search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    தி.மு.க. ஓராண்டு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    அம்மா உணவகம் சரியாக நடைபெறவில்லை, அதனை யாரும் முடக்கினாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    சட்டசபை கூட்டத்தை இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முழுமையாக புறக்கணித்தனர்.

    தலைமை செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்லாமல் இருந்தனர்.

    பின்னர் 12 மணியளவில் சட்டசபைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது தி.மு.க. ஆட்சி மீது சரமாரியாக புகாரை கூறினார்.

    தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில் சாதனை எதுவும் இல்லை. மக்கள் வேதனை அனுபவித்து வருகிறார்கள். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார். அப்போது அவர் கூறியதாவது:

    தி.மு.க. ஆட்சி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதாக ஒரு பொய்யான விளம்பரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.

    இந்த ஓராண்டு ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. அ.தி.மு.க. அரசு ஆட்சி காலத்தில் கொண்டு வந்து முடித்த திட்டப்பணிகளைதான் தி.மு.க. ஆட்சியில் திறந்து வைக்கிறார்.

    அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தி.மு.க. ஆட்சியில் எந்தவொரு பெரிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நிறைவேற்றப்படவும் இல்லை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியின் போதும், அவரது மறைவுக்கு பிறகான ஆட்சியிலும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றி மக்கள் அதிகளவில் நன்மை பெற்றுள்ளனர்.

    காவிரி நதி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பை பெற்று தந்தோம். காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்ட அரசு ஜெயலலிதாவின் அரசு.

    பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி காவிரி நதி நீர் மாசுப்படுவதை தடுக்கும் திட்டம், கிளை நதி மாசுப்படுவதை தடுப்பதற்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

    குடிமராமத்து திட்டத்தில் 5,586 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டன. இத்திட்டத்துக்காக ரூ. 1,132 கோடி நிதி ஒதுக்கினோம்.

    பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிக இழப்பீட்டு தொகையை பெற்று தந்தது அ.தி.மு.க. அரசு.

    சுமார் ரூ.9,300 கோடி இழப்பீட்டு தொகையை பெற்று தந்து இருக்கிறோம். ரூ.5,318 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 12 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்தனர்.

    நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது ரூ.12,110 கோடி கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    2017ம் ஆண்டு முதல் முதலாக வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலங்களாக அறிவிப்பு, விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம், 6 மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. முதல்-அமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்.

    தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா இரு சக்கர வாகன திட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனை திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டன.

    தி.மு.க. ஓராண்டு ஆட்சியில் மக்கள் வேதனை பெற்றுள்ளனர்.

    இந்த ஆட்சியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பில் வெல்லம் இவ்வாறு தயாரித்தே கிடையாது.

    மிளகு பதிலாக பப்பாளி விதை, இளவம் பஞ்சு மட்டுமே உள்ளது, விஞ்ஞான முறைப்படி வரலாற்றில் யாரும் கொடுக்காத பொங்கல் பரிசு.

    இது தான் திராவிட மாடல் ஆட்சியா. அம்மா உணவகம் சரியாக நடைபெறவில்லை, அதனை யாரும் முடக்கினாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×