search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சின்னாளபட்டி அருகே அரை நிர்வாணத்துடன் கிடந்த மராட்டிய மாநில இளம்பெண்

    சின்னாளபட்டி அருகே அரை நிர்வாணத்துடன் மராட்டிய மாநில இளம்பெண் கிடந்தார். அவரை கடத்தி வந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சின்னாளபட்டி:

    திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளபட்டியை அடுத்த முருகன்பட்டியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் அருகே உள்ள தோட்டத்தில் அரை நிர்வாணத்துடன் வடமாநிலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் முகத்தில் காயங்களுடன் கிடந்தார். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் பாதி மயக்க நிலையில் வட மாநில மொழியில் அழுது கொண்டே பேசினார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணுக்கு வேறு ஆடைகள் அணிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் மயங்கி கிடந்த இடத்தில் பெண்ணின் ஆடைகள் மற்றும் மதுபாட்டில் ஒன்று கிடந்தது. இதைத்தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து அந்த பெண்ணின் ஆடைகள், மது பாட்டிலில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனிடையே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் மராட்டிய மொழியில் பேசினார். இதையடுத்து மராட்டிய மொழி தெரிந்த ஒரு பெண்ணை அழைத்து வந்து அந்த இளம்பெண்ணுடன் பேச வைத்தனர். அப்போது அவர், தனது பெயர் சுஷ்மா என்றும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த 2 நாட்களுக்கு முன் இப்பகுதிக்கு வந்ததாகவும், மது அருந்தியதாகவும் கூறினார். மேலும் முதல் நாள் இரவு தனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை என்றும், எனக்கு எதுவும் ஆகாது, என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது எனவும் கண்ணீர் மல்க கூறி விட்டு மயங்கி விட்டார். முகம், உதடு, நாக்கு பகுதிகளில் காயம் உள்ளதால் தொடர்ந்து அந்த பெண்ணால் பேச முடியவில்லை.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, அந்த பெண் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். அந்த பெண் இதுவரை பேசியது எல்லாம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? என தெரியவில்லை. அந்த பெண்ணை மராட்டிய மாநிலத்தில் இருந்து மர்மநபர்கள் கடத்தி வந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தார்களா? எப்படி அந்த பெண் இங்கு வந்தார்? என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர். எனவே அந்த பெண் சுய நினைவுக்கு வந்த பின்னர்தான் முழு விவரம் தெரியவரும் என்றனர். இந்த சம்பவம் சின்னாளபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×