search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி விபத்து"

    • விபத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருச்சி:

    சென்னையிலிருந்து கம்பம் நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 34 பயணிகள் இருந்தனர். பஸ்சை கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)அதிகாலை 5.40 மணியளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது விபத்தில் சிக்கியது.

    முன்னால் தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த சந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 60) பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பேரன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர்.

    இந்த விபத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் இறந்த சந்திரன் மற்றும் பழனியம்மாள் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 12 பயணிகளை ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்த இடத்தில் உதவி போலீஸ் கமிஷனர் ஜெயசீலன் விசாரணை நடத்தினர். பின்னர் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான ஆம்னி பஸ் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    அதிக பாரம் காரணமாக லாரி மெதுவாக சென்ற நிலையில் அதிவேகமாக வந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர்.
    • சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குபேந்திரன்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வடக்கு அயித்தாம்பட்டியில் இருந்து நான்காவது மைலுக்கு சென்றார்.

    முசிறி, துறையூர் சாலையில் நான்காவது மைல் அருகே சீனிவாசன் என்பவரது வீடு அருகே வந்தபோது துறையூரில் இருந்து குளித்தலை ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் (56) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி விரைந்து சென்று சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் கணவர் இறந்த தகவல் அறிந்து சிலம்பரசனின் மனைவி கலா (27) கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    வீட்டுக்கு சென்ற பின்னர் துக்கம் தாளாமல் கதறி அழுதுகொண்டே இருந்தார். திடீரென்று அவர் ஓடி சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர். பின்பு கலாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வடக்கு அயித்தாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்பாராதவிதமாக 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 58). இவர் திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் இவர் மேலரசூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்தார்.

    இவர் நேற்று முன்தினம் மேலரசூரில் இருந்து திருச்சிக்கு வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் கல்லக்குடி நோக்கி வந்தார். அப்போது லால்குடி ஒன்றியம் நெய்குப்பை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த ஜெயகுமார்(53), அவரது மகன் ஜெயநித்தீஸ் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தங்களது குலதெய்வம் பூமிபாலன் கோவிலுக்கு சாமி கும்பிட கல்லக்குடி தாண்டி மால்வாய் நோக்கி சென்றுள்ளனர்.

    எதிர்பாராதவிதமாக 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மொபட்டில் வந்த அர்ச்சுணன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவல் அறிந்த அர்ச்சுணன் மனைவி தமிழரசி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அர்ச்சுணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்ததனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தமிழரசி கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து அர்ச்சுணனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • பெற்றோரை பார்த்துவிட்டு மகாராஜன் காரில் அரியலூர் நோக்கி புறப்பட்டு வந்துகொண்டிருந்தார்.
    • நள்ளிரவில் கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தது.

    திருச்சி:

    நெல்லை மாவட்டம் குட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபணிக்கர் மார்த்தாண்டம் என்பவரது மகன் மகாராஜன் (வயது 40). இவர் அரியலூரில் மளிகைக்கடை மற்றும் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் மகாராஜன் குட்டத்தில் உள்ள தனது பெற்றோரை பார்த்து வருவதற்காக காரில் சென்றிருந்தார். காரை அரியலூரை சேர்ந்த டிரைவர் செல்வகணேஷ் (35) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    பெற்றோரை பார்த்துவிட்டு மகாராஜன் அதே காரில் அரியலூர் நோக்கி புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். நள்ளிரவில் அந்த கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த லாரி, அந்த கார் மீது மோதியது. இதில் கார் பலமுறை உருண்டு கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காருக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மகாராஜன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். டிரைவர் செல்வகணேஷ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மகாராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது.
    • விபத்து நடந்து பெண் பக்தர் இறந்து கிடந்தும் போலீசார் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மணப்பாறை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

    இதில் ஒரு குழுவினர் இன்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த ஆசாத் ரோடு அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது. இதில் கும்பகோணம் துக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த உமாராணி (வயது 60) தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் மாதேஸ்வரி (65), சிவகாமி (55), மூக்காயி (65) உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்து பெண் பக்தர் இறந்து கிடந்தும் போலீசார் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் ஆத்திரம் அடைந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆலையின் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தைக்கு பின் பக்தர்கள் மறியலை கைவிட்டனர்.

    பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து மற்றும் சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள காளவாய்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் சாரதி (வயது 15). திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளிக்கு விடுமுறை நாளாகும்.

    இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் சாரதியின் அண்ணன் சுபாஸ் (29), அவரது நண்பர் சரத் (27) ஆகியோருடன் சாரதி ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திருவெள்ளறையில் இருந்து மண்ணச்சநல்லூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு புறப்பட்டனர். அவர்கள் மண்ணச்சநல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    சாரதி இருசக்கர வாகனத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். அவரது அண்ணன் சுபாஸ் வாகனத்தை ஓட்டினார். திருவெள்ளறை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது.

    இதில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். அடுத்த விநாடி அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சாரதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இன்று காலை நடந்த இந்த விபத்து பலியான சாரதியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விபத்து பற்றிய தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வையம்பட்டி போலீசார் காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • வழியிலேயே தியாகராஜனின் மைத்துனர் மகன் புகழேந்தியும் இறந்தான். குழந்தை அனுஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 41). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் மகள் அனுஸ்ரீ (3) மற்றும் வையம்பட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் மைத்துனர் மகேஷ் என்பவரது மகன் புகழேந்தி (2) ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது மொபட்டில் இன்று காலை அழைத்து சென்றார். அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உள்ள பிரிவு சாலையில் திரும்புவதற்காக தேசிய நெடுச்சாலையில் சென்ற அவர் தனது மொபட்டை நிறுத்தினார். அப்போது கொடைக்கானலில் இருந்து சென்னை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற சொகுசு கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மொபட்டில் அமர்ந்திருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் தியாகராஜன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். குழந்தைகளான அனுஸ்ரீ, புகழேந்தி ஆகிய இருவரும் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

    விபத்து பற்றிய தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வையம்பட்டி போலீசார் காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே தியாகராஜனின் மைத்துனர் மகன் புகழேந்தியும் இறந்தான். குழந்தை அனுஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் விபத்தை ஏற்படுத்தியதாக சொகுசு கார் டிரைவரான சென்னை அடையாறு காந்திநகர் பகுதியை சேர்ந்த இக்னேஷியஸ் விவேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×