search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirumoorthy dam"

    • திருமூர்த்தி அணையில் இன்றைய நீர்மட்டம் 35. 97 அடியாக உள்ளது. நீர்வரத்து 603 கன அடியாக உள்ளது.
    • உடுமலை அருகே உள்ள மற்றொரு அணையான அமராவதி அணை 90 அடி உயரம் கொள்ளளவு கொண்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி., தொகுப்பு அணைகளின் கடைசியாக உள்ள இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    5 கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் உடுமலை நகரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகின்றன.

    பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக கான்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.

    திருமூர்த்தி அணையில் இன்றைய நீர்மட்டம் 35. 97 அடியாக உள்ளது. நீர்வரத்து 603 கன அடியாக உள்ளது. பிரதான கால்வாயில் 417 கன அடி, கால்வாயில் 65 கன அடி , நல்லாற்றில் 50 கன அடி, குடிநீருக்கு 21 கன அடி என மொத்தம் 555 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் உடுமலை அருகே உள்ள மற்றொரு அணையான அமராவதி அணை 90 அடி உயரம் கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இதேபோல கல்லாபுரம்- ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2000 ஏக்கர் நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகின்றன.

    தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும். அமராவதி அணை நீர்பாசன வசதி பெற மட்டுமின்றி கரூர் வரையிலான அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவை, கால்நடைகளின் குடிநீர் தேவை ஆகியவற்றையும் நிறைவேற்றி வருகிறது. இந்த அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அமராவதி அணையில் இன்றைய நீர்மட்டம் 61.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 86 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், திருமூர்த்தி- அமராவதி அணைகள் நிரம்பவில்லை. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் தான் அணைகள் நிரம்பும். எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    • கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .
    • பிஏபி., கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து 4 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சுற்று தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிஏபி., கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது .இதை ஈடுகட்ட கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .இதை ஏற்று மேலும் 6 நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி., பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பகுதிகளில் நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றவும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கூடுதலாக வரும் 24ந் தேதி வரை 6 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து உத்தரவிடப்படுகிறது. அதன்படி மொத்தம் 410 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் 94.068 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2017ம் ஆண்டு சர்வே எண் 252, 253ல் 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது.
    • 38 ஆயிரத்து 800 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.

    உடுமலை:

    பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து சேகரிக்கப்பட்டு, பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.திருமூர்த்தி அணையின் கிழக்குப்பகுதியில் 300 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பு மண் மேடாக காணப்படுகிறது.

    இந்த மண் அகற்றி ஆழப்படுத்த வேண்டும். கூடுதலாக, ஒரு டி.எம்.சி., வரை நீர் சேமிக்க முடிவதோடு பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க முடியும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு சர்வே எண் 252, 253ல் 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் மண் எடுத்தனர். கடந்த ஆண்டு சர்வே எண் 254ல், 34 ஆயிரம் கன மீட்டர் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது. பருவ மழை துவக்கம், பாசனத்திற்கு நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களினால் 17 ஆயிரம் கன மீட்டர் மட்டுமே மண் எடுக்கப்பட்டது. திருமூர்த்தி அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் அதிக சத்துக்களுடன் காணப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே நடப்பாண்டும் கோடை காலத்தில் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் புதிதாக சர்வே எண் குறிப்பிட்டு மண் எடுக்க அரசிதழில் அறிவிப்பு வெளியிடாமல் கடந்தாண்டு நிலுவையிலிருந்த 17 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

    அதிக அளவு விவசாயிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் குறைந்த அளவு விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மாதம் 18ந் தேதி முதல் விவசாயிகள் மண் எடுத்து வருகின்றனர்.

    திருமூர்த்தி அணையை கூடுதல் பரப்பளவில் ஆழப்படுத்தும் வகையில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, நடப்பாண்டு 38 ஆயிரத்து 800 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- நீர் நிலைகளை தூர்வாரும் வகையில், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. நடப்பாண்டு, குளங்களில் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.திருமூர்த்தி அணையில் கடந்தாண்டு நிலுவையிலிருந்த 17 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கூடுதல் அனுமதி கோரி விவசாயிகள் விண்ணப்பித்ததால் மேலும் 38,800 கன மீட்டர் எடுக்கஅனுமதியளிக்கப்பட உள்ளது.

    தற்போது 54 விவசாயிகள் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. முதற்கட்டமாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். அணையில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர், புஞ்சை நிலமாகஇருந்தால் 90 கன மீட்டர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் உயரம் 60 அடி ஆகும். பிஏபி பாசன தொகுப்பு அணைகளின் இது கடைசி அணையாகும் .இதன் மூலம் கோவை ,திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது .உடுமலை நகரம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன .இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. பாலாற்றின் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் வறண்டு கிடக்கின்றன .தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை காரணமாக தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் .அப்போது திருமூர்த்தி அணைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

    தற்போது நீர் வரத்து இல்லாததால் தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் குறைவாக உள்ளது. பிஏபி அணைகளின் தாய் அணையாக கருதப்படும் வால்பாறை சோலையார் அணையில் மொத்தமுள்ள 165 அடியில் வெறும் 22. 49 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் உள்ளது. இதே போல் 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் 13 .16 அடிக்கும் 170 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையில் 67. 75 அடிக்கும் திருமூர்த்தி அணையில் 29. 19 அடிக்கும் மட்டுமே நீர்மட்டம் உள்ளது.

    திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. தற்போது அதைவிட 5 அடி குறைவாக உள்ளது. நீர்வரத்து ஒரு கண அடியாக உள்ளது .27 கன அடி நீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கும். எனவே விரைவில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    • ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கா்களுக்கு முறைவைத்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
    • 7600 மில்லியின் கன அடி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி. திட்டத்தின் கீழ் 3ம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு பு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் கோவை, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    பிஏபி. பாசனத் திட்டத்தில் மொத்தம் உள்ள சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கா்களுக்கு முறைவைத்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

    இந்நிலையில் 3ம் மண்டல பாசனத்துக்கு டிசம்பா் 28ல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழிசெல்வராஜ் ஆகியோா் அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி பொத்தானை அழுத்தி அணையில் இருந்து நீரை திறந்துவைத்தனா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.வீனீத், பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    நீா் திறப்பின் மூலம் பொள்ளாச்சி வட்டத்தில் 19,781 ஏக்கா், சூலூா் வட்டத்தில் 3020 ஏக்கா், உடுமலை வட்டத்தில் 13,428 ஏக்கா், மடத்துக்குளம் வட்டத்தில் 6,763 ஏக்கா், தாராபுரம் வட்டத்தில் 18,963 ஏக்கா், பல்லடம் வட்டத்தில் 17,465 ஏக்கா், திருப்பூா் வட்டத்தில் 7,266 ஏக்கா், காங்கயம் வட்டத்தில் 7,676 ஏக்கா் என ஆக மொத்தம் 94 ஆயிரத்து 362 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீா் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறுகையில்,

    பரம்பிக்குளம் ஆழியாறு பிரதான கால்வாயில் இருந்து முதல்கட்டமாக 250 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு ள்ளது. இது படிப்படியாக 912 கன அடியாக உயா்த்தப்படும். டிசம்பா் 28 முதல் 2023 ஏப்ரல் 27 வரை 120 நாள்களுக்கு உரிய இடைவெளிவிட்டு மொத்தம் 4 சுற்றுகளாக 7600 மில்லியின் கன அடி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

    திருப்பூரில் பலத்த மழை பெய்ததால் 30 ஆண்டுகளுக்கு பிறகு கவுசிகா ஆற்றில் நீர் வர தொடங்கியது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    திருப்பூரில் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.

    மழை காரணமாக 30 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில் உள்ள கவுசிகா ஆற்றில் நீர் வர தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- திருப்பூர் - 15, அவினாசி -43.40, பல்லடம் - 48, தாராபுரம் -9, மூலனூர்- 8.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அருவியில் தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று இரவு மழை பெய்தது. இது போல் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மழை பெய்தது.
    திருமூர்த்தி அணையிலிருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

    உடுமலை:

    திருப்பூர் உடுமலை வட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கலெக்டர் பழனிசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சரின் ஆணையின் படி இன்று முதல் திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பாலாறு படுகை பாசனத்தில் முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை வட்டத்தில் 27,446 ஏக்கரும், மடத்துக்குளம் வட்டத்தில் 7,492 ஏக்கரும், தாராபுரம் வட்டத்தில் 8,395 ஏக்கரும், பல்லடம் வட்டத்தில் 7,887 ஏக்கரும், திருப்பூர் வட்டத்தில் 11,309 ஏக்கரும் மற்றும் காங்கயம் வட்டத்தில் 15,392 ஏக்கர் என 77,921 ஏக்கரும் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தில் 12,567 ஏக்கரும், மற்றும் சூலூர் வட்டத்தில் 4,033 ஏக்கர் என 16,600 ஏக்கரும் ஆக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சார்ந்த 94,521 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேலும், இன்று முதல் ஒரு சுற்றுக்கு மொத்தம் 1900 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் 250 கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கன அடி அதிகரித்து வழங்கப்படும்.

    பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை வேளாண் மக்கள் சிக்கனமாக பயன்படுத்தி பயன் பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தனியரசு எம்.எல்.ஏ., உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், திருமூர்த்தி அணை கோட்ட செயற்பொறியாளர் ராஜூ, உதவி செயற்பொறியாளர் காஞ்சித்துரை, உதவி பொறியாளர் சண்முகம், உடுமலை தாசில்தார் தங்கவேல் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×