search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட சூசை மிக்கேல்
    X
    கைது செய்யப்பட்ட சூசை மிக்கேல்

    மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற தொழிலாளி கைது- பரபரப்பு வாக்குமூலம்

    படுகாயமடைந்த ஜெனியை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    இரணியல்:

    குமரி மாவட்டம் கீழமுட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான்பால்(வயது35). மீன்பிடி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜான்பாலுக்கும், மேலமணக்குடியை சேர்ந்த சூசை மிக்கேல் என்ற தொழிலாளியின் மனைவி ஜெனி(33) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஜெனியின் கணவருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனால் ஜெனி தனது கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் சூசை மிக்கேல் தனது மனைவியிடம் அதிக கெடுபிடி காட்டினார்.

    இதனால் கள்ளக்காதலன் ஜான் பாலை சந்திக்க முடியாமல் தவித்த ஜெனி, வீட்டைவிட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் சென்று விட்டார். அவர் தனது 2 மகன்கள் மற்றும் மகளை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். கள்ளக்காதலனுடன் மனைவி ஓடிய சம்பவத்தை அறிந்த சூசை மிக்கேல் அதிர்ச்சியடைந்தார்.

    மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜெனி மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் தலக்குளம் உடையார் பள்ளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த தகவல் சூசை மிக்கேலுக்கு தெரியவந்தது. அந்த வீட்டிற்கு சூசை மிக்கேல் நேற்று முன்தினம் (10-ந்தேதி) இரவு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த சூசை மிக்கேல், ஜான்பாலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அவரிடமிருந்து தப்பிக்க ஜான்பால் ஓடினார். ஆனால் அவரை விடாமல் ஓடஓட விரட்டி சூசை மிக்கேல் வெட்டினார். இதில் ஜான்பால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதையடுத்து சூசைமிக்கேல் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார். ஜான் பாலை வெட்டியபோது தடுத்த ஜெனிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜான்பாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயமடைந்த ஜெனியை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான சூசை மிக் கேலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சூசை மிக்கேலை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர், இன்று போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். ஜான் பாலை வெட்டிக்கொன்றதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலைக்கான காரணம் குறித்து சூசை மிக்கேல் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    தனது மனைவி ஜெனி அவரது கள்ளக்காதலனுடன் உடையார் பள்ளத்தில் தங்கியிருந்த தகவலை அறிந்த சூசை மிக்கேல், தனது குழந்தைகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றார். அப்போது ஜெனியும், ஜான்பாலும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர்.

    அதனை பார்த்த சூசை மிக்கேல், இருவருக்கும் அறிவுரை கூறினார். ஆனால் அவர்கள் அதனை கேட்பதாக இல்லை. மேலும் சூசை மிக்கேலை திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி திட்டிக்கொண்டுள்ளனர்.

    அதில் ஆத்திரமடைந்த ஜான்பால் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சூசை மிக்கேலை வெட்ட முயற்சி செய்துள்ளார். அவரிடமிருந்த அரிவாளை பறித்த சூசை மிக்கேல், ஜான்பாலை திருப்பி வெட்டினார். அவரிடமிருந்து தப்பிக்க ஜான் பால் ஓடினார்.

    ஆனால் சூசை மிக்கேல் விடாமல் துரத்திச்சென்று ஓடஓட விரட்டி ஜான்பாலை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். அப்போது அவரை தடுத்த மனைவி ஜெனியையும் வெட்டினார். பின்பு சூசை மிக்கேல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பொதுமக்கள் திரண்டு விட்டதால், அவர்களிடம் சிக்கிவிடாமல் இருப்பதற்காக தனது மோட்டார்சைக்கிளை கூட எடுக்காமல் சூசை மிக்கேல் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் சூசை மிக்கேல் அளித்த வாக்குமூலத்தில் இடம் பெற்றிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


    Next Story
    ×