search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சில் போட்டிபோட்டு ஏறும் மாணவிகள்.
    X
    அரசு பஸ்சில் போட்டிபோட்டு ஏறும் மாணவிகள்.

    நெல்லையில் பள்ளி-கல்லூரிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

    நெல்லை மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகர் காந்திநகர் பகுதியில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் காலை மற்றும் மதியம் என 2 பிரிவுகளாக நடைபெறும் வகுப்புகளில், 4,300 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு பெண்கள் கல்லூரி இதுதான்.  மாநகர எல்லைக்குள் பாளையங்கோட்டை, டவுன் பகுதிகளில் அதிகமான பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

    காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் மாநகரின் பல இடங்களில் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பஸ்படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ஆபத்தான இந்த பயணத்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
     
    மாநகர பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக தனிப்பட்ட முறையில் பேருந்துகள் இயக்கம் எதுவும் இல்லை. இருந்தும் மாநகரில் உள்ள 2 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, காலை மற்றும் மாலை நேரத்தில் மாநகருக்குள் இயக்கப்படும் மொத்தப் பேருந்துகள் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே உள்ளது.
     
    இதன் காரணமாகவே பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வீடு திரும்ப வேண்டிய சூழல் உள்ளதாக மாணவ-மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

    கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, போக்குவரத்து துறையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
     
    கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் மாநகருக்குள் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இருந்தும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகளில் மாணவ- மாணவிகளுக்கு என தனி கவனம் செலுத்தி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டால் மட்டுமே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பெற்றோர்கள் கூறுகின்றனர்.
    Next Story
    ×