search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட பத்மாவதி- ஆறுமுகம்
    X
    கொலையுண்ட பத்மாவதி- ஆறுமுகம்

    சூலூர் அருகே பெண் கொலை- குடிபோதையில் கணவர் வெறிச்செயல்

    சூலூர் அருகே குடிபோதையில் பெண்ணை குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
    சூலூர்:

    சூலூர் அருகே குடிபோதையில் பெண்ணை குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சூலூரை அடுத்த பாப்பம்பட்டி ஊராட்சி ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது47). பழைய பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்யும் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பத்மாவதி என்கிற மனைவி இருந்தார். அவ்வப்போது, பத்மாவதியும் கணவரோடு சேர்ந்துகொண்டு பழைய பாட்டில்களை சேகரிக்க செல்வார் என தெரிகிறது. மேலும் கணவன், மனைவி இருவரும் அப்பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனி வீடுகளில் அருகருகே வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், குடிப்பழக்கம் கொண்ட ஆறுமுகம் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பத்மாவதியை அடித்து சித்திரவதை செய்துள்ளார்.

    இந்த நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு ஆறுமுகம் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஏன் அடிக்கடி குடித்துவிட்டு கையில் பணம் இல்லாமல் வருகிறீர்கள் என பத்மாவதி கணவனை தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆறுமுகம் குடிபோதையில், அருகில் இருந்த மது பாட்டிலை உடைத்து பத்மாவதியை குத்தினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பத்மாவதி அய்யோ, அம்மா என்று ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பத்மாவதியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் பத்மாவதி பரிதாபமாக இறந்து போனார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே சூலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சூலூர் போலீசார் இறந்து கிடந்த பத்மாவதியின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் பத்மாவதி இறந்து கிடந்த இடத்தில் ரத்த கரையோடு உடைந்து கிடந்த பாட்டிலையும் போலீசார் கைப்பற்றினர்.

    போலீசாார் நடத்திய விசாரணையில் கணவன், மனைவி இடையே நடந்த சண்டையில் பிராந்தி பாட்டிலை உடைத்து பத்மாவதியின் கழுத்தில் ஆறுமுகம் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தினர்.

    கொலை நடந்த வீட்டில் மதுபாட்டில்கள் அதிகளவில் குவியலாக ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. மேலும் ஒரு தட்டு நிறைய சாப்பாடும், அருகே கோழி குழம்பும் சாப்பிடாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. எனவே கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் விரக்தியில் சாப்பிடாமல் படுத்துக்கொண்டதும் தெரியவந்தது. குடிபோதையில் மனைவியை குத்திக்கொன்ற கணவனின் வெறிச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×