search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை திருமுர்த்தி அணையில் ஆபத்தான பகுதியில் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள்

    அணைப் பகுதியில் சிறுவர்பூங்கா, வண்ண மீன் காட்சியகம், நீச்சல்குளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்துள்ளன.
    உடுமலை:

    ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள்திருமூர்த்தி அணைக்குள் சுற்றுலா பயணிகள் இறங்குகிறார்கள். சுற்றுலா பாதுகாப்பு பணியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் திருமூர்த்தி அணை உள்ளது. அணைப் பகுதியில் சிறுவர்பூங்கா, வண்ண மீன் காட்சியகம், நீச்சல்குளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்துள்ளன. 

    அடிவாரப் பகுதியில் மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலும், அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவியும் உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயற்கை சூழலும் இணைந்து மனதிற்கு புத்துணர்வு அளிப்பதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகிறார்கள்.

    பின்னர் அனைவரும் பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்தும் அங்குள்ள இயற்கை சூழலை ரசித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். மேலும் கோவிலின் முன்பு உள்ள அணைப்பகுதியில் இறங்கி சுற்றுலாப் பயணிகள் குளித்து வருவதுடன் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.

    கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட கம்பிவேலி வெள்ளப்பெருக்கின் போது அடித்துச் செல்லப்பட்டது. அதனை சீரமைப்பதற்கு இதுவரையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

    இதனால் அந்த பகுதி திறந்த வெளியாக உள்ளது. இதை சாதகமாகக் கொண்டு சுற்றுலா பயணிகள் அணைக்குள் அத்துமீறி சென்று வருகின்றனர். அப்போது அபாயகரமான ஏற்கனவே ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதியில் குளித்தும் வருகின்றனர்.

    நெடுந்தொலைவில் இருந்து குடும்பத்தோடு விடுமுறையை கழிப்பதற்காக பலவித கனவுகளோடு வருகை தரும் சுற்றுலாபயணிகளுக்கு அணை மற்றும் அருவி பகுதியில் உள்ள ஆபத்துகள் பற்றி தெரிவதில்லை.

    இது குறித்து பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவில்லை. உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு வருந்துவதை விடவருமுன் காத்து தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். 

    எனவே கோவில் முன்பு திறந்த வெளியாக உள்ள பகுதியில் கம்பி வேலியை அமைப்பதற்கும் பாதுகாப்பு பணிக்காக பணியாளரை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×