
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் கோவில்பத்து தெருவை சேர்ந்தவர் ருக்மணி (வயது65). இவருடைய கணவர் இறந்துவிட்டார். 2 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ருக்மணி தனியாக கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 11 மணி அளவில் ருக்மணி வீட்டின் பின்பகுதியில் உள்ள குளியல் அறைக்கு சென்றார்.
அப்போது குளியல் அறைக்கு செல்லும் மின் ஒயரில் மின்கசிவு இருந்ததாக தெரிகிறது. அந்த மின் ஒயர் எதிர்பாராதவிதமாக ருக்மணி மீது பட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் ருக்மணியை காணாததால் சந்தேகம் அடைந்த எதிர் வீட்டை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவர் அவரை பார்க்க வீட்டுக்கு சென்றபோது அவர் வீட்டின் பின் பகுதியில் விழுந்து கிடந்ததை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், அவரை காப்பாற்றுவதற்காக தூக்கி உள்ளார்.
அப்போது விக்னேஷ் மீதும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் காயம் அடைந்த விக்னேஷ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நன்னிலம் போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரசாத் கண்ணா தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ருக்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.