search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    யார் தலைவர் என்பதில் போட்டி- திருப்பூரில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

    யார் தலைவன் என்பது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் சுரேஷ் (வயது 29). இவரது நண்பர்கள் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார். இவர்கள் மீது திருப்பூர் போலீஸ் நிலையங்களில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    நேற்றிரவு சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5பேரும் சேர்ந்து சந்திராபுரம் அருகே உள்ள டாஸ்மாக் மது பாரில் மது அருந்தினர். அப்போது சுரேஷ் அவரது நண்பர்களிடம் , நான் தான் உங்களுக்கு தலைவன். நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் சொல்கிறபடி எதிராளிகளை நீங்கள் அடிக்க வேண்டும். நான் தான் உங்களுக்கு பணம் பெற்று கொடுக்கிறேன். எனவே எனக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என்றார்.

    இதற்கு அவரது நண்பர்கள் 5 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் சொல்கிறபடி நீ நடந்து கொள் என்றனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாரில் இருந்து அனைவரும் வெளியேறினர். அதன்பிறகும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து பட்டா கத்தியால் சுரேசை சரமாரி வெட்டினர். இதில் சுரேசின் தலையில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நள்ளிரவு 1மணியளவில் நடந்தது.

    இதைத்தொடர்ந்து நண்பர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இன்று காலை சுரேஷ் பிணமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுரேசை கொலை செய்த அவரது நண்பர்கள் மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார் ஆகிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யார் தலைவன் என்பது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×