என் மலர்tooltip icon

    சென்னை

    • காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.
    • அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க வைக்க அரசு பள்ளிகளுக்குபள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு செய்துள்ளது. வகுப்பறைகளை விட்டு மாணவர்கள் வெளியில் செல்லாமல் இருக்கும் இடத்தில் தண்ணீர் குடிக்க 5 நிமிடங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே வாட்டர் பெல் என்ற திட்டம் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை பிரசார திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.

    'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தி.மு.க.வின் புதிய உறுப்பினர் சேர்க்கை பிரசாரத்தை தி.மு.க. தலைவரும் முதலமைச்சரும்ன மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 1-ந்தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.

    தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கை பிரசார திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணி அளவில் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

    • கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் 3 எழுத்து நடிகர் ஒருவரும், 3 எழுத்து நடிகை ஒருவரும், 4 எழுத்து இசையமைப்பாளர் ஒருவரும் தொடர்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
    • நடிகர் கிருஷ்ணாவும் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில்தான் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    போதைப்பொருள் வழக்கில் தற்போது சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். கொக்கைன் போன்ற ஹை-டெக் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களையும் அதை பயன்படுத்துகிறவர்களையும் தற்போது வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். அந்தவகையில் கொக்கைன் போதைப் பொருளை விற்பனை செய்ததாக சேலத்தை சேர்ந்த பிரதீப் குமார், பெங்களூருவை சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டவரான ஜான் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து, கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியதாக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் கொடுத்த தகவல் அடிப்படையில் கழுகு படத்தில் கதாநாயக நடித்த நடிகர் கிருஷ்ணாவும் அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    நடிகர் கிருஷ்ணா பயன்படுத்திய செல்போன் தகவல்கள்தான் அவரை தற்போது சிறையில் தள்ளி இருக்கிறது. நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் இடம் பெற்றுள்ள நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கிருஷ்ணா கொகைன் போதைப் பொருளை சப்ளை செய்துள்ளது பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இதனை அடிப்படையாக கொண்டுதான் தொடங்கியுள்ளது. கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் 3 எழுத்து நடிகர் ஒருவரும், 3 எழுத்து நடிகை ஒருவரும், 4 எழுத்து இசையமைப்பாளர் ஒருவரும் தொடர்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தற்போது தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

    நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். தினமும் அவருக்கு காலை பத்திரிகைகள் வழங்கப்படுகிறது. அந்த பத்திரிகைகளில் வரும் செய்திகளை ஸ்ரீகாந்த் உன்னிப்பாக படிக்கிறாராம். நடிகர் கிருஷ்ணா கைதுசெய்யப்பட்ட தகவலை பத்திரிகை செய்தி வாயிலாக தெரிந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா எங்கே அடைக்கப்பட்டுள்ளார்? என்றும், அவரை பார்க்க முடியுமா? என்றும், சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அவரை பார்க்க முடியாது என்று சிறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். சிறையில் உள்ள நூலகத்துக்கு சென்று ஸ்ரீகாந்த் புத்தகங்களையும் விரும்பி படிக்கிறாராம். நடிகர் கிருஷ்ணாவும் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில்தான் தனியாக அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், ஸ்ரீகாந்தை போல நடிகர் கிருஷ்ணா இரவில் தூக்கமில்லாமல் தவிக்கவில்லை. முதல் நாள் இரவிலேயே கிருஷ்ணா நன்றாக படுத்து தூங்கினாராம்.

    • நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • அரக்கோணம் அருகே சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
    • சென்னையிலிருந்து அரக்கோணம் வழியே காட்பாடி செல்லும் அனைத்து ரெயில்சேவையும் நிறுத்தப்பட்டது.

    சென்னை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

    சித்தேரியில் இருந்து காட்பாடிக்குச் சென்ற 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் தடம் புரண்டுள்ளது. என்ஜினில் இருந்து 3-வது ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இறங்கின.

    மின்சார ரெயில் தடம் புரண்டதால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும் அனைத்து ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

    • கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
    • அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 28-06-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

    • முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.

    இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார்.

    அதேவேளையில் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

    நேற்று அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை இன்று தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை. முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார், பூவை ஜெகன்மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை, அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் உறுதி அளித்தார்.

    நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேளை யாரும் புகார் தராமல் இருந்திருக்கலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

    ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான். வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது.

    ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வேண்டி உள்ளது. ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை.

    எனவே பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது எனக் கூறி முன்ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துள்ளதால் ஜெகன்மூர்த்தி கைதாக வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதையடுத்து, கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, நடிகர் கிருஷ்ணா, கெவினை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    மருத்துவ பரிசோதனை முடிந்து நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    • இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதாக தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு.
    • ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் முடியும் வரை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற வழக்குகளை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவததை எதிர்க்கும் மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழலில் தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையற்றது. ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

    மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    • சாக்கடை நீர் சாலைகளில் ஒடுவதால் சுகாதார சீர்கேடு பெருகியுள்ளது.
    • கொசுத் தொல்லை அதிகரித்து மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகங்களை கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

    4.7.2025 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி. இடம் : காந்தி பார்க் அருகில், கும்பகோணம்

    ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்குத் தேவைப்படும் எந்தவிதமான அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகளையும் ஏற்படுத்தாமல், அவசர அவசரமாக 2021-ஆம் ஆண்டு கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்தது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு.

    ஏற்கெனவே, அதிக அளவு சொத்து வரியை செலுத்தி வந்த மக்களுக்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் வீட்டு வரி, வணிக வரி, தொழில் வரி என்று அனைத்து வரிகளையும் உயர்த்திய இந்த விடியா திமுக மாடல் அரசு, பொதுமக்களிடம் வசூலிக்கும் வரிக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை நிறைவேற்றி உள்ளனவா என்று கும்பகோணம் மக்கள் ஏமாற்று மாடல் ஸ்டாலின் அரசை கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.

    பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. மாநகரம் முழுவதும் குப்பை கூளங்கள் அகற்றப்படுவதில்லை.

    வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறைந்த அளவே செயல்படும் அம்மா உணவகங்களை பராமரிப்பதற்கு போதிய நிதியை ஒதுக்காததால், அம்மா உணவகங்களை நம்பியுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கும்பகோணம் மாநகராட்சி முழுவதும் உள்ள பாதாள சாக்கடை பராமரிப்பு இல்லாமல், பம்பிங்க் செக்ஷன் சரியாக செயல்படாமல், 80 நபர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், வெறும் 30 நபர்கள் மட்டுமே பணிபுரிவதால், பராமரிப்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சாக்கடை நீர் சாலைகளில் ஒடுவதால் சுகாதார சீர்கேடு பெருகியுள்ளது. கொசுத் தொல்லை அதிகரித்து மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    தாராசுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது.

    கும்பகோணம் மாநகராட்சி பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில், எந்தவிதமான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல், அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் கல்வி நிதி எங்கே செல்கிறது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்நிலையில், மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகங்களை கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், கும்பகோணம் மாநகராட்சியில் வசித்து வரும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும், சாலைகளை புதுப்பிக்காமலும், பாதாள சாக்கடைகளை பராமரிக்காமலும் பொதுமக்களை மிகுந்த சிரமப்படுத்தும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 4.7.2025 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில், கும்பகோணம் காந்தி பார்க் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், அரசு தலைமை முன்னாள் கொறடாவுமான சு. மனோகரன் அவர்கள் தலைமையிலும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சு.மு. பாரதிமோகன், கும்பகோணம்

    மாநகரக் கழகச் செயலாளர் திரு. ராம. ராமநாதன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. ரதிமீனா சேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
    • பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடைபெற்று முடிந்த மார்ச் 2025, மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி எழுதி, விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் Notification என்ற பகுதியில் 30.06.2025 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் முதல் வெளியிடப்படவுள்ளது.

    இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நடிகர் ஸ்ரீகாந்த் மீதும் மேலும் வழக்குகள் பாயுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
    • சென்னை மாநகருக்கு பெங்களூரில் இருந்து அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவது போலீசார் நடத்தி வரும் தொடர்ச்சியான விசாரணையில் தெரியவந்துள்ளது

    சென்னை:

    சென்னை மாநகரில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் நுங்கம்பாக்கத்தில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியான பிரசாத் மற்றும் அவரது கூட்டாளி பிரதீப் ஆகியோர் போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஸ்ரீகாந்துக்கு போதை பொருட்களை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் வியாபாரியான பிரதீப் சென்னையில் பல்வேறு இடங்களிலும் போதைப்பொருட்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக சூளைமேட்டில் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்த வழக்கிலும் பிரதீப் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் சூளைமேட்டில் போடப்பட்ட போதைப்பொருள் வழக்கிலும் பிரதீப் சிக்கியுள்ளார்.

    புழல் சிறையில் உள்ள அவரை இந்த வழக்கிலும் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சூளைமேடு போலீசார் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்த பிரதீப் தொடர்புடைய இந்த போதைப்பொருள் வழக்கில் இதுவரை 25 பேரை கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் ஏற்கனவே 24 பேர் தொடர்ச்சியாக கைதான நிலையில் நைஜீரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்போது சிக்கி உள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி அன்று மாலை, சூளைமேடு பகுதியில் 2.11 கிராம் கொகைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த பயாஸ், சந்திரசேகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

    இவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 14 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சுமார் 60 கிராம் கொகைன், 1.7 கிலோ கஞ்சா, 2 கிராம் கஞ்சா ஆயில், 3 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், 3 கார்கள், 2 எடை எந்திரங்கள், கொகைன் பயன்படுத்தும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த எகோ நாதனியல் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்தும் கொகைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக தனிப்படை போலீசார் நைஜீரியாவைச் சேர்ந்த சரா குமாமா என்கிற 41 வயது பெண்ணை கைது செய்துள்ளனர். பெங்களூரில் வைத்து அவரை பிடித்த போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் இருந்தும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

    நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் இரண்டாவது வழக்கில் சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் மூலமாக நடிகர் ஸ்ரீகாந்த் மீதும் மேலும் வழக்குகள் பாயுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    சென்னை மாநகருக்கு பெங்களூரில் இருந்து அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவது போலீசார் நடத்தி வரும் தொடர்ச்சியான விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நைஜீரியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பெங்களூரில் பதுங்கி இருந்து போதைப்பொருட்களை சென்னையைச் சேர்ந்த பிரபலங்களுக்கு விற்பனை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து போதைப்பொருள் மையமாக மாறி வரும் பெங்களூரில் பதுங்கி உள்ள வெளிநாட்டினரை தொடர்ச்சியாக வேட்டையாடும் நடவடிக்கைகளில் சென்னை மாநகர போலீசார் இறங்கி இருக்கிறார்கள்.

    ×