search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சாயல்குடி அருகே மூதாட்டி வெட்டிக்கொலை

    சாயல்குடி அருகே மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரியூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அவயன். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 75). இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கணவர் அவயன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாரியம்மாள் தனது மூத்த மகன் மலைப்பனின் வீட்டில் வசித்து வந்தார்.அவர் தினமும் இரவில் வீட்டின் முன்புள்ள திண்ணையிலேயே படுத்து தூங்குவார். அதேபோல் நேற்று இரவும் படுத்து தூங்கினார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து வீட்டில் உள்ளே இருந்த மகன் மலையப்பனின் மனைவி கன்னியம்மாள் வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு நபர் மாரியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

    அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயம் அடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் விரைந்தனர்.

    அவர்கள் மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து தகவல் அறிந்த கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டார்.

    மாரியம்மாளை கொன்ற மர்ம நபர் யார்? எதற்காக கொலை செய்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    மாரியம்மாளின் மகன் மலையப்பனுக்கு கன்னியம்மாள் 2வது மனைவி ஆவார். முதல் மனைவிக்கு மணிமேகலை என்ற மகளும், மணிபாரதி என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி மலையப்பனை பிரிந்து சென்றுவிட்டார்.

    தூத்துக்குடி குறுக்குச்சாலை பகுதியில் தனது மகள் மற்றும் மகனுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். மலையப்பனின் 2வது மனைவி கன்னியம்மாளுக்கு குழந்தை இல்லை. மலையப்பனின் பெயரில் 10 சென்ட் வீட்டுமனை இருக்கிறது. அதனை முதல் மனைவியின் மகன் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாரியம்மாளை முதல் மனைவியின் மகன் கொன்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மாரியம்மாளை வெட்டியபோது பார்த்த மலையப்பனின் மனைவியும், அவரை வெட்டியது மணிபாரதி போன்று இருந்ததாக போலீசில் தெரிவித்துள்ளார்.

    அதனடிப்படையில போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரியம்மாளின் பேரனான மலையப்பனின் முதல் மனைவியின் மகன் மணி பாரதியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.

    Next Story
    ×