search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் (கோப்புப்படம்)
    X
    தங்கம் (கோப்புப்படம்)

    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்திய 1½ கிலோ தங்கம் பறிமுதல்

    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.83 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 620 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.83 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 620 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
    கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிப்பவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி துபாயில் சிக்கி தவித்தவர்களை அழைத்துகொண்டு சென்னைக்கு சிறப்பு விமானம் வந்தது.

    அதில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த மீராசா மரைக்காயர் (வயது 43), சகுபர் அலி(39), புதுக்கோட்டையை சேர்ந்த ஹபீப் அப்துல்லா (21) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அதில் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

    இதையடுத்து 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 3 பேரும் தங்கள் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.83 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 620 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×