search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி
    X
    மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி

    சென்னையில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் நாளை நிறைவடையும்- ககன்தீப்சிங் பேடி

    ஒவ்வொரு தெருக்களிலும் தேங்கிய மழைநீரால் சகதிகள் படிந்து இருப்பதால் அதனால் நோய் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் உடனடியாக அவற்றை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெறுவதாக மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மாநகராட்சி மேற்கொண்டதால் ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பினார்கள். 500-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில் அவற்றை மின் மோட்டார்கள் மூலம் இரவு, பகலாக வெளியேற்றினார்கள்.

    ஒரு சில இடங்களில் மழை நீர் வெளியேறுவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தது. அந்த பகுதிகளில் அதிகாரிகள் முகாமிட்டு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை துரிதப்படுத்தினார்கள்.

    சாலைகளில் விழுந்த மரங்கள், கிளைகள், வெட்டி அகற்றப்பட்டன. விழும் தருவாயில் இருந்த மரங்களும் பாதுகாப்பு கருதி வெட்டப்பட்டன.

    மழைநீர் வடிந்த போதும் தெருக்கள், வீதிகளில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் கடந்த ஓரிரு நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    கனமழையால் பாதிப்பு இருந்தபோதும் போக்குவரத்து தடைபடாமல் இயக்கப்பட்டன. சுரங்கப்பாதைகள் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தொடர்ந்து பெய்த மழையால் வெளியேற்றப்பட்ட மழைநீர் மீண்டும் சுரங்கப்பாதையில் தேங்கியது.

    அதனை மீண்டும் வெளியேற்றியதன் மூலம் 16 சுரங்கப்பாதைகளில் தற்போது போக்குவரத்து தொடங்கி உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் பஸ் போக்குவரத்து மற்றும் கனரக வாகனங்கள் தற்போது இயக்கப்படுகின்றன.

    இன்னும் ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் வடியாமல் இருப்பதால் அதனை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடியிடம் இன்று கேட்டபோது அவர் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார்.

    சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்

    கனமழையால் சென்னை மாநகரில் ஏற்பட்ட மழை பாதிப்பு படிப்படியாக சரி செய்யப்பட்டுள்ளது. 99 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த புளியந்தோப்பு, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் மட்டுமே சேறும், சகதியும் காணப்படுகிறது. அதனை இன்று அகற்றும் பணி நடைபெறுகிறது. புளியந்தோப்பில் 500 ஊழியர்கள் மூலம் மெகா தூய்மைப்பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு தெருக்களிலும் தேங்கிய மழைநீரால் சகதிகள் படிந்து இருப்பதால் அதனால் நோய் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் உடனடியாக அவற்றை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது.

    நாளைக்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும். 5 மண்டலங்களில் சுகாதாரப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 500 ஊழியர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 25 ஆயிரம் ஊழியர்களும் களத்தில் உள்ளனர்.

    மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள், கழிவுகள் இரவு பகலாக அகற்றப்படுகிறது. வழக்கமாக சென்னையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் மெட்ரிக்டன் குப்பைகள் அகற்றப்படும். வெள்ள பாதிப்பால் இது 5,700 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

    வருகிற 18-ந்தேதி வர இருக்கின்ற பெருமழையை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×