search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பழனி மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 10 லட்சம் வருவாய்

    பழனி முருகன் கோவிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு, திருவிழா காலங்கள் மட்டுமின்றி தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள காணிக்கை, கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 27-ந்தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

    இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர்கள் அனிதா (திண்டுக்கல்), மேனகா (திருப்பூர்), பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பணியில் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரத்து 90 வருவாய் கிடைத்தது. இதுதவிர தங்கம் 121 கிராம், வெள்ளி 1 கிலோ 562 கிராம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 12 ஆகியவையும் காணிக்கையாக கிடைத்தன. இதில், தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம் மற்றும் பொருட்களும், பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×