search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி பெண் டாக்டர் பலி

    நாகர்கோவிலில் மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருள் நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி ஸ்டெல்லா ஜெனட் (வயது 49). இவர்கள் இருவரும் டாக்டர்கள்.

    ஸ்டெல்லா ஜெனட், குமரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அதிகாரியாக உள்ளார். இவர், நேற்று மதியம் தனது மொபட்டில் ஆசாரிபள்ளத்தில் இருந்து டெரிக் சந்திப்பு நோக்கி வந்து கொண்டிருந்தார். நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று ஸ்டெல்லா ஜெனட் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி ஸ்டெல்லா ஜெனட் பஸ்சின் முன் சக்கரத்தில் தவறி விழுந்தார். பஸ் சக்கரம் ஏறியதில் இடுப்பு பகுதி சேதமடைந்து ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஸ்டெல்லா ஜெனட் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பலியான டாக்டர் ஸ்டெல்லா ஜெனட்டின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. பெண் டாக்டர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆசாரிபள்ளம் அருகே அனந்தன்நகர் இந்திரா தெருவைச் சேர்ந்தவர் மீனா, (வயது 48). இவர், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 6-ந்தேதி தனது மகன் ராஜகோபாலுடன் கொட்டாரத்திற்கு சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆசாரிபள்ளத்திற்கு திரும்பினார்கள்.

    சுசீந்திரம் ஆசிரமம் அருகே வந்து கொண்டிருந்தபோது மீனா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மீனா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×