search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கமணி
    X
    தங்கமணி

    தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தது எவ்வளவு?- முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

    கிரிப்டோ கரன்சியில் தங்கமணி எவ்வளவு முதலீடு செய்தார் என அவரது ஆடிட்டர் செந்தில்குமாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    பள்ளிப்பாளையம்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரது வீடு உள்பட 69 இடங்களில் கடந்த 15-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் கணக்கில் வராத பணம், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து நேற்று 2-ம் கட்டமாக தங்கமணிக்கு தொடர்புடைய ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் வங்கி பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்க் போன்றவை கைப்பற்றப்பட்டன.

    இந்த சோதனையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஆடிட்டர் செந்தில்குமார் (வயது 50) என்பவருக்கு 2 அலுவலகங்களில் நடந்த சோதனையை தான் முக்கிய சோதனையாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கருதப்படுகின்றன. ஏனெனில் அவர், தங்கமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களில் கடந்த 20 வருடங்களாக ஆடிட்டராக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    ஆகவே தான் செந்தில் குமாருக்கு சொந்தமான பள்ளிப்பாளையம் பேப்பர் மில் சாலையில் உள்ள 2 அலுவலகங்களில் மட்டும் நள்ளிரவு 11 மணி வரை லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, அலுவலகத்தில் ஏற்கனவே டைப் செய்து பிரிண்ட் செய்து வைத்திருந்த தணிக்கை விபரம் பைல்கள், கம்ப்யூட்டரில் உள்ள வேர்டு, எக்சல் பைல்களில் இருந்த தணிக்கை வரவு, செலவு கணக்கு விபரங்கள் ஆகியவற்றை திறந்து பார்த்தனர்.

    இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஹார்டு டிஸ்க்கை போலீசாரால் திறந்து பார்க்க முடியவில்லை. தகவல் தொழில் நுட்ப அலுவலர்களை அங்கு வரவழைத்து, ஹார்டு டிஸ்க்-ல் சேமிக்கப்பட்ட தகவல்கள் வியூ செய்து பார்த்தனர். குறிப்பாக ஒரு நிறுவனத்தின் நடைமுறைகள், உற்பத்திப் பொருட்கள், சேவைகள், வரவு, செலவுகள் தொடர்பான ஆவணங்களின் துல்லியம், மதிப்பு, நம்பகத்தன்மை, முதலீடு உள்ளிட்டவற்றை ஆடிட்டர் தான் தணிக்கை செய்வார். இந்த விபரங்கள் அந்த ஹார்டு டிஸ்க்-ல் இருந்ததாக தெரிகிறது.

    இவற்றை கைப்பற்றிய போலீசார், இது பற்றி விசாரணை நடத்தினர். குறிப்பாக ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களோ அரசு கண்காணிப்பு அமைப்புகளோ கேட்கும் விளக்கங்களுக்கு முறையான அறிக்கைகளை ஆடிட்டர்களே அளிக்க முடியும் என்பதால் செந்தில்குமாரிடம் தங்கமணிக்கு சொந்தமான நிறுவனங்களில் நீங்கள் எத்தனை முறை வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்தீர்கள்? அவர்கள் வெளிநாடுகளில் பணம் முதலீடு செய்து இருக்கிறார்களா?, கிரிப்டோ கரன்சியில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது? என விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல தகவல்களை கூறியதாக தெரிகிறது.

    இந்த தகவலை பதிவு செய்த போலீசார் தொடர்ந்து நாங்கள் விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என கூறி கைப்பற்ற ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க் ஆகியவற்றுடன் அங்கிருந்து போலீசார் புறப்பட்டு சென்றனர்.

    இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், 14 இடங்களில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் விசாரணைக்கு முக்கியமானதாகும். ஆவணங்களில் இடம்பெற்ற நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை, பொது அறிக்கைகள், பணப் பரிமாற்றம், வரி செலுத்தப்பட்ட விவரங்கள் ஆகியவற்றின் மூலம் நிறுவனங்களின் வளர்ச்சியில் வழக்கத்துக்கு மாறான முன்னேற்றம் இருக்கிறதா? என மூத்த ஆய்வாளர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது என்றனர்.

    இதையும் படியுங்கள்... 19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு- நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது

    Next Story
    ×