search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
    X
    மர குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

    திருவள்ளூர் அருகே மர குடோனில் பயங்கர தீ விபத்து

    திருவள்ளூர் அருகே மர குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மரத்தினால் ஆன பலகைகள் உற்பத்தி செய்யப்படும் மர குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தநிலையில் நிறுவனத்தில் ஊழியர்கள் நேற்று வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் 2 மணி அளவில் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறினர்.

    விபத்து தொடர்பாக இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ மளமளவென எரிய தொடங்கியதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிய தொடங்கியது.

    இதனையடுத்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஆவடி, பேரம்பாக்கம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. மேலும் நிறுவனத்தில் பணியில் இருந்த ஊழியர்களுக்கு எந்த ஒரு காயமில்லாமல் வெளியேறி உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

    பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியது தெரியவந்தது. இந்தத் தீ விபத்தானது மின்கசிவு காரணமாக நேரிட்டதா? அல்ல வேறு ஏதேனும் காரணமா? என வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×