search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Bell"

    • சராசரி வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
    • குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெப்ப நிலை இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கண்ணூர் மாவட்டத்தில் வெப்பநிலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து 37.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. இதேபோல் கோழிக்கோடு, எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கண்ணூரில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி வரையிலும், ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு மாவட்டங்களில் 36 டிகிரி வரையிலும் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு மாவட்டங்களில் சராசரி வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதேபோல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் அதிக வெப்பநிலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆகவே சூரிய ஒளி மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்தநிலையில் பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வாட்டர் பெல் என்ற முறை கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இன்று அமலானது.

    இந்த புதிய முறையின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தினமும் காலை 10.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி ஆகிய 2 முறை குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக மணி அடிக்கப்படும். குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும்.

    அந்த நேரத்தில் குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிக்கவேண்டும். குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    ×