search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    30 சதவீதம் பேர் மட்டுமே முககவசம் அணிகிறார்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    முககவசம் அணிந்திருப்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக குறைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பற்றிய பயம் இல்லாததே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடமாக ஊரடங்கும், அதில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    தற்போதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடருகிறது. ஆனால் கடந்த 3 மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வரத்தொடங்கியது.

    இதன் காரணமாக பொது மக்கள் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் எந்த அளவுக்கு பின்பற்றுகிறார்கள் என்பது தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.நாடு முழுவதும் 238 மாவட்டங்களில் உள்ள 8 ஆயிரம் பேர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    இந்தியா முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்கள் மற்றும் முதல்நிலை நகரங்களில் வசிப்பவர்களில் 51 சதவீதம் பேரிடமும், 2-ம் நிலை நகரங்களில் வசிக்கும் 28 சதவீதம் பேரிடமும், 3, 4-ம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் 21 சதவீதம் பேரிடமும் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வின்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 67 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாக்க முககவசம் அணிந்து இருந்தனர். தற்போது முககவசம் அணிந்திருப்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக குறைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பற்றிய பயம் இல்லாததே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    மேலும் 12 சதவீதம் பேர் மட்டுமே சமூக இடை வெளியை கடைபிடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல் நிலை நகரங்களில் 35 சதவீதம் பேரும், 2-ம் நிலை நகரங்களில் 29 சதவீதம் பேரும், 3-ம் நிலை மற்றும் 4-ம் நிலை நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் 19 சதவீதம் பேருமே முககவசம் அணிந்துள்ளனர்.

    சமூக இடைவெளியை பொறுத்தவரை முதல்நிலை நகரங்களில் 15 சதவீதம் பேரும், 2-ம் நிலை நகரங்களில் 10 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 7.5 சதவீதம் பேர் மட்டுமே பின்பற்றுகிறார்கள்.

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறைந்து இருப்பதாலும், கிராம புறங்களில் கொரோனாவை பற்றிய பயம் இல்லாததாலும் பொதுமக்கள் விதி முறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டுவது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×