search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திரிக்காய்
    X
    கத்திரிக்காய்

    மழையால் விளைச்சல் பாதிப்பு- நெல்லையில் கத்திரிக்காய் கிலோ ரூ.140-க்கு விற்பனை

    நெல்லையில் இன்று காலை மகாராஜநகர் உழவர் சந்தையில் முதல் தரத்திலான கத்திரிக்காய் ரூ.140-க்கு விற்கப்பட்டது. 2-ம் தர கத்திரிக்காய் ரூ.120-க்கு விற்பனையானது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் பெரும்பாலான இடங்களில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறிகள், பயிர் வகைகள், வாழைகள் நீரில் மூழ்கி நாசமாகின.

    இதன் காரணமாகவும், தட்ப வெப்பநிலை மாறுதல் காரணமாகவும் பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச் சத்துக்கள் கிடைக்கவில்லை. இதனால் பூச்சிகள் அதிகளவில் உற்பத்தியாகி காய்கறிகளை நாசமாக்கின.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளைச்சல் குறைவு காரணமாக பொங்கல் வரை ரூ.50-க்கு விற்கப்பட்டு வந்த கத்திரிக்காய் தற்போது ஆலங்குளம் மார்க்கெட்டில் ரூ.110 வரை விற்பனையாகிறது.

    ரூ.20 முதல் 40 வரை விற்கப்பட்டு வந்த வெண்டைக்காய் ரூ.60 வரை விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகளும், பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இது தவிர அவரைக்காய் ரூ.90, சின்ன வெங்காயம் ரூ.60, மிளகாய், பல்லாரி ரூ.40-க்கு விற்பனையாகிறது.

    நெல்லையில் இன்று காலை மகாராஜநகர் உழவர் சந்தையில் முதல் தரத்திலான கத்திரிக்காய் ரூ.140-க்கு விற்கப்பட்டது. 2-ம் தர கத்திரிக்காய் ரூ.120-க்கு விற்பனையானது.

    இது தவிர முருங்கைக்காய் கிலோ ரூ.90-க்கும், சின்ன வெங்காயம் ரூ.74-க்கும், பாகற்காய் ரூ.60-க்கும் விற்பனையானது. பீன்ஸ்-70, சிறுகிழங்கு-55, கொத்த மல்லி-65, புதினா-40, பச்சை மிளகாய்-42, அவரைக் காய்-56 என விற்கப்பட்டது.

    தொடர்ந்து உயர்ந்து வரும் காய்கறிகளின் விலையால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இனி வரும் மாதங்களில் சுபமுகூர்த்த நாள்கள் அதிகம் என்பதால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும்.

    இதனால் நடுத்தர மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். விலை உச்சத்தை தொட்டாலும் பாளை காந்தி மார்க்கெட், டவுன் தற்காலிக மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் கூட்டம் வழக்கம் போல் உள்ளது.

    Next Story
    ×