search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமராவதி அணையில் இருந்து கருப்பு நிறத்தில் வெளியேறும் தண்ணீர்.
    X
    அமராவதி அணையில் இருந்து கருப்பு நிறத்தில் வெளியேறும் தண்ணீர்.

    அமராவதி அணையில் இருந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வெளியேறும் தண்ணீர்

    அமராவதி அணையில் இருந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வெளியேறுவதால் அதை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    தளி:

    உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் பிரதான நீராதாரங்களாக உள்ளன. இந்த ஆறுகளின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில் பருவமழை போதிய அளவு பெய்ததால் அணையின் நீர் இருப்பு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக 85 அடியில் நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து வந்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கிப்போனது. இதையடுத்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது. அதைத் தொடர்ந்து குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் தண்ணீர் திறந்துவிடுமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதன்பேரில் அணையில் இருந்து கடந்த 20-ந் தேதி அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கருப்புநிறத்தில் வெளியேறியதுடன் கடுமையான துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசுவதால் அவற்றை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை வயல் வெளிக்கு கொண்டு சென்று பாய்ச்சும் போது அதன் துர்நாற்றத்தால் விவசாயிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அணைப்பகுதியில் மீன்கள் பிடிப்பதற்கு செல்லும் மீனவர்களும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தண்ணீர் அசுத்தம் அடைந்துள்ளதால் அதில் வளர்கின்ற மீன்களும் உடல்நலத்துக்கு கேடு ஏற்படுத்தக் கூடிய சூழல் நிலவுகிறது. எனவே அதிகாரிகள் அமராவதி அணைபகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆய்வு செய்து அதை முறைப்படி சுத்திகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×