search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருவி
    X
    அருவி

    சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் திடீர் அருவிகள்

    கொடைக்கானலில் பெய்த தொடர்மழை எதிரொலியாக, சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் வகையில் திடீர் அருவிகள் உருவாகி உள்ளன.
    கொடைக்கானல்:

    ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் எதிரொலியாக கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, தேவதை அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதேபோல் கொடைக்கானலில் ஆங்காங்கே திடீர் அருவிகள் உருவாகி, சுற்றுலா பயணிகளை உற்சாகம் அடைய செய்துள்ளது.
     
    குறிப்பாக புலிச்சோலை, செண்பகனூர், பள்ளங்கி, பெருமாள்மலை, பேத்துப்பாறை, மேல்மலை கிராமங்களான போளூர், கூக்கால் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட தற்காலிகமாக சிறுசிறு அருவிகள் உருவாகி உள்ளன.

    வெள்ளியை வார்த்து ஊற்றியதை போல, மலைப்பகுதியில் வழிந்தோடும் இந்த அருவிகள் காண்போரின் விழிகளுக்கு விருந்து படைத்து வருகிறது. இது மட்டுமின்றி அருவிகளின் அருகே சென்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    குளுகுளு சீசன் காலமான ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் அலைமோதும்.

    ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. அடுத்த மாதம் (மே) முதல் வாரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கொடைக்கானலில் இதயத்தை வருடும் இதமான சூழல் நிலவுகிறது. இதனை அனுபவிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

    பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்தும் இடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது தான் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றார்.

    சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளதால் கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    Next Story
    ×