search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    25, 26-ந் தேதிகளில் புதிய புயலுக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் இன்று முதல் மழை சற்று குறையலாம் என்றும், 25, 26-ந் தேதிகளில் புதிய புயலுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

    சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்தது. திங்கட்கிழமை காலையில் பெய்யத் தொடங்கிய மழை நேற்று காலை வரை பெய்தது. நேற்று இரவிலும் லேசான மழை பெய்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மழை சற்று குறையலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலசந்திரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. மேலும் 15 இடங்களில் நேற்று காலை வரை கனமழை பெய்தது.

    இன்று தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் ஒன்று அல்லது 2 இடங்களில் அதிக மழை பெய்யும்.

    இன்று முதல் மழை படிப்படியாக குறையும், தென் கிழக்கு அரோப்பிய கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நாளை (19-ந் தேதி) தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இது தமிழக கடற்கரையில் இருந்து தொலைவில் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

    அரபிக்கடல் மீது மோசமான வானிலை நிலவுவதால் கேரளா கடற்கரை, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களில் பெய்த பலத்த மழை, வடகிழக்கு பருவமழையின் பற்றாக்குறையை குறைக்க உதவியது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய மொத்த மழைக்கு இன்னும் 30 சதவீதம் பற்றாக்குறை உள்ளது.

    அக்டோபர் 1-ந் தேதி முதல் இதுவரை 29.2 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 20.5 செ.மீ. மழையே பெய்துள்ளது.

    சென்னையில் நாளை வரை ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக மழை இருக்கும். வெப்பச்சலனம் காரணமாக அரபிக் கடலோர பகுதிகளான கேரளா, தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கனமழை பொழியும்.

    தமிழகத்தில் 19-ந் தேதி வரை மழை இருக்கும். அதன்பிறகு படிப்படியாக மழை குறையும், நெல்லையில் பாபநாசம் தொடங்கி மாஞ்சோலை வரையிலான பகுதிகளிலும், கொடைக்கானல், குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் மிக கனமழை பெய்யலாம்.

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வருகிற 25, 26-ந் தேதியில் அதிக மழை பெய்யலாம். அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது. அந்த புயல் எங்கு உருவாகும் என்பதையும் எங்கு கரையை கடக்கும் என்பதையும் அறிய சில நாட்கள் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×