.ஜி. செயலியை டவுன்லோடு செய்து, அந்த செயலிக்குள்ளேயே பயோமெட்ரிக் பதிவு செய்து கொள்ளலாம்.

    பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம், சமையல் எரிவாயு மானியங்கள் தகுதியற்ற நபர்களுக்கு செல்லாமல் தடுக்க முடியும் என்பதற்காக மத்திய அரசு இந்த முடிவு மேற்கொண்டுள்ளது.

    அதேநேரத்தில் பயோமெட்ரிக் செய்யாதவர்களுக்கு சிலிண்டர்கள் வழங்குவது நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி வருவது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    மோசடிகளை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கியாஸ் சிலிண்டர் வினியோக முறையில் பயோமெட்ரிக்கு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சிலிண்டர் வைத்திருக்கும் நுகர்வோர்கள் விரைவாக தங்களது பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    அதே நேரத்தில் கே.ஒய்.சி. தராதவர்களுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படாது. மோசடிகளை கண்டறியவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பயோமெட்ரிக் முறை செய்வது ஒவ்வொருவரின் கடமை. மோசடி இல்லாத சிலிண்டர் வினியோகத்திற்கு இது கட்டாயம்.

    இதை இண்டேன், எச்.பி., பாரத் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்வதில்லை. மத்திய அரசு முடிவுதான் இது. எனவே பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ள வேண்டும். இந்த பதிவுக்கு கால நிர்ணயம் இல்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
    • பொன்னேரி-சென்ட்ரலுக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே நாளை (திங்கட்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முழுவதுமாக ரத்து

    * சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரையில் இருந்து காலை 9.40 மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, மாலை 3.10, இரவு 9 மணிக்கு சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    பகுதி நேர ரத்து

    * செங்கல்பட்டில் இருந்து நாளை மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.

    * கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.

    சிறப்பு மின்சார ரெயில்கள்

    இதன்காரமாக இந்த 2 தேதிகளிலும் காலை 10.30 மணிக்கு சென்ட்ரல்-பொன்னேரிக்கும், காலை 11.35 மணிக்கு சென்ட்ரல் -மீஞ்சூருக்கும், மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-பொன்னேரிக்கும், மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி-சென்ட்ரலுக்கும், மதியம் 2.56 மணிக்கு மீஞ்சூர்-சென்ட்ரலுக்கும், மாலை 3.33 மணிக்கு பொன்னேரி-சென்ட்ரலுக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும்.
    • ரெயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆழ்வார் திருநகரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை:

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு நாளை நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்.06101) அதேநாள் காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும். மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து இதே தேதியில் காலை 11.20 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06102), அதேநாள் மதியம் 12.55 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரெயில்களில் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டி 2, படுக்கை வசதி பெட்டி 9, 2-வது வகுப்பு பொதுப்பெட்டி 4 மற்றும் உடைமைகளை கொண்டு செல்லும் பெட்டி (லக்கேஜ் பெட்டி) 2 என மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும்.

    இதேபோல, திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06103), அதேநாள் இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து இதேதேதியில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06104), நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும். இந்த ரெயில்களில் 2-வது வகுப்பு பொதுப்பெட்டி 10, உடைமைகளை கொண்டு செல்லும் பெட்டி (லக்கேஜ் பெட்டி) 2 என மொத்தம் 12 பெட்டிகள் இருக்கும்.

    இந்த ரெயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆழ்வார் திருநகரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும்.

    சென்னை:

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • நார்வே செஸ் தொடரில் குகேஷ் 3-வது இடம் பிடித்துள்ளார்.
    • அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நார்வே செஸ் தொடரில் அந்நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இறுதிச்சுற்று போட்டியில் கார்ல்சனை விட அதிக புள்ளிகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்குச் சென்றார்.

    10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் 3-வது இடம் பிடித்த குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2025-ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம். குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.

    • சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
    • பொதுமக்கள் மீது பழியைச் சுமத்தி தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பார்ப்பதேயன்றி வேறில்லை.

    கிளாம்பாக்கத்தில் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்காமல் பொதுமக்களை கைக் குழந்தையுடன் அலைக்கழித்த திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என த.வெ.க. துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாநகரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

    சென்னை மற்றும் புறநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கை மற்றும் அடர்த்திக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். இதற்கு மிகப் பெரிய உதாரணம். இந்த வாரம், ஜூன் 4ஆம் தேதி இரவு முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வெளியூருக்குச் செல்லும் பயணிகள், பேருந்துகள் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளான கொடும் சம்பவம்.

    சென்னைக்கு வெளியே வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் எந்த ஓர் அடிப்படையான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தாமல் புதிய பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல, ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்தைப் போதிய அளவில் உருவாக்காமலேயே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், திறந்தது முதலே பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்படுத்துவதே சிறந்த ஆட்சி. ஆனால் தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்யவில்லை என்பதற்கு இந்த இரு பேருந்து நிலையச் செயல்பாடுகளே கண்ணெதிரே காணும் சாட்சிகள்.

    இது ஒருபுறம் இருக்க கடந்த புதன்கிழமை இரவு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால், தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் கைக்குழந்தைகளோடு கடும் அவதிக்கு உள்ளாகியது மிகுந்த மன வேதனைவைத் தருகிறது.

    பல மணி நேரம் காத்திருந்து, இங்கும் அங்குமாய் அலைந்து திரிந்த பயணிகள் பேருந்துச் சேவையே இல்லை என்பது தெரிந்ததும், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அந்த நள்ளிரவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது குடும்பத்தினருடன் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுமே பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை. இதன் மூலம் அவர்களின் கோபம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    கோவில் திருவிழா காரணமாகப் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று அரசு கூறும் காரணம், பொதுமக்கள் மீது பழியைச் சுமத்தி தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பார்ப்பதேயன்றி வேறில்லை.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்றாலே மக்களின் கிளர்ச்சிப்பாக்கம் என்று விமர்சிக்கும் வகையில், பயணிகள் பேருந்துகள் வசதியின்றி கடும் அவதிக்கு உள்ளாவதே இன்னும் தொடர்கதையாகி வருகிறது.

    பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப எவ்வாறு இயக்குவது என்பது தொடர்பான அடிப்படை விஷயம் கூட ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றிச் சிறிதேனும் அக்கறை கொண்டிருந்தால் இவ்வாறு நடந்துகொள்வார்களா?

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் முறையான பேருந்து சேவைகள் செய்யப்படாத்து கடும் கண்டனத்துக்கு உரியது. திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு அதிகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உறுதிமொழியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படவில்லை.
    • கூடுதலாக 500 மாணவ மாணவியர் மருத்துவர்களாக ஆகி இருப்பர்.

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு காரணமான தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால்தான் எச்செல்வத்தையும் எளிதில் பெற முடியும் என்பதன் அடிப்படையில், நோய்களை நீக்குவதற்கான மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளிக்க வேண்டும்.

    அதாவது, மருத்துவமனைகளை உருவாக்குவது, மருத்துவர்களை அதிக அளவில் உருவாக்குவது. அரசு மருத்துவமனைகளில் ஆசிரியர்களை உடனுக்குடன் நியமிப்பது, போதிய மருத்துகளை இருப்பில் வைப்பது போன்ற வசதிகளை மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் பெற வழிவகை செய்ய வேண்டும்.

    அப்பொழுதுநான் ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மேம்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

    தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மருத்துவம் கற்றுத்தர போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட ஏதுவாக மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். ஆனால், இவற்றை தி.மு.க. அரசு சரியாக செய்து தருவதில்லை.

    ஒவ்வொரு ஆண்டும், தேசிய மருத்துவ ஆணையம் அரசுக் கல்லூரிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை சுட்டிக்காட்டி மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று வினவுவதும், அதற்கு மழுப்பலாக அரசு தரப்பில் பதில் அளிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

    அரசு சார்பில் அளிக்கப்படும் உறுதிமொழியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படவில்லை என்றாலும் கூடுதல் மருத்துவ பணியிடங்களுக்கு ஒப்புதல் தர தேசிய மருத்துவ ஆணையம் மறுத்து வருகிறது.

    உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், புதிதாக துவங்கப்பட்ட பத்து மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 50 எம்.பி.பி.எஸ். இடங்களை ஏற்படுத்தித் தரும்படி தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டும், ஆசிரியர்கள் பற்றாக்குறை மருத்துவக் கட்டமைப்பின்மை போன்றவற்றைச் சுட்டிக்காட்டி கூடுதலாக 500 மருத்துவ இடங்களுக்கு அனுமதி தர தேசிய மருத்துவ ஆணையம் மறுத்துள்ளது.

    கூடுதலாக 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி தர மறுத்ததற்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே ஆகும். உடனுக்குடன் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, கட்டமைப்புகளை அவ்வப்போது மேம்படுத்தி இருந்தால், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 500 மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கும்.

    இதன்மூலம். கூடுதலாக 500 மாணவ மாணவியர் மருத்துவர்களாக ஆகி இருப்பர். தி.மு.க அரசின் மெத்தனப் போக்கு காரணமாக 500 மாணவ மாணவியரின் மருத்துவக் கனவு சிதைந்துவிட்டது. இது கடும் கண்டனத்திற்குரியது.

    வருகின்ற ஆண்டிலாவது, கூடுதல் மருத்துவ இடங்களைப் பெறும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை.
    • சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி!

    கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு.

    சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை!

    இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை.

    பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா?

    சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காலி மனையில் செடிகள், மண்டுதல், குப்பைகள், மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • காலி நிலத்தில் எல்லையை சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலி நிலங்கள் வைத்துள்ள நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    காலிமனை வைத்துள்ள உரிமையாளர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் ரூ.25000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அபராதம் விதித்தும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    காலி மனையில் செடிகள், மண்டுதல், குப்பைகள், மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    காலி நிலத்தில் எல்லையை சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும்.

    நிலத்தில் திடக்கழிவு அல்லது கட்டிடக் கழிவுகள் தேங்கியிருப்பதை தவிர்க்க வேண்டும்.

    பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்க காரணமாக இருக்கும் கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

    நிலத்தில் அதிகமாக வளர்ந்துள்ள செடிகளை அகற்றி குப்பைகள் தேங்காமால் பார்த்து கொள்ள வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    • ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
    • ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்தியப் பிரதேசத்தில் 50,000 போலி அரசு ஊழியர்கள் தொடர்பான ரூ.230 கோடி ஊழல் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

    மத்தியப் பிரதேச அரசின் கணக்காய்வு மற்றும் நிதி மேலாண்மைத் துறையின் (IFMIS) சமீபத்திய ஆய்வில், 50,000 அரசு ஊழியர்கள், கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இவர்களின் பெயர் மற்றும் ஊழியர்கள் என்றும் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணியில் இல்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.230 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

    இந்த ஊழல் விவகாரமானது, மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் தோல்வியின் விளைவாகும். இதுபோன்ற ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

    அமலாக்கத்துறை, (ED) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) போன்ற அமைப்புகள் விசாரணை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிடவேண்டும். குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×