search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரபு
    X
    பிரபு

    நாசரேத் பகுதியில் பல்வேறு கடைகளில் திருடிய பிரபல கொள்ளையன் கைது

    பல்வேறு கடைகளிலும் நூதன முறையில் திருடிய நபரிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாசரேத்:

    நாசரேத் நகர கூட்டுறவு வங்கி அருகில் தர்மராஜ் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் கடந்த மாதம் 19-ந்தேதி தலையணை வாங்குவது போன்று சென்ற மர்மநபர், அந்த கடையில் மேஜையில் இருந்த ரூ.9,400-யை நைசாக திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், சாயர்புரத்தை அடுத்த சிவத்தையாபுரம் சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தர் மகன் பிரபு (வயது 30) என்பவர் தர்மராஜின் ஜவுளிக்கடையில் திருடியது தெரிய வந்தது. எனவே பிரபுவை போலீசார் கைது செய்தனர்.

    கைதான பிரபு, முன்பு சென்னை, கோவையில் உள்ள மளிகை கடைகளில் வேலை செய்தபோது அங்கு பணத்தை திருடி உள்ளார். பின்னர் கடந்த 28-12-2020 அன்று நாசரேத் காதி கிராம சங்க கடையில் பொருள் வாங்குவது போன்று நடித்து, அங்கு மேஜையில் இருந்த ரூ.9,200-யை அபேஸ் செய்தார்.

    தொடர்ந்து கடந்த 30-12-2020 அன்று காயல்பட்டினத்தில் உள்ள எழுதுபொருட்கள் கடையிலும் பிரபு பொருள் வாங்குவது போன்று நடித்து, கடையில் இருந்த ரூ.2 லட்சத்தை நைசாக திருடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    பல்வேறு கடைகளிலும் நூதன முறையில் திருடிய பிரபுவிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×