search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் நாளை 1,600 கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

    கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களும், கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன் அடையலாம்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும், 12.9.2021 அன்று 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு. 98,227 முதல் தவணை தடுப்பூசிகள், 93,123 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 1,91,350 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    இதுபோன்ற தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் போது பொது மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு அதிகளவில் பயன் அடைகின்றனர். எனவே, இதுபோன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை வாரந்தோறும் நடத்த தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் நாளை (19-ந்தேதி) சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1,600 தீவிர கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களும், கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களும் இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன் அடையலாம்.

    கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 2538 4520, 044 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

    பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் இந்தத் தடுப்பூசி
    முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோப்புப்படம்

    சென்னை மாநகராட்சியால் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தவறாது சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் ‘லெயோனாட் செ‌ஷயர்ட் தொண்டு நிறுவனம் உதவியுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, சென்னை மாவட்ட எல்லைக்குள் உள்ள மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று சென்னை மாநகராட்சி உதவியுடன் தடுப்பூசி செலுத்துவதற்காகவும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சென்று தடுப்பூசி செலுத்துவதற்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே 18 வயதுக்கு மேற்பட்ட முதல் கட்டம் அல்லது இரண்டாம் கட்டம் தடுப்பூசி செலுத்தவேண்டிய மாற்றுத்திறனாளிகள் 1800 4250111 கட்டணமில்லா தொலைபேசி அல்லது செவித்திறன் குறைவுடையவர்கள் சைகை மொழியுடன் பதிவு செய்ய 9700799993 என்ற தொலைபேசி வாயிலாக பெயர், வயது, முகவரி, செல்பேசி எண், முதல் முறை, இரண்டாவது முறை செலுத்த வேண்டிய விவரம் வீட்டிற்கே சென்று செலுத்த வேண்டிய விவரம் அல்லது அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று செலுத்தவேண்டிய விவரங்களை தெரிவித்து தங்களின் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


    Next Story
    ×