search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறுங்குடியில் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்.
    X
    திருக்குறுங்குடியில் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்.

    திருக்குறுங்குடியில் காலதாமதமின்றி முறைகேடு இல்லாமல் நெல்கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

    திருக்குறுங்குடியில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் காலதாமதமின்றி முறைகேடு இல்லாமல் நெல்கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    களக்காடு:

    திருக்குறுங்குடியில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

    திருக்குறுங்குடி, சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். 

    விவசாயிகள் ஆன் லைனில் பதிவு செய்து, டோக்கன் பெற்று, பின்னர் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு வருகின்றனர். ஆனால் நெல்லை கொள்முதல் செய்வதில் காலதாமதமும், முறைகேடும் நடந்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

    இதனால் தாங்கள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் நிலையம் அருகில் திறந்த வெளியில் பாதுகாப்பின்றி மூடைகள் அடுக்கி வைத்துள்ளனர். பதிவு செய்து, டோக்கன் பெற்ற பின்னர் கொள்முதல் செய்ய 1 மாதம் வரை காத்திருக்க வேண்டியதுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து பெருமளவில் நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனிடையே கடந்த வாரம் பெய்த கோடை மழையின் காரணமாக கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் நனைந்து, முளைத்து நாசம் அடைந்தன. 

    இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

    இதனிடையே நெல் கொள்முதல் நிலையத்தை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு கொள்முதல் நிலையத்தை மூடினால் நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்பு அடைவார்கள். 

    எனவே கொள்முதல் நிலையத்தில் காலதாமதமின்றி முறைகேடு இல்லாமல் நெல் கொள்முதல் செய்யவும், கொள்முதல் நிலையம் செயல்படுவதை காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் வலியுறுத்தி உள்ளார்.
    Next Story
    ×