search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளைநிலங்களை வளமாக்க திருமூர்த்தி அணையில் கூடுதலாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி
    X

    கோப்புபடம்

    விளைநிலங்களை வளமாக்க திருமூர்த்தி அணையில் கூடுதலாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி

    • 2017ம் ஆண்டு சர்வே எண் 252, 253ல் 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது.
    • 38 ஆயிரத்து 800 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.

    உடுமலை:

    பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து சேகரிக்கப்பட்டு, பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.திருமூர்த்தி அணையின் கிழக்குப்பகுதியில் 300 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பு மண் மேடாக காணப்படுகிறது.

    இந்த மண் அகற்றி ஆழப்படுத்த வேண்டும். கூடுதலாக, ஒரு டி.எம்.சி., வரை நீர் சேமிக்க முடிவதோடு பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க முடியும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு சர்வே எண் 252, 253ல் 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் மண் எடுத்தனர். கடந்த ஆண்டு சர்வே எண் 254ல், 34 ஆயிரம் கன மீட்டர் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது. பருவ மழை துவக்கம், பாசனத்திற்கு நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களினால் 17 ஆயிரம் கன மீட்டர் மட்டுமே மண் எடுக்கப்பட்டது. திருமூர்த்தி அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் அதிக சத்துக்களுடன் காணப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே நடப்பாண்டும் கோடை காலத்தில் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் புதிதாக சர்வே எண் குறிப்பிட்டு மண் எடுக்க அரசிதழில் அறிவிப்பு வெளியிடாமல் கடந்தாண்டு நிலுவையிலிருந்த 17 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

    அதிக அளவு விவசாயிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் குறைந்த அளவு விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மாதம் 18ந் தேதி முதல் விவசாயிகள் மண் எடுத்து வருகின்றனர்.

    திருமூர்த்தி அணையை கூடுதல் பரப்பளவில் ஆழப்படுத்தும் வகையில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, நடப்பாண்டு 38 ஆயிரத்து 800 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- நீர் நிலைகளை தூர்வாரும் வகையில், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. நடப்பாண்டு, குளங்களில் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.திருமூர்த்தி அணையில் கடந்தாண்டு நிலுவையிலிருந்த 17 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கூடுதல் அனுமதி கோரி விவசாயிகள் விண்ணப்பித்ததால் மேலும் 38,800 கன மீட்டர் எடுக்கஅனுமதியளிக்கப்பட உள்ளது.

    தற்போது 54 விவசாயிகள் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. முதற்கட்டமாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். அணையில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர், புஞ்சை நிலமாகஇருந்தால் 90 கன மீட்டர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×