search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தமிழகத்தில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

    தமிழகத்தில் நாளை 50 ஆயிரம் இடங்களில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் போடுவதற்காக 75 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
    சென்னை :

    தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

    மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. அதன் மூலம் 2 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை (18-ந்தேதி) நடைபெறுகிறது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் இதுவரை தமிழகத்தில்1 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும், 93 லட்சம் பேர் காலக்கெடு முடிந்து 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். தற்போது 75 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

    சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. சென்னையில் இதுவரை 8 லட்சத்து 26 ஆயிரத்து 471 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அந்தவகையில் 87 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 63 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    இதையும் படிக்கலாம்.... உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27.31 கோடியாக உயர்வு
    Next Story
    ×