search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.
    X
    மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

    வீடுகளை சுற்றி மழைநீர் தேக்கம்- மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

    வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியதால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கே.கே.நகர்:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வீடுகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும், நேரில் சென்று புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்.நகர், காந்தி நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை இருப்பதால் ஏராளமான அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறியதால் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. மேலும் தேங்கிய சாக்கடை கலந்த கழிவு நீர் இங்குள்ள குடிநீர் தொட்டிகளில் கலந்துவிடுகிறது.

    இதனால் இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர். சாலையை சரி செய்யவும் மழைநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு சீரமைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
    Next Story
    ×