search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாராயணன் திருப்பதி
    X
    நாராயணன் திருப்பதி

    சமூக நீதிக்கான போராட்டத்தில் தி.மு.க. ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை: நாராயணன் திருப்பதி

    பாஜக உருவாக்கி தந்து, நிலைநாட்டிய சமூகநீதிக்கு எந்த சோதனையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தாலே, அதுவே திமுக-வின் சாதனைதான் என நாராயணன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூக நீதி வரலாற்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளது, இது சாதாரணமாக
     கிடைத்து விடவில்லை. மக்கள் மன்றத்திலும், பாராளுமன்றத்திலும்,
     சட்டசபையிலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் வழியே இந்த 
    சாதனையை பெற்றிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் தமிழக முதலமைச்சர்
     மு.க.ஸ்டாலின் அவர்கள்.

    ஆம்! சரி தான்!  மக்கள் மன்றத்தில் அளித்த தீர்ப்பினால் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் அத்வானி அவர்களும் அமைச்சர்களாக இருந்த எங்கள் ஜனதா கட்சியின்  ஆட்சியில் (1977-79) தான் மண்டல ஆணையம் நியமிக்கப்பட்டது.

    1989 பாராளுமன்ற தேர்தலில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல ஆணைய 
    பரிந்துரையை அமல்படுத்துவோம்' என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்த ஒரே 
    கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். பாஜக ஆதரவு பெற்றதாலேயே வி.பி.சிங் அரசு
     மண்டல் ஆணையத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்க
     முடிந்தது. தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்
     ராஜீவ் காந்தி பாராளுமன்றத்தில், இந்த இட ஒதுக்கீடு மசோதாவை
     எதிர்த்து, இந்த 'இட ஒதுக்கீடு தேசத்தை பிளக்கும்' என்று ஒன்றரை மணி நேரம்
    உனரயாடியது குறிப்பிடத்தக்கது. அரசியல் அதிகாரத்திற்காக சமூக நீதியை (மண்டல் ஆணையத்தை) பத்து வருடங்கள் குழி தோண்டி புதைத்தது தி.மு.க-
    காங்கிரஸ் கூட்டணி என்பதே உண்மை.

    1993ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது சட்டசபையில்
     கொண்டு வந்த மசோதாவினால்தான் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு
     சாத்தியமானது. ஜூன் 1994-ல் குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, ஆகஸ்ட் 
    1994ல் 9-வது அட்டவணைக்குள் கொண்டு வரப்பட்டதன் மூலம் சட்ட பாதுகாப்பு 
    பெறப்பட்டு யாராலும் சட்ட போராட்டம் நடத்த முடியாத நிலை உருவானது.

    2016-ல் சலோனி குமாரி வழக்கில் "மருத்துவ படிப்பு அனுமதியில் அகில இந்திய 
    ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை
     வழங்க தயாராக உள்ளோம், உத்தரவிடுங்கள்" என்று உச்சநீதிமன்றத்தில்
     மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையிலேயே
     கடந்த வருடம் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு குழுவினை அமைத்து இட
    ஒதுக்கீட்டின் விழுக்காட்டை உறுதி செய்ய சொன்னது. அதனடிப்படையிலேயே,
     மத்திய பாஜக அரசு குழு அமைத்து அதன் பரிந்துரையின் பேரில், அகில இந்திய 
    ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை
     உத்தரவிட்டு உறுதி செய்தது பாஜக அரசு.

    ஆக, இட ஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் மக்கள் மன்றத்திலும், 
    பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் உறுதி செய்தது பாஜகதான் 
    என்பதையும், தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை உறுதி செய்தது முன்னாள்
     முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக-தான் என்பதையும் யாராலும், 
    எப்போதும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

    இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 'சமூக நீதிக்கான போராட்டத்தில் தி.மு.க. ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை' என்பதே நாடறிந்த உண்மை. ஆகையால் சமூக நீதிக்கான சாதனையை செய்தது திமுக-தான் என்று பெருமை தேடிக்கொள்வதை கைவிட்டு, பாஜக உருவாக்கி தந்து, நிலைநாட்டிய சமூக நீதிக்கு எந்த சோதனையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தாலே, அதுவே திமுக-வின் சாதனைதான் என்பதை தி.மு.க. தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×