search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    மாவட்ட அளவிலான ‘பேக்கேஜ்’ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு மாவட்ட அளவிலான ‘பேக்கேஜ்’ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

     வழங்கும் திட்டத்திற்கு மாவட்ட அளவிலான ‘பேக்கேஜ்’ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “ரூ.2374.74 கோடி மதிப்புள்ள ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின்கீழ் தமிழக ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் ‘வீட்டுக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம்’ குறித்த மாவட்ட அளவிலான ‘பேக்கேஜ்’ டெண்டரை, முறைகேடுகள் செய்வதற்காகப் பாதுகாத்திட; ஊராட்சி மன்றத் தலைவர்களை அ.தி.மு.க. அரசு மிரட்டுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த ஜே.ஜே.எம். திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் 497 ஊராட்சிகளில், 148 ஊராட்சிகளுக்கு விடப்பட்ட ‘பேக்கேஜ்’ டெண்டரை எதிர்த்தும், ஊராட்சி மன்றங்களுக்கே நிதியையும், ஜே.ஜே.எம். பணிகளையும் நேரடியாக ஒதுக்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் சங்கங்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்காக, “ஜே.ஜே.எம். குடிநீர்த் திட்டம் குறித்த கிராமச் செயல்திட்டம் மற்றும் தீர்மானங்களை ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் உடனடியாக முன்தேதியிட்டுப் பெற வேண்டும்” என்று மிரட்டல் விடுத்து, மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு எல்லாம் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியொருவரே அனுப்பியுள்ள ஆடியோ எச்சரிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

    அந்த ஆடியோ உத்தரவில் முன்தேதி எப்படிப் பெறப்படவேண்டும் என்பதை விளக்கியுள்ள அதிகாரி, “புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு பேக்கேஜ் டெண்டர் விட்ட தேதிகளுக்கு (29-6-2020 மற்றும் 10-7-2020) முன்பான ஒரு தேதியில் அந்தத் தீர்மானங்களிலும், கிராம செயல் திட்டங்களிலும் கையெழுத்துப் பெற வேண்டும்” என்றும்; “அது 10-7-2020-ம் தேதியாக இருக்கலாம்” என்றும் தனது ஆடியோ உத்தரவில் அந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி எச்சரிக்கிறார் என்றால், ஜே.ஜே.எம். ஊழல்களிலும், முறைகேடுகளிலும் அதிகாரிகள் தங்களை எந்த அளவிற்கு ஈடுபடுத்திக் கொண்டு அமைச்சரின் ஊழலில் கூட்டணி அமைத்துச் செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறது.

    “நாங்கள் கிராம செயல்திட்டமும், தீர்மானங்களும் ஊராட்சி மன்றங்களிடம் வாங்கிய பிறகுதான் டெண்டர் விட்டுள்ளோம் என்று ஐகோர்ட்டில் தெரிவித்து விட்டோம். ஆகவே டெண்டர் விடப்பட்ட தேதிகளுக்கு முன் ஒரு தேதியில் தீர்மானத்தையும், ஜல் ஜீவன் மிஷன் குடிநீர்த் திட்டம் குறித்த கிராம செயல்திட்டத்தையும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கையெழுத்திட வேண்டும்” என்று, பி.டி.ஓ.க்களுக்கு உத்தரவிட்டிருப்பது, ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ள வழக்கிலேயே அ.தி.மு.க. அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது.

    இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ஊராட்சித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளர், அமைச்சர் ஆகியோர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களை எப்படி அவமதிக்கிறார்கள் ஜே.ஜே.எம். திட்ட ஊழலில் தங்களின் பதவிக்குரிய கடமை, கண்ணியம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஊழலுக்காக எப்படியெல்லாம் அரசு நிர்வாக நெறிமுறைகளை வளைக்கிறார்கள், முன்தேதியிட்டுத் தீர்மானங்களை மிரட்டிப் பெற முயற்சிக்கிறார்கள் என்பதற்கு இந்த ஆடியோ எச்சரிக்கை ஆதாரமாக இருக்கிறது.

    ஆகவே இப்போதும்கூட காலம் கழிந்து விடவில்லை. ஜே.ஜே.எம். குடிநீர்த் திட்டப் பணிகளுக்கான நிதிகளை நேரடியாக உள்ளாட்சி மன்றங்களுக்கே அளித்து மாவட்ட அளவில் விடப்பட்டுள்ள ‘பேக்கேஜ்’ டெண்டர் முறையை உடனே ரத்து செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×