search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மராஜ்
    X
    தர்மராஜ்

    சிக்னல் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பலி

    திருச்சி மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பலியானார்.
    திருச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவருடைய மகன் தர்மராஜ் (வயது 27). இவர் உறையூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கையொட்டி கல்லூரி மூடப்பட்டுள்ளதால் தர்மராஜ் சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.

    இந்தநிலையில் 3-ம் வருட தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் அவர் கள்ளக்குறிச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்து கொண்டு இருந்தார். இரவு 8.45 மணி அளவில் திருச்சி மன்னார்புரத்தில் காஜாமலை நோக்கி திரும்பும் வளைவில் ஆட்டோ நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென நிலைதடுமாறி அவரது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.

    இதில் தர்மராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரது காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வர தொடங்கியது. இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் ஓடி வந்து உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×