search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    மக்களின் ஆதரவையும், மதிப்பையும் மு.க.ஸ்டாலின் தினமும் பெறுகிறார்- கே.எஸ்.அழகிரி

    தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து அனைத்து துறைகளின் செயல்பாட்டினாலும், அனைத்து மக்களும் பயன்பெறுகிற வகையில் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுக்கிற முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்கிறார். அசுர பலத்தோடு இந்தியாவை ஆட்சி செய்து வருகிற பா.ஜ.க. அரசு இந்துத்வா கொள்கைகளை பரப்புவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. இதை துணிவுடன் எதிர்க்கிற அரசியல் பேரான்மைமிக்க முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வருகிறார்.

    பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து உரிமைக் குரல் கொடுக்கிற முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். தமிழகத்தில் நல்லாட்சி வழங்க வேண்டிய கடமை உணர்வோடும், அதே நேரத்தில் மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க.வின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டிய கூடுதல் பொறுப்போடும் அவர் செயல்பட்டு வருகிறார். இந்த வகையில் இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

    கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அந்த நம்பிக்கையின்படி தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து அனைத்து துறைகளின் செயல்பாட்டினாலும், அனைத்து மக்களும் பயன்பெறுகிற வகையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    தமிழக முதல்-அமைச்சரைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய சாதனைகளை ஒராண்டில் நிகழ்த்தி மக்களின் பேராதரவையும், பெருமதிப்பையும் நாள்தோறும் பெற்று செயல்பட்டு வருகிறார். எஞ்சியிருக்கிற ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற ஓராண்டு நிறைவு நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×